சர்க்கரை பொங்கலுக்கு வடகறி காமினேஷன் மாதிரில இருக்கு! போலீசாருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரா?
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனப் பிரிவில் பல புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம், கடந்த வருடத்தில் ரிஸ்டா (Rizta) என்கிற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, நாடு முழுவதும் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி இருக்கும் ஏத்தர் நிறுவனம் ரிஸ்டாவுக்கு முன்பு வரையில் '450' என்கிற பவர்ஃபுல்லான & சற்று விலைமிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது. ஆனால், ரிஸ்டா முற்றிலும் புதுமையான மற்றும் பல தரப்பட்ட மக்களால் வாங்கக்கூடிய விலையில் ஃபேமலி ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வகையில் தற்போது, கேரள காவல்துறை தங்கள் ரோந்துப் பணிகளுக்காக 16 புதிய ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பெற்றுள்ளது. இது தொடர்பான விபரங்கள் 'டவர்மாஃபியா' (towermafia) என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. இது தொடர்பான படங்களில், கேரளாவின் கொச்சியில் ஒரு ஏத்தர் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) வெளியே சில காவல்துறையினர் கூடியிருந்ததையும், டெலிவிரிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிஸ்டா ஸ்கூட்டர்களையும் பார்க்க முடிகிறது.
காவல்துறையினர் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்காக ஆர்வமாக உள்ளனர். கேரள காவல்துறை மின்சார வாகனங்களில் ஆர்வம் காட்டுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, கேரள மோட்டார் வாகனத் துறை பல டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலக்ட்ரிக் கார்களை ரோந்துப் பணிகளுக்காக வாங்கியிருந்தது.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தும் மாநில அரசாங்கங்களில் கேரளாவும் ஒன்று ஆகும். நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்களைப் போலவே, தற்போது வாங்கப்பட்டுள்ள ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர்களும் கேரள அரசின் 'பாதுகாப்பான சாலைகள் மற்றும் பசுமை காவல்' (Safe Roads and Green Policing) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளூர் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகளால் ரோந்துப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததோடு, காவல்துறை அதிகாரிகளுக்கு எரிபொருள் செலவையும் வெகுவாகக் குறைக்கும். அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ ஜீப்களை எல்லா இடங்களுக்கும் பயன்படுத்த வேண்டியதில்லை.

மேலும், இந்த ஸ்கூட்டர்களின் இயக்க செலவுகள் வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட குறைவு ஆகும். கேரள காவல்துறை வாங்கியுள்ள அனைத்து ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 'டீப் ப்ளூ' (Deep Blue) நிறத்தில் உள்ளன. இவற்றின் முன்பக்க கண்ணாடியில் போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளதை காணலாம்.
ஏற்கனவே கூறியதுபோல், ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர் கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ரிஸ்டா ஸ்கூட்டர்களை ஒரே வருடத்திற்குள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்து உள்ளது.

இது ஒரு குடும்ப ஸ்கூட்டர் என்பதால், இருக்கைக்கு அடியில் போதுமான இட வசதியையும், நல்ல ரேஞ்சையும் கொண்டுள்ளது. ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.75,999இல் தொடங்கி, ரூ.1.56 லட்சம் வரை உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 4.3kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 123 கி.மீ முதல் 159 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, போலீசார் பவர்ஃபுல்லான பைக்குகளை பயன்படுத்துவதை தான் பார்த்திருக்கும். ஸ்கூட்டர்களை, அதுவும் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்துவது என்பது முற்றிலும் புதுமையானதாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், ஏத்தர் ரிஸ்டா மட்டுமின்றி, கேரள காவல்துறையினர் டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா பொலிரோ இன்வேடர், மாருதி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா 3-கதவு எஸ்யூவிகள் போன்ற பல வாகனங்களையும் இடுக்கி போன்ற பகுதிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications









