சூப்பர்! பெட்ரோல் பங்க்குகளில் வேலைக்கு சேர்க்கப்படும் ஊழியர்கள் யார்னு தெரியுமா? கலக்கும் கேரள அரசு
கேரள அரசும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சந்தர்ப்ப சூழல்களில் தவறு செய்து விட்டு சிறையில் வாடும் கைதிகளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இதன் மூலமாக சிறை தண்டனையை அனுபவித்தபடியே கைதிகள் வருமானம் ஈட்டுகின்றனர். இந்த வரிசையில் கேரள மாநிலத்தில் தற்போது அருமையான முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation) நிறுவனமும், கேரள அரசும் இணைந்து, சிறை வளாகங்களில், எரிபொருள் நிலையங்களை திறந்துள்ளன. இந்த எரிபொருள் நிலையங்களில், கைதிகள் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறுகையில், ''ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் சிறை கைதிகள் 15 பேர் பணியமர்த்தப்படுவார்கள். திருவனந்தபுரம், விய்யூர் மற்றும் சீமெனி சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்கள் இன்று முதல் (ஜூலை 31ம் தேதி) செயல்பட தொடங்கியுள்ளன.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறை கைதிகள் தப்பித்து செல்ல முயற்சி செய்வார்கள் என பலர் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் சிறை கைதிகளுடன் பணியாற்றிய எனது அனுபவம் நல்ல விதமாக உள்ளது. கேரள மாநிலத்தில் அவர்கள் 5 சிற்றுண்டி சாலைகளை நடத்தி வருகின்றனர். அவர்களால் தயார் செய்யப்பட்ட உணவை விற்பனை செய்து வருகின்றனர்.

நாங்கள் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 220 ரூபாயை சம்பளமாக வழங்கி வருகிறோம். அவர்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், அவர்கள் வெற்றிகரமாக செயல்படுவது பாராட்டுதலுக்குரியது'' என்றார். சிறை கைதிகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

சிறை வளாகங்களில், நான்கு எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சுமார் 9.5 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. தற்போது மூன்று எரிபொருள் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4வது எரிபொருள் நிலையம் கண்ணூர் சிறையில் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைப்பதில் சிறைத்துறையின் பங்கு சுமார் 30 லட்ச ரூபாய் ஆகும். இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் மேலும் கூறுகையில், ''இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சிறை கைதிகள்தான் இந்த எரிபொருள் நிலையங்களில் வேலை செய்யவுள்ளனர்.

எனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எரிபொருள் நிலையங்களில் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால், சிறை கைதிகளுக்கு சீருடையும் வழங்கப்படவுள்ளது என்றார். எரிபொருள் நிலையம் அமைப்பதற்காக திருவனந்தபுரம், விய்யூர் மற்றும் சீமெனி சிறைச்சாலைகளில் தலா 25 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கண்ணூர் சிறைச்சாலையில் 39 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு மாதத்திற்கு 5.9 லட்ச ரூபாய் வாடகையாக கிடைக்கும். சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








