நடத்துனர்-இல்லா பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கும் முடிவில் கேரள மோட்டார் வாகன துறை!! பயணிகள் மகிழ்ச்சி
கேரளாவில் நடத்துனர் இல்லா பேருந்து சேவைக்கு மோட்டார் வாகனங்கள் துறையில் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வாங்க அதை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் சமீபத்தில் நடத்துனர் இன்றி இயக்கப்பட்ட பேருந்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை உங்களில் சிலர் கூட பார்த்திருப்பீர்கள். நம்மை போல் அந்த வீடியோவை கண்ட சம்மந்தப்பட்ட மோட்டார் வாகன துறை அதிகாரிகள், இது விதிமுறைகளை மீறுவதாக கூறி அந்த பேருந்து சேவைக்கு தடை விதித்தனர்.

இந்த நிலையில் தற்போது நல்ல செய்தியாக, நிறுத்தப்பட்ட அந்த நடத்துனர்-இன்றி பேருந்து சேவைக்கு கேரள மோட்டார் வாகனங்கள் துறை மீண்டும் அனுமதியளிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் ஆரம்பக்கால கட்டத்தில் இருந்தே நடத்துனர் உடனே பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சில வெளிநாடுகளை போல் நடத்துனர் இல்லாமல் பேருந்து சேவையை வழங்கலாம் என சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது கூறிக்கொண்டுதான் வருகின்றனர்.

ஆனால் அது நம் நாட்டில் நடைமுறைக்கு எந்த அளவிற்கு சரிப்பட்டுவரும் என்பது தெரியாததால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் தற்போது நாம் 2022ஆம் ஆண்டில் உள்ளோம். பண பரிவர்த்தனைகள் மெல்ல மெல்ல டிஜிட்டலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆதலால் நடத்துனர்-இல்லாத பேருந்து சேவைகளுக்கு கிட்டத்தட்ட நாம் தயாராகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் ஒரு முன்முயற்சியாகவே பாலக்காட்டில் இந்த முன்மாதிரி பேருந்து சேவைக்கு அதிகாரிகள் அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த பேருந்து சேவைக்கு மறுப்பு தெரிவித்திருந்த மோட்டார் வாகன துறை, கேரள மோட்டார் வாகன சட்டம் 219இன் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் பயணச்சீட்டை வழங்கவும், பயணிகளிடம் இருந்து கட்டணத்தை பெற்றுக்கொள்ளவும் நடத்துனர் இருக்க வேண்டும் எனவும், நடத்துனர் இன்றி பேருந்து சேவையை வழங்குவது முடியாத காரியம் எனவும் தெரிவித்திருந்தது.

பாலக்காட்டில் இந்த நடத்துனர் இல்லா பேருந்து சேவையை வழங்குவது ஓர் தனியார் குழுமம் ஆகும். இந்த குழுமத்தின் உரிமையாளர் தாமஸ் கடன்காவில் இதுகுறித்து பேசுகையில், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த பேருந்து சேவை மீண்டும் துவங்கப்படும் எனவும் தெரிவித்தார். தாமஸ் கடன்காவிலின் இந்த தனியார் பேருந்து சேவையின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது கேரளாவின் முதல் சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) பேருந்து ஆகும்.
பாலக்காடு மாவட்டத்தில் வடக்கன்சேரி - அலதூர் பகுதிகளுக்கு இடையே 10 கிமீ தொலைவிற்கு இந்த நடத்துனர்-இல்லா பேருந்து சேவை செயல்பாட்டில் இருந்துவந்தது. இந்த இரு பகுதிகளுக்கு இடையில் நெல்லியம்படம், தென்னிலாபுரம் மற்றும் எராட்டாகுளம் போன்ற கிராமங்கள் உள்ளன. தாமஸ் கடன்காவிலின் இந்த பேருந்து சேவை ஆனது கடந்த ஏப்ரல் மாத இறுதியில் துவங்கப்பட்டது.

நடத்துனர் இல்லாததால் பயணிகள் தங்களது பயண கட்டணத்தை பேருந்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகம் ஒன்றில் போட்டுவிட்டு பயணம் செய்தனர். மேலும், ஆன்லைன் பண பரிவர்த்தனைக்காக இதே பெட்டகத்தில் க்யூ.ஆர் கோட் ஒட்டப்பட்டிருந்தது. போதிய பணம் வைத்தில்லாதவர்கள் தங்களது கட்டணத்தை அடுத்த நாள் கூட வந்து செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. எல்லாம் நம்பிக்கை தானே...

இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பேருந்து ஓட்டுனரோ அல்லது உரிமையாளரோ அல்லது வேறு யாரோ பயணிகளிடம் இவ்வளவு பணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்துவது இல்லையாம். பேருந்தில் ஏறும் பயணிகளே தாமாக முன்வந்து பெட்டியில் பணத்தை போட்டுவிட்டு பயணம் செய்துவந்ததை அறிந்த பின்னரே மோட்டார் வாகன துறை அதிகாரிகள் இந்த பேருந்து சேவைக்கு அனுமதியளிக்க மனம் முன்வந்துள்ளனர்.

முழுக்க முழுக்க பயணிகளின் நம்பிக்கையை சார்ந்த இந்த சேவையில், ஓட்டுனர் இல்லாதது உண்மையில் பேருந்து உரிமையாளருக்கு மாதத்தோறும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க உதவும். அதுமட்டுமின்றி இந்த குறிப்பிட்ட பேருந்து இயற்கை எரிவாயுவில் இயங்குகிறது. சிஎன்ஜி-ஆல் இயங்கும் பேருந்துகளில் எரிபொருள் செலவு குறைவாகவே ஏற்படும் என்பது நமக்கு தெரிந்ததே.


Click it and Unblock the Notifications








