தாத்தா பட்ட கஷ்டத்தை பார்த்து பேரன் உருவாக்கிய சூப்பர் வாகனம்... இது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
தாத்தா சந்தித்த சிரமங்களை பார்த்து பேரன் உருவாக்கிய வாகனத்திற்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வீடுகளுக்கு உள்ளே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் காரணமாக, இந்த ஊரடங்கு கால கட்டம் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ஒரு சிலர் இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

அதாவது புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு கிடைத்த நேரமாக அவர்கள் இந்த ஊரடங்கு கால கட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். பழைய வாகனங்களின் பயன்படாத பாகங்களை கொண்டு புதிய பைக், சைக்கிள் போன்ற வாகனங்களை உருவாக்கிய மாணவர்கள் குறித்த செய்திகள் சமீப காலமாக அதிகம் வெளியாகி வருவதே அதற்கு சாட்சி.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கோயிலாண்டி பகுதியை சேர்ந்த மாணவன் அத்வைத் இதற்கு ஒரு உதாரணம். புதிய இயந்திரங்களை உருவாக்குவதில் இவருக்கு ஆர்வம் அதிகம். இயந்திரங்கள் பற்றிய அறிவை வளர்த்து கொள்ளவும், விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஒரு புதிய வாகனத்தை உருவாக்கவும், ஊரடங்கு கால கட்டத்தில் கிடைத்த நேரம் அவருக்கு உதவியுள்ளது.

பழைய பைக் ஒன்றை பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த பல்வேறு பணிகளுக்கு பயன்படக்கூடிய வாகனம் ஒன்றை அத்வைத் உருவாக்கியுள்ளார். புற்களை வெட்டுவதற்கும், விவசாய நிலத்தை உழுவதற்கும் இந்த வாகனம் பயன்படும். அத்துடன் விதைகளை விதைக்கவும், அவற்றுக்கு தண்ணீர் பாய்ச்சவும் இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும்.

அத்வைத் இந்த வாகனத்தை இயக்கும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது பரவி, அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்து கொண்டுள்ளது. அத்வைத்தின் தாத்தா விவசாயி ஆவார். அவர் நிலத்தை உழுவதற்கும், விதைகளை விதைப்பதற்கும் சந்தித்த சிரமங்களை பார்த்ததால், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு பயன்படும் ஒரு வாகனத்தை உருவாக்கும் ஆசை அத்வைத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக அத்வைத் கூறுகையில், ''வேலையை முழுவதுமாக முடித்து அதனை சோதனை செய்வதற்கு எனக்கு சுமார் 6 மாதங்கள் ஆனது. இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 80 சதவீதத்திற்கும் மேலான பாகங்கள், வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட பழைய பொருட்கள்தான். இதில், ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் இன்ஜினும் அடக்கம்.

எனது மாமாவுடைய பழைய பைக்கில் இருந்து இதனை நான் எடுத்தேன். இந்த பைக் பெட்ரோலில் இயங்கும். ஆனால் மற்ற அனைத்து வசதிகளும் சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கும்'' என்றார். இந்த வாகனத்தில் தண்ணீர் தொட்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக புதிதாக விதைக்கப்பட்ட விதைகளுக்கு தண்ணீர் தெளிக்கலாம்.

அத்துடன் இந்த வாகனத்தை புற்களுக்கு இடையே ஓட்டி சென்று, அவற்றை வெட்ட முடியும். புற்களை அறுக்க இந்த வாகனத்தில் 'கட்டர்' இணைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் கிடைத்த நேரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு, விவசாயம் சார்ந்த பல்வேறு பணிகளுக்கு பயன்படும் வாகனத்தை உருவாக்கிய அத்வைத் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








