‘மின்னல் முரளி’ உடன் சாலை பாதுகாப்பில் இறங்கிய கேரள போலீஸார்!! பல இடங்களில் பேனர்கள் தெறிக்குது!
சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்ற மின்னல் முரளி படத்தினை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், பசில் ஜோசப் இயக்கி இருந்த இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மின்னல் முரளி கதாபாத்திரத்திற்கு எதிர்பாராத விதமாக மின்னல் மூலம் சூப்பர் ஆற்றல் கிடைப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும்.

வழக்கமான ஹாலிவுட் கதை தான் என்றாலும், கதைகளம் இந்தியாவில் நடப்பது போன்று காட்டப்பட்டுள்ளதால் பலத்தரப்பட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மின்னல் முரளி படத்தின் புகழை, கேரள மோட்டார் வாகன துறை மக்களுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்த வகையில் மின்னல் முரளி பட போஸ்டருடன் கேரள மாநிலத்தில் ஆங்காங்கே சாலை விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், சாலையில் எந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பது மின்னல் முரளி கதாபாத்திரத்தின் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு கேரள போலீஸார் அறிவுறுத்தியுளனர்.

இது தொடர்பான போஸ்டர்களில், ‘உண்மையான ஹீரோக்கள் மெதுவாக செல்லுங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளன. இதுகுறித்த வீடியோ மோலிவுட் ஹப் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் டோவினோ தாமஸ் மின்னல் முரளி கதாபாத்திரத்தின் உடையில் சாலை விழிப்புணர்வு வாசகங்களை கூறும் அந்த வீடியோவினை கீழே காணலாம்.
மேலும் இந்த வீடியோவில் கேரள மோட்டார் வாகன துறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். போஸ்டர்களில் டோவினோ தாமஸின் கைகளில் வேகமானி ஒன்றை கொடுத்து, அதில் சாலையில் அதிகப்பட்சமாக செல்ல வேண்டிய வேகத்தை குறிப்பிட்டுள்ளனர். சாலையில் வாகனத்தின் வேகத்தை போலீஸார் தங்களது ரோந்து காரில் இருந்தவாறே தகுந்த அளவீட்டு கருவிகளின் மூலம் மதிப்பிடுகின்றனர்.

அதிவேகம், தினந்தோறும் போக்குவரத்து போலீஸாருக்கு தலைவலியாக விளங்கி வருகிறது. பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு அதிவேகம் தான் முக்கிய காரணமாக விளங்குவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளை இடையில் மறுத்து போலீஸார் அபராதம் விதிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இ-செல்லான் முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதாவது வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக செல்லும் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத செல்லான் மெயில் மூலமாக போலீஸார் தரப்பில் இருந்து அனுப்பப்படுகிறது. இருப்பினும் இத்தகைய விதிமீறல்களை குறைப்பது என்பது தற்சமயம் முடியாத காரியாக உள்ளதால், இவ்வாறு பிரபலமான விஷயங்களின் வாயிலாக சாலை விழிப்புணர்வு குறித்த அவசியத்தை மக்களிடம் போலீஸார் கொண்டு செல்கின்றனர்.

மேலுள்ள வீடியோவில் டோவினோ தாமஸ், "உங்கள் பெயர் என்ன? நிச்சயமாக மின்னல் முரளி கிடையாது தானே? உன்னிடம் சூப்பர் ஹீரோ சீருடை கூட இருக்கிறதா? பிறகு ஏன் மின்னல் வேகத்தில் ஓட்டுகிறீர்கள்? உலகிற்கு ஒரு ‘மின்னல்' மட்டுமே தேவை. இதை மீண்டும் செய்யாதே." என கூறியுள்ளார். இந்த வீடியோவில் கூட சில பைக் மற்றும் கார் ஓட்டிகளுக்கு அதிவேகத்திற்காக போலீஸார் அபராதம் விதிப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இத்துடன், ‘உண்மையான ஹீரோக்கள் மெதுவாக செல்லுங்கள்' என்ற வாக்கியம் பிரிண்டட் செய்யப்பட்ட டி-சட்டைகளையும் சில சமூக ஆர்வலர்களுக்கு கேரள மோட்டார் வாகன துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றே ஒன்றிற்குதான்... பொது சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக. ஏனெனில் அதிவேகமே பலருக்கு எமனாக அமைவதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.

இந்தியா, சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறக்கூடிய நாடுகளுள் ஒன்றாக உள்ளது. இதுவரையில் வெளியாகியுள்ள சாலை விபத்துகள் குறித்த புள்ளி விபரங்களும் இதை தான் தெரிவிக்கின்றன. நம் நாட்டில் சாலையில் வாகனங்கள் மட்டும் செல்வதில்லை, மனிதர்களும், சில நேரங்கள் நாய், பூனை போன்ற விலங்குகளும் தான் செல்கின்றன. அதிவேகத்தில் செல்லும்போது இவற்றின் குறிக்கீட்டிற்கு ஏற்ப செயல்பட முடியாது என்பதே போலீஸாரின் கருத்தாகும்.


Click it and Unblock the Notifications








