சொந்த செலவில் விமானம்... உலகை திரும்பி பார்க்க வைத்த கேரள நபர்!! எவ்ளோ செலவாகியதுனு மட்டும் கேட்காதீங்க!
கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்ப பயன்பாட்டிற்காக நான்கு பேர் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானம் ஒன்றை கொரோனா காலக்கட்டத்தில் உருவாக்கி அசத்தியுள்ளார். யார் அவர்? எவ்வாறு இதனை சாத்தியப்படுத்தினார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவல் காலக்கட்டம், நிச்சயம் எவரொருவராலும் தனது வாழ்வில் மறக்க முடியாதது. பலருக்கு இந்த காலக்கட்டம் பல இன்னல்களை கொடுத்தாலும், சிலருக்கு புதிய உத்வேகத்தையும், புதிய யோசனைகளையும் கொடுத்துள்ளது.

குறிப்பாக, புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டு வந்தவர்களுக்கு கொரோனா ஊரடங்கினால் கிடைத்த விடுமுறை நாட்கள் நன்கு பயனுள்ளதாக அமைந்தது. இந்த வகையில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக சொந்த முயற்சியில் சிறிய அளவிலான விமானம் ஒன்றை உருவாக்கி பிரமிக்க வைத்துள்ளார்.

இலண்டனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த பொறியியலாளர் அசோக் அலிசெரில் தமரக்சன், வயது 38. கேரள முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி.தமரக்சனின் மகனான இவர் கடந்த 2006இல் இருந்து தனது மனைவி அபிலாஷா உடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு விமானங்களில் பயணம் செய்வது என்பது கடந்த சில வருடங்களாகவே அலாதி பிரியமாக இருந்து வந்துள்ளது.

அது பின்னர் காலத்தில் தானே விமானம் ஒன்றை இயக்க வேண்டும் என்கிற ஆசையாக மாறியுள்ளது. இதுபற்றி அசோக் கூறுகையில், "2018இல் விமானிக்கான உரிமத்தை வாங்கினேன். அதன் பிறகு 2 இருக்கைகள் கொண்ட சிறிய அளவிலான விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் சென்று வந்தேன். ஆனால் அதன்பின் எனது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானது.

ஆதலால் இரு இருக்கை விமானங்களை பயன்படுத்த முடியவில்லை. எனது பயணத்தில் குடும்பத்தினரும் உடன் வருவதற்கு எனக்கு 4 இருக்கைகளை கொண்ட விமானம் தேவைப்பட்டது. ஆனால் அதுபோன்ற விமானங்கள் கிடைப்பது அரிதானது என்பதை உணர்ந்தேன். இதனாலேயே புதிய 4-இருக்கை விமானத்தை நாமே உருவாக்கலாமே என்கிற முடிவுக்கு வந்தேன்.

அதனை தொடர்ந்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸ்லிங் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் 2018இல் ஸ்லிங் டி.எஸ்.ஐ என்கிற பெயரிலான விமானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அது எனது தேவைக்கு ஏற்றாற்போல் இருந்தது. இதனால், அதன் உற்பத்தி தொழிற்சாலைக்கு நேரில் சென்று அதன் உற்பத்தி முறைகளை பார்வையிட்டேன்.

அதன் மூலம் எனக்கு சில பல ஐடியாக்கள் கிடைத்தன. அதன்பின்பு, சொந்தமாக விமானம் உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களை வாங்கினேன். கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, புதிய விமானத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் கிடைத்தது" என்றார். ஆனால் அசோக் அலிசெரில் தென்னாப்பிரிக்கா நிறுவனம் அறிமுகப்படுத்திய 4-இருக்கை ஸ்லிங் டி.எஸ்.ஐ விமானத்தையே வாங்கி இருக்கலாம்.

ஆனால் ஏன் அவர் அதை வாங்காமல், புதியதாக ஒரு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை தனக்கு பிடித்தாற்போன்று சில அம்சங்கள் அந்த விமானத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். அசோக்கின் மனைவி அபிலாஷா கூறும்போது, "எங்களுக்கு சொந்த விமானம் எப்போதும் தேவைப்பட்டது.
அதனை கருத்தில்கொண்டு, முதல் ஊரடங்கின்போது பணம் சேமிக்க துவங்கினோம். முதல் சில மாதங்களிலேயே அதிக பணத்தை சேமிக்க முடிந்தது. அதனை தொடர்ந்து, அவற்றை தங்களது திட்டங்களில் செலவு செய்ய முடிவு செய்தோம்" என தெரிவித்துள்ளார். இந்த விமானத்தை தயாரிக்க ரூ.1.8 கோடி வரையில் அசோக்கின் குடும்பத்திற்கு செலவாகியுள்ளது.

விமானம் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட பின், முதல் வேலையாக தனது இளைய மகளின் பெயரான தியா-வை சேர்ந்து, 'ஜி-தியா' என விமானத்திற்கு அசோக் பெயர் சூட்டியுள்ளார். இந்த விமானத்தின் முதல் பயணம் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானத்தில் முறையான அனுமதியை பெற்றால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பயணிப்பதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறும் அசோக் அலிசெரில் தமரக்சன் தற்சமயம் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு வருகை தந்துள்ளார்.


Click it and Unblock the Notifications








