அதிரடி முடிவை எடுத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்... 2022க்குள் செய்து முடிக்க இலக்கு...!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இதனை வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் நிறைவு செய்யவும் அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்தியா ஓர் வாகனங்களுக்கான திறந்தவெளி சந்தை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதில், அதிகபட்ச வாகனங்களை கொள்முதல் செய்யும் முன்னணி மாநிலங்களில் கேரளா முக்கிய இடத்தில் இருக்கின்றது. அந்தவகையில், கேரளாவில் தற்போது எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்நிலையில், வருகின்ற 2022ம் ஆண்டிற்குள், மாநிலத்தில் ஒரு மில்லியன் அல்லது 10 லட்சத்திற்கும் அதிகமான மின் வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டு வர இருப்பதாக அம்மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதாவது, இன்னும் மூன்றாண்டுகளில் தற்போது இருக்கும் எரிபொருள் வாகன பயன்பாட்டிற்கு பதிலாக மின்வாகனங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை இவோல்வ் மொபிலிட்டியின் மின்வாகனங்களுக்கான கண்காட்சி தொடக்க விழாவில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று (ஞாயிற்றுகிழமை) தெரிவித்திருந்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொண்ட அவர், தனது லட்சிய இலக்காக இதனைக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர், "1 மில்லியன் மின்வாகனங்களில் 3,000 பேருந்துகள், 2 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 50 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 1,000 சரக்கு போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவை முதற்கட்டமாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மாநிலத்தின் முதல் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் நிலையம் கொண்ட பெட்ரோல் பங்கை அவர் திறந்து வைத்தார்.

மேலும், தி ஹந்து ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலம் சார்ந்து இயங்கும் கேரளா ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் (கேஏஎல்) நிறுவனம், 8 ஆயிரம் யூனிட் மின் வாகனங்களை தயார் செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் அண்மையில்தான், அதன் எலக்ட்ரிக் வாகனத்திற்கான ஒப்புதல் சான்றை அராய் அமைப்பிடம் இருந்து பெற்றிருந்தது.

இதற்காக கேஏஎல் நிறுவனம், சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டு எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பு நிறுவனமான எச்இஎஸ்எஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்மூலம் கேரள அரசு போக்குவரத்து கழகத்ததிற்காக 3,000 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட உள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் மின் வாகனங்களை இயக்கும் விதமாக 1,500 இ-பஸ்களை குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கும் அது முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் தற்போது இயங்கி வரும் அனைத்து அரசு பொது போக்குவரத்து வாகனங்களும் வெளியேறப்பட்டு, 100 சதிவீதம் எலக்ட்ரிக் பஸ்களை களமிறக்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதுவும், இதனை இன்னும் 12 மாதங்களுக்குள்ளாக செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக என்டிபிசி, இஇஎஸ்எல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கேரள அரசு ஏற்கனவே தனது அரசு துறைச்சார்ந்த அலுவலக பயன்பாட்டில் மின் வாகனங்களைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், கேரளாவின் முக்கிய சுற்றுத்தளங்களான மூனாறு, கோவளம், பெக்கல் ஆகிய பகுதிகளை இ-மொபிலிட்டி மண்டலமாக அறிவிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
கேரள அரசு அதன் எலக்ட்ரிக் மொபிலிட்டியை விரிவாக்கம் செய்வதில் அண்மைக் காலங்களாக தீவிர முயற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், அனைத்து வழி பயணங்களிலும் மாசற்ற போக்குவரத்தை திணிக்கும் முயற்சியை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு, தண்டவாளம் மற்றும் நீர் வழி பயணங்களையும் மின்சார வாகன மயமாக்க அரசு திட்டமிட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, கார்பன் நியூட்ரல், சோலார், நடுத்தர அதி-வேகம் கொண்ட ரயில் உள்ளிட்டவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அது முயற்சி எடுத்து வருகின்றது.

அதேபோன்று, கேரளா மெட்ரோ மற்றும் கொச்சின் ஷிப்யார்ட்டில் ஹைபிரிட் ரகத்திலான திறன் கொண்ட வாகனங்களை களமிறக்க இருக்கின்றது. இதுபோன்ற வாகனங்களுக்கு தடையில்லா சார்ஜை வழங்கும் விதமாக, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சார்ஜிங் மையங்களை அமைக்கும் முயற்சியில் கேரள அரசு முயல் வேகத்தில் செயல்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, அதி-குறைந்த உமிழ்வை வெளிப்படுத்தும் ஆற்றல் குறித்த ஆய்வை மேற்கொள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த பர்மிங்ஹாம் பல்கலைகழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








