போலி முகவரி கொடுத்து சொகுசு கார் பதிவு: நடிகை அமலாபால் மீது பிடி இறுகுகிறது
போலி முகவரியில் சொகுசு கார் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், நடிகை அமலாபாலுக்கு நெருக்கடி முற்றி இருக்கிறது.
போலி முகவரி கொடுத்து சொகுசு கார் பதிவு செய்த விவகாரத்தில் நடிகை அமலாபாலுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை அமலாபால் புத்தம் புதிய மெர்சிடிஸ் பெனஸ் எஸ் க்ளாஸ் சொகுசு காரை வாங்கினார். கேரளாவை சேர்ந்த நடிகை அமலாபால் அந்த சொகுசு காரை சென்னையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூமில் முன்பதிவு செய்து டெலிவிரி பெற்றார்.

இதையடுத்து, அந்த சொகுசு காரை புதுச்சேரியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தார். ரூ.1.30 கோடி மதிப்புடைய அந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரை கேரளாவில் உள்ள தனது வீட்டில் வைத்து பயன்படுத்தி வருகிறார்.
Recommended Video


இந்த நிலையில், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட அந்த கார் குறித்து கேரளாவிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது. புதுச்சேரியில் பதிவு செய்ததால், கேரள அரசுக்கு ரூ.20 லட்சம் வரி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், புதுச்சேரியில் அந்த சொகுசு கார் போலி முகவரியில் பதிவு செய்யப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது புதுச்சேரி அரசியலிலும் புயலை கிளப்பியது. புதுச்சேரி அரசு இந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று மழுப்பினாலும், இது குறித்த விசாரணை நடத்த அம்மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளை சட்டை செய்யாமல், தனது சமூக வலைதள பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார். மேலும், சரியாக வருமான வரி கட்டி வருவதாகவும் தெரிவித்த அவர், புதுச்சேரியில் போலி முகவரியில் கார் பதிவு செய்யப்பட்டிருந்த புகார் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கொச்சி போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் முறைகேடி நடந்திருந்க முகாந்திரம் இருப்பதாக கருதி, நடிகை அமலாபாலுக்கு கேரளபோக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

வரும் 10ந் தேதிக்குள் சொகுசு காரின் உண்மையான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கேரள போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. ஆவணங்கள் போலி என்பது தெரிய வந்தால், கேரளாவில் அந்த காரை பதிவு செய்து, அதற்குரிய வரி உள்பட கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, புதுச்சேரி மாநில அரசியலிலும் நடிகை அமலாபால் சொகுசு கார் பதிவு செய்யப்பட்ட முகவரி குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலி முகவரி கொடுத்திருப்பது தெரிந்தால், அங்கும் அவர் மீது நடவடிக்கை பாயலாம்.

கேரளா மற்றும் புதுச்சேரி என இரண்டு மாநிலங்களிலும் சொகுசு கார் பதிவு குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால், இரண்டு பக்கத்திலிருந்தும் நடிகை அமலாபாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








