நெகிழ்ச்சி! 13 ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்ட மாருதி 800 காரை கண்டுபிடித்து தந்தைக்கு பரிசளித்த மகன்
13 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்ட மாருதி 800 காரை மகன் தேடி கண்டுபிடித்து தனது தந்தைக்கு பரிசளித்துள்ளார். இதுகுறித்த நெகிழ்ச்சியான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சிலர் தங்களின் வாகனங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். அதுவும் அது அவர்களின் முதல் வாகனம் என்றால், அதன் மீது அவர்களுக்கு நிச்சயமாக தனி பாசம் இருக்கும். இந்த வரிசையில் மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது தந்தை விற்பனை செய்து விட்ட அவரது முதல் காரை மகன் தேடி கண்டுபிடித்து, அவரது பிறந்த நாளில் அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். மனதை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நடந்துள்ளது. அப்துல் நாசர் என்பவர் தன்னிடம் இருந்த மாருதி 800 காரை, கடந்த 2007ம் ஆண்டு விற்பனை செய்து விட்டார். இது அவரது முதல் கார் ஆகும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அந்த கார் அவரிடம் இருந்தபோது, அதன் மீது அவர் வைத்திருந்த பாசத்தை அவரே உணரவில்லை. ஆனால் கார் அவரது கையை விட்டு சென்ற பின்புதான், அந்த கார் தனது மனதுக்கு எவ்வளவு நெருக்கமானது? என்பதை அப்துல் நாசர் உணர்ந்துள்ளார். இதுகுறித்து தனது மகன் நியாஸ் அகமதுவிடம், அப்துல் நாசர் கூறியுள்ளார்.

எனவே தனது தந்தையின் முதல் காரை தேடும் பணிகளை நியாஸ் அகமது உடனடியாக தொடங்கினார். கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் தற்போது வாகன மேற்பார்வையாளராக வேலை செய்து வரும் அப்துல் நாசர், இந்த 1985 மாடல் மாருதி 800 காரை, தனது முதல் காராக, கடந்த 1992ம் ஆண்டு வாங்கினார்.

அதன்பின் அந்த கார் அவர்களது குடும்பத்துடன் சுமார் 15 ஆண்டுகள் இருந்தது. அப்துல் நாசரை போலவே, அவரது மகன் நியாஸ் அகமதுவிற்கும் இந்த காருடன் பல்வேறு சுகமான நினைவுகள் உள்ளன. நியாஸ் அகமது கார் ஓட்டி பழகியதே இந்த மாருதி 800 மாடலில்தான். ஆனால் கடந்த 2007ம் ஆண்டு, இந்த மாருதி 800 காரை விற்பனை செய்து விட்டு, புதிய கார் ஒன்றை வாங்க அப்துல் நாசரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்த முடிவின்படி கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவருக்கு 42,000 ரூபாய்க்கு கார் விற்பனை செய்யப்பட்டது. கார் விற்பனை செய்யப்பட்ட சில மாதங்களிலேயே தனது முடிவை நினைத்து அப்துல் நாசர் வருந்த தொடங்கினார். அப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில், 3 ஆண்டுகள் கழித்து, தனது முதல் கார் தனக்கு மீண்டும் வேண்டும் என அப்துல் நாசர் நினைத்தார்.

இதன்பேரில் தனது தந்தை வைத்திருந்த மாருதி 800 கார் தற்போது யாரிடம் உள்ளது? என்பதை கண்டுபிடிக்கும் வேலையை நியாஸ் அகமது செய்ய தொடங்கினார். ஆனால் அந்த சமயத்தில் மாருதி 800 கார் பல முறை விற்பனை செய்யப்பட்டிருந்தது. பல கைகள் மாறி விட்டதால், மாருதி 800 காரின் அப்போதைய உரிமையாளரை நியாஸ் அகமதுவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனினும் கோட்டயத்தில் வசிக்கும் ஒருவரிடம் தனது தந்தையின் முதல் மாருதி 800 கார் இருப்பது கடந்த 2012ம் ஆண்டு தெரியவந்தது. ஆனால் அவரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை கண்டறிய முடியவில்லை. எனவே அப்துல் நாசர் நம்பிக்கையை இழந்தார். தனது முதல் காரை யாரேனும் ஸ்கிராப் செய்திருக்கலாம் என அவர் மனம் யோசிக்க தொடங்கியது.

ஆனால் நியாஸ் அகமது மனம் தளரவில்லை. காரை தேடும் பணியை தொடர்ச்சியாக செய்து கொண்டே இருந்தார். இதற்கு கடந்த 2019ம் ஆண்டு பலன் கிடைத்தது. திருவனந்தபுரத்தை சேர்ந்த புதிய உரிமையாளர் ஒருவரிடம் தனது தந்தையின் முதல் மாருதி 800 கார் இருக்கும் தகவல் அப்போது நியாஸ் அகமதுவிற்கு தெரியவந்தது.

அவரது பெயர் உமேஸ். உடனடியாக உமேஸை தனிப்பட்ட முறையில் சென்று நியாஸ் அகமது சந்தித்தார். அப்போது இந்த மாருதி 800 காரை வாங்க திட்டமிட்டிருப்பதாக நியாஸ் அகமது தெரிவித்தார். ஆனால் உமேஸோ, காரை விற்பனை செய்வது பற்றி எந்தவிதமான எண்ணமும் இல்லை என கூறி விட்டார். எனினும் மனம் தளராத நியாஸ் அகமது, உமேசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.இந்த கார் தனக்கும், தன் தந்தைக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் எடுத்துரைத்தார். இறுதியாக மாருதி 800 காரை விற்பனை செய்வதற்கு உமேஷ் ஒப்புக்கொண்டார். 1 லட்ச ரூபாய்க்கு காரை விற்பனை செய்வது என கடந்த மாதம் முடிவானது. இந்த ஒப்பந்தப்படி காரை வாங்கிய நியாஸ் அகமது, தனது 54வது பிறந்த நாளை கொண்டாடிய அவரது தந்தைக்கு பரிசாக வழங்கி, அவரை நெகிழ வைத்தார்.
இதுகுறித்து மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது. 42,000 ரூபாய்க்கு காரை விற்பனை செய்து விட்டு, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, 1 லட்ச ரூபாய்க்கு அதனை மீண்டும் வாங்கிய நிகழ்வு, அந்த காரை அப்துல் நாசர் எவ்வளவு நேசிக்கிறார்? என்பதையும், இடைப்பட்ட ஆண்டுகளில் அந்த காரை இழந்து அவர் எவ்வளவு வருந்தியிருப்பார்? என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








