தண்ணீரில் குதித்த விமானம்.. சாதாரணமாவே கேரளாவுக்கு ஓடு-ஓடுனு ஓடுவோம் இதுல இது வேறையா!
கேரளா சுற்றுலாத் துறை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக கடல் விமானம் (SeaPlane)-ஐ அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 17 பேர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இதுவே மாநிலத்தின் முதல் வர்த்தக ரீதியாக இயங்கக் கூடிய கடல் விமானம் ஆகும். அதாவது, தண்ணீரில் தரையிறங்கி, தண்ணீரின் வாயிலாகவே டேக் ஆஃப் ஆகக் கூடிய ஓர் விமானமே இது ஆகும். இத்தகைய விமானத்தையே கேரளா தற்போது மாநிலத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.
ஏற்கனவே மூணாறு இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருக்கின்றது. இதற்கு தென்னகத்து காஷ்மீர் என்கிற ஓர் செல்ல பெயரும் உண்டு. இந்த நிலையிலேயே இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக தண்ணீரின் மேல் இயங்கும் திறன் கொண்ட விமானத்தை கேரளா அரசாங்கம் களமிறக்கி இருக்கின்றது.

இந்த விமானம் வானில் மட்டுமல்ல நீரிலும் நீண்ட தூரம் இயங்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே வான் வாயிலாக மட்டும் அல்ல தண்ணீர் வாயிலாகவும் இந்த விமானத்தில் பயணித்து மூணாறின் முக்கிய சுற்றுலா தளங்களைக் கண்டுகளிக்க முடியும். கொச்சி மற்றும் மூணாறு மாட்டுப்பட்டி அணை இடையிலேயே இந்த கடல் விமானம் இயக்கப்பட இருக்கின்றது.
இந்த நிலையிலேயே சோதனையோட்டமாக மேற்கொள்ளப்பட்ட தண்ணீரில் தரையிறக்கம் செய்யும் பணி வெற்றிகரமாக அரங்கேறி இருக்கின்றது. இதன் படங்களே தற்போது வெளியாகி இருக்கின்றன. இதுவே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, மூணாறின் இயற்கை எழில் கொஞ்சும் இயற்கையை அதிகம் நேசிக்கும் சுற்றுலா விரும்பிகளை இந்த தகவல் கவரும் விதமாக அமைந்துள்ளது.

இந்த கடல் விமானத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பிராந்திய இணைப்பு திட்டம் - உடான்-இன்கீழே தொடங்கப்பட்டு இருக்கின்றது. இந்த விமான சேவை சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு சில முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையிலும் செய்யப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த விமானத்தில் 9 முதல் 30 பேர் வரை அமர முடியும் என தெரிகின்றது.
மேலும், இந்த விமான சேவைக்காக மிதக்கும் பிளாட்பாரங்கள் தற்போது தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. இங்கு வைத்தே பயணிகள் ஏற - இறங்க செய்யப்படும். இப்போது இந்த சேவைக்கான கட்டணம் மானிய திட்டத்தின்கீழ் நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் இந்த சேவையை நுகர வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
இந்த விமானச் சேவையைச் சுவிட்சர்லாந்தைச் தேர்ந்த தனியார் நிறுவனம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகிய இருவரும் இணைந்தே இயக்க இருக்கின்றனர். சமீபத்திலேயே இவர்கள் இந்த சேவையை ஆந்திராவில் தொடங்கினர். பின்னர் கர்நாடகாவிலும் தொடங்கப்பட்டது. தற்போது கேரளாவிலும் தொடங்கி இருக்கின்றது. இதேபோல், மற்றுமொரு நகரத்திலும் இந்த சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வாட்டர் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. இது படகு போக்குவரத்து சேவை ஆகும். இந்த சேவையைத் தொடர்ந்தே தற்போது சுற்றுலாபயணிகளை ஈர்க்கும் பொருட்டு கடல் விமான சேவை மாநிலத்தில் தொடங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு சுற்றுலாவாசிகள் மற்றும் கேரளா மக்களிடையே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடல் விமானம் பயன்பாட்டிற்கு வந்திருப்பதைப் போலவே விரைவில் பறக்கும் கால் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை சமீப காலமாக வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் உறுதி செய்துக் கொண்டிருக்கின்றன. சென்னை, பெங்களூரு என பல முக்கிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படுவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








