பஸ்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையில் அதிரடி திட்டம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கேரள அரசு!
பேருந்துகள் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலையில், கேரள மாநில அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொதுவாக பேருந்துகளுக்கு வயதாகி விட்டால், அவை 'ஸ்கிராப்' செய்யப்பட்டு விடும். பல வருடங்கள் பயன்படுத்தி பிறகு, மேற்கொண்டு இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது பேருந்துகளை 'ஸ்கிராப்' செய்வதை போக்குவரத்து கழகங்களும் வழக்கமாக கொண்டுள்ளன. இந்த சூழலில், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திடம் தற்போது (Kerala State Road Transport Corporation) நிறைய பேருந்துகள் 'ஸ்கிராப்' செய்யும் நிலையில் உள்ளன. கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் ஒரு சில பேருந்துகள் தற்போது லாபம் ஈட்டி தருவதில்லை. அவை நஷ்டத்தை ஏற்படுத்துவதால், அவற்றை 'ஸ்கிராப்' செய்வதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நஷ்டம் ஏற்படுத்தும் பேருந்துகளை 'ஸ்கிராப்' செய்ய போவதில்லை என தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அந்த பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜூ இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பிரச்னை பெரிதாக ஏற்பட்டபோது, பல்வேறு மாநிலங்களிலும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. கேரள மாநில சாலை போக்குவரத்து கழகமும், போக்குவரத்து சேவைகளை நிறுத்தியது. நீண்ட நாட்களாக நிறுத்தியே வைத்திருந்த காரணத்தால், தற்போது பல்வேறு பேருந்துகளில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

மீண்டும் சாலையில் ஓட்டுவதற்கு உகந்த நிலையில் அவை இல்லை. எனவே இந்த பேருந்துகளை 'ஸ்கிராப்' செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் 'ஸ்கிராப்' செய்வதற்கு பதிலாக, வேறு ஏதாவது நல்ல பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் வந்ததாக போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜூ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கேரள மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, இந்த பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த கோரிக்கைக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜூ கூறுகையில், எங்களுக்கு வந்த கோரிக்கையை ஏற்று, பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற முடிவு செய்துள்ளோம். குழந்தைகளுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்'' என்றார். ஆம், கான்கிரீட் கட்டிடங்களில் உட்கார்ந்து படிப்பதை காட்டிலும், பேருந்துகளில் அமர்ந்து படிப்பது குழந்தைகளுக்கு நிச்சயம் புதிய அனுபவமாகதான் இருக்கும்.

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் முதலில் இந்த திட்டம் நிஜமாக உள்ளது. அங்குள்ள அரசு பள்ளிக்கு 2 பேருந்துகள் வழங்கப்படவுள்ளன. அவை வகுப்பறைகளாக மாற்றப்படும். தற்போதைய நிலையில் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திடம் ஏராளமான பேருந்துகள் 'ஸ்கிராப்' செய்யும் நிலைமையில் உள்ளன.

சுமார் 400 பேருந்துகள் இந்த நிலைமையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் எத்தனை பேருந்துகள் வகுப்பறைகளாக மாற்றப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. எத்தனை பேருந்துகள் வகுப்பறைகளாக மாற்றப்படவுள்ளது? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

கேரள மாநிலம் முன்மாதிரியான திட்டங்களுக்கு பெயர் பெற்றது. இந்த வகையில் தற்போது பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்றும் திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளது. முன்னதாக கேரள மாநிலத்தில் பேருந்துகள் நடமாடும் உணவகங்களாக மாற்றப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் தங்கும் விடுதிகளாகவும் கூட மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் தற்போது வகுப்பறைகளாக புது வடிவம் பெறவுள்ளன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, நான்கு சுவர்களில் அடைந்து படிப்பதை காட்டிலும், பேருந்துகளில் அமர்ந்து படிப்பது, மாணவ, மாணவிகளுக்கு புதுமையான மற்றும் உற்சாகமான அனுபவத்தை வழங்க கூடியதாக இருக்கலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications