பின்னால் அமர்ந்திருப்பவருடன் பேசி கொண்டே பைக்கை ஓட்ட கூடாது.. இப்படியும் ஒரு விதியா!
நாட்டில் வாகனங்களால் அரங்கேறும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவேதான் இதை குறைப்பதற்கான முயற்சிகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, விபத்துக்கு வழிவகுக்கக் கூடிய அனைத்துக் காரணங்களையும் தேடிப்பிடித்துக் அவற்றை களையெடுக்கும் பணிகளை இந்த அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையிலே கேரளா அரசாங்கம் ஓர் புதிய மற்றும் விநோத விதியை மாநிலத்தில் அமல்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுடன் பேசிக் கொண்டே பயணிப்பதால் விபத்து அரங்கேறும் சூழல் ஏற்படுவதாகக் கூறி இந்த செயலுக்கு அது தடை விதித்து இருக்கின்றது.
அதாவது, பைக்கில் பயணிக்கும்போது ரைடரும், பின்னால் அமர்ந்துக் கொண்டிருப்பவரும் பேசாக் கூடாது என்கிற புதிய விதியே மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக செய்தி நாளிதழ் ஒன்றின் படமும் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

பேசிக் கொண்டே பயணிப்பதால் டிரைவரின் கவனத்தில் சிதறல் ஏற்படுவதாகவும், இதன் விளைவாக பல்வேறு விபத்துகள் அரங்கேறி இருப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டே இந்த விதி அமலப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும், இதை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க மாநில எம்விடி-க்கு பரிந்துரையும் செய்யபட்டு இருக்கின்றது.
ஆனால், இந்த விதியை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எம்விடிக்கு அபராதம் விதிப்பதுகுறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டாலும், விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதற்கான தெளிவான வழி முறை வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது. அதாவது, அபராதத்தை எந்த பிரிவின்கீழ் விதிக்க வேண்டும் என்கிற வழிகாட்டுதல்களே வழங்கப்படவில்லை.

வாகன ஓட்டிகள் பேசிக் கொண்டு பயணிப்பதனால் மட்டுமே கவன சிதறல்கள் ஏற்படுவதில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சாலையோர விளம்பர பலகைகள், கடைகள், வண்ண மயமான விளக்குகள் உள்ளிட்டவற்றாலும் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல்கள் ஏற்படுகின்றன. இந்த புதிய விதி பயணிகளை பாதுகாக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டாலும் அந்த விதிக்கு பலர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, வாகன ஓட்டிகள் இந்த விதிமீறலில் ஈடுபட்டார்கள் என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமானது ஒன்றாக இருக்கும். மேலும், இந்த குற்றத்தை வாகன ஓட்டிகள் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆகையால், இந்த புதிய விதியால் மாநிலத்தில் சலசலப்பான சூழலே தற்போது ஏற்பட்டு இருக்கின்றது.
கேரளா எம்விடி போக்குவரத்து சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதற்கு பெயர் பெற்றது. விதிகளை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை கேரளா எம்விடி எடுத்து வருகின்றது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டும் அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் டாடா சஃபாரி காரின் பின் பக்கத்தில் மினி நீச்சல் குளத்தை உருவாக்கியவர் மீது கடும் நடவடிக்கையை கேரளா எம்விடி எடுத்தது. காரை பறிமுதல் செய்ததோடு, அந்த காரின் உரிமையாளருக்கு மிகப் பெரிய அபராதத்தை வழங்கியது. இதுபோன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எம்விடி துறையினர் மாநிலத்தில் எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே பின்னால் அமர்ந்து வரும் பயணியிடம் பேசும் டூ-வீலர் ஓட்டி மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான பணியில் கேரளா எம்விடி தற்போது களமிறங்கி இருக்கின்றது. இந்த நடவடிக்கையால் என்ன மாதிரியான சலசலப்பு மாநிலத்தில் ஏற்படும் என்பதே பலரின் அச்சமாக தற்போது மாறி இருக்கின்றது. அதேவேளையில், பலர் இதை மறுபரிசீலனை செய்யவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, விதிமீறல்களை களையெடுக்கும் பொருட்டு மாநிலத்தின் முக்கிய சாலைகளில் கண்கானிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கேமிராக்களின் காட்சியின் அடிப்படையில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








