ஐகோர்ட் போட்ட திடீர் உத்தரவு! முக்குக்கு முக்கு நின்னு பிடிக்க போறாங்க! கலக்கத்தில் வாகன உரிமையாளர்கள்!
இந்தியாவில் வாகனங்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்வது சட்ட விரோதம் ஆகும். ஆனால் இந்த விதிமுறையை பொருட்படுத்தாமல் பலர் வாகனங்களை தொடர்ந்து மாடிஃபிகேஷன் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். சாலையில் பயணம் செய்பவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதால்தான், வாகனங்களில் மாடிஃபிகேஷன்களை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்களை கூசும் ஆஃப்டர் மார்கெட் லைட்கள், திடீர் பதற்றத்தை உருவாக்கும் ஆஃப்டர் மார்கெட் ஹாரன்கள் மற்றும் ஒலி மாசுபாட்டை உருவாக்கும் ஆஃப்டர் மார்கெட் சைலென்சர்கள் போன்றவை தற்போது பெரும் பிரச்னையாக மாறி வருகின்றன. இவை எல்லாம் பிரபலமாகி கொண்டிருப்பதற்கு ஒரு வகையில் யூடியூப் சேனல்களும் (YouTube Channels) ஒரு காரணமாக இருக்கின்றன.

யூடியூபர்கள் பலர், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கின்றனர். இந்த வீடியோக்களை (Videos) பார்க்கும் பலருக்கும், தங்கள் வாகனங்களையும் மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் டியூபர்கள் மீது தற்போது வரை பெரிதாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை.
எனினும் இனி இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா ஐகோர்ட் (Kerala High Court) பிறப்பித்துள்ள ஒரு அதிரடியான உத்தரவுதான் இதற்கு காரணம். கேரள மாநிலம் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மிகவும் பிரபலமானது. அங்கு வசிக்கும் மக்கள், வாகன மாடிஃபிகேஷன்களை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே காவல் துறை அதிகாரிகளும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் வாகனங்களில் மாடிஃபிகேஷன்களை செய்வது பெரிதாக குறைந்தபாடில்லை. இதற்கு ஒரு வகையில் யூடியூபர்களும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. எனவே கேரள ஐகோர்ட் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் மற்றும் பிரபலமாக்கும் யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு கேரள ஐகோர் உத்தரவிட்டுள்ளது. யூடியூபர்கள் மட்டுமல்லாது, மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருக்கும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அரசு வாகனங்களில் மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர். நீதிபதி அனில் கே நரேந்திரன் மற்றும் நீதிபதி அஜீத்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச்தான் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் என்பதால், வாகனங்களில் மாடிஃபிகேஷன்கள் செய்வது மிகப்பெரிய குற்றம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே வாகனங்களில் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு மாடிஃபிகேஷனுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள தண்டனைகளுடன், இது கூடுதல் தண்டனையாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகனங்களில் மாடிஃபிகேஷன் செய்வது ஒரு கலைதான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த மாடிஃபிகேஷன்கள், மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாற கூடாது. எனவே வாகனங்களில் மாடிஃபிகேஷன்களை செய்வதை தவிர்த்து விடுங்கள். உங்கள் வாகனத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தால், அதை அகற்றி விட்டு, வாகனம் வாங்கும்போது எப்படி இருந்ததோ, அப்படி மாற்றி கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








