60 கார்களை வாங்கி குவித்த ஆஸ்திரேலிய முதியவர்! ஏன் தெரியுமா? மனுஷன் தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளீட்டாரு!
இந்தியாவில் விளையாட்டு வீரர்களும், தொழில் அதிபர்களும், திரைத்துறையினரும் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதை நாம் பார்த்து வருகிறோம். இதில், பெரும்பாலானோர் தங்கள் அந்தஸ்தை இந்த உலகிற்கு எடுத்து காட்டுவதற்காகவே கார்களை வாங்கி குவித்து வருகின்றனர் என்பது கண் கூடு.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் 85 வயதான நபர் ஒருவர், கார்கள் மீது கொண்ட பேரார்வத்தால், 60க்கும் மேற்பட்ட கார்களை வாங்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது உண்மைதான். கேரள மாநிலத்தை சேர்ந்த இந்த கார் ஆர்வலர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

நாம் இங்கே பேசி கொண்டுள்ள கார் ஆர்வலரின் பெயர் நாராயணன் பிள்ளை. 85 வயதாகும் இவர், கேரள மாநிலம் மாவேலிக்கரா பகுதியை சேர்ந்தவர். இவர் வக்கீலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆஸ்திரேலிய நாட்டின் குடியுரிமையும் நாராயணன் பிள்ளைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
போதுமான அளவிற்கு வருமானம் ஈட்டுவதை உறுதி செய்ய தொடங்கிய உடனேயே, நாராயணன் பிள்ளை கார்களை வாங்க தொடங்கி விட்டார். ஆடி ஃபாக்ஸ் (Audi Fox) கார்தான், நாராயணன் பிள்ளை வாங்கிய முதல் கார் ஆகும். இது ஆடி 80 (Audi 80) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரை நாராயணன் பிள்ளை ஆஸ்திரேலியாவில் வாங்கினார். பொதுவாக நாராயணன் பிள்ளை புதிதாக வாங்கும் கார்களை அப்படியே வைத்து கொள்வதில்லை. புதிய காரை வாங்கிய பின், 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு பயன்படுத்திய பிறகு, நாராயணன் பிள்ளை விற்று விடுவார். அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்வார்.
அதற்கு பிறகு வேறு ஒரு காரை வாங்கி கொள்வார். நாராயணன் பிள்ளைக்கு சாதாரண கார்களுடன், சொகுசு கார்கள் மீதும் ஆர்வம் அதிகம். சொகுசு கார்களில் கிடைக்கும் வசதிகளும், சௌகரியமும்தான் இதற்கு முக்கியமான காரணம். இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் சொகுசு கார்களை விற்பனை செய்தாலும் கூட, பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம்தான் நாராயணன் பிள்ளைக்கு மிகவும் பிடித்தது ஆகும்.
நாராயணன் பிள்ளை சமீபத்தில் வாங்கியிருப்பது கூட பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் (BMW 2 Series) கார் ஆகும். 60 கார்களை வாங்கியிருந்தாலும் கூட, நாராயணன் பிள்ளை அவற்றை ஓட்டுவதற்கு டிரைவரை நியமிக்கவில்லை. கார் ஓட்ட அவருக்கு ஆர்வம் அதிகம் என்பதுதான் இதற்கு காரணம்.
காரை எடுத்து கொண்டு, அடிக்கடி அவர் லாங்-டிரைவ் கிளம்பி விடுவாராம். தமிழ்நாட்டு பக்கம் வருவதை கூட அவர் வழக்கமாக வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், கிட்டத்தட்ட அந்த நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் தனது காரில் பயணம் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அவர் சுமார் 43 ஆண்டுகளை செலவழித்துள்ளார் என்பது இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கிடையே தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களை விட, கேரளாவில் சாலைகளின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக நாராயணன் பிள்ளை வருத்தப்படுகிறார். இந்த கார் ஆர்வலரின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசு சாலைகளை தரமாக அமைப்பதில் அதிக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாழ்க்கையில் 60க்கும் மேற்பட்ட கார்களை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல. இதற்காக நாராயணன் பிள்ளை நிச்சயமாக பெரும் தொகையை செலவு செய்திருப்பார். கார்கள் மீதான நாராயணன் பிள்ளையின் ஆர்வம் எங்களை உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்துகிறது.


Click it and Unblock the Notifications








