பல்சர் என்எஸ்200 எஞ்ஜினை கொண்டு வடிவமைக்கப்பட்ட குட்டி விமானம்.. இவ்ளோ கம்மியாதான் செலவாச்சா!!
இந்தியர்கள் பலரின் விருப்பமான டூ-வீலர் மாடலாக பல்சர் இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பலதரப்பட்ட மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனால்தான் இந்த பைக்கிற்கு சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும் தீவிர ஃபேனாக இருக்கின்றனர். ஏன் சில இளம் பெண்களுக்கும் பிடித்தமான மோட்டார்சைக்கிளாக பல்சர் இருக்கின்றது.
இத்தகைய சூப்பரான பைக்கின் எஞ்ஜினைக் கொண்டே இங்கு ஓர் இளைஞர் தன்னுடைய சிறிய விமானத்தை வடிவமைத்திருக்கின்றனர். பொதுவாக, கார் காராகவே இருக்கின்றதைப் போலவும், டூ-வீலர்கள் டூ-வீலராகவே இருப்பதைப் போன்றே வடிவமைத்திருப்பதை நாம் இதற்கு முன்னர் வரை பார்த்திருக்கின்றோம். ஆனால், தற்போது மிகவும் அரிதாக டூ-வீலரின் எஞ்ஜினைக் கொண்டு விமானம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் எனும் இளைஞரே இந்த விமானத்தை வடிவமைத்தவர் ஆவார். அவர் விமான போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. விமானத்துறையில் விமான பராமரிப்பு பொறியாளராக அவர் பணி புரிந்திருக்கின்றார்.
இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ஆனந்த் இந்த சிறிய விமானத்தை வடிவமைத்திருக்கின்றார். பல முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மற்றும் விமானங்களை பற்றி அக்கு வேர், ஆணி வேராக தெரிந்து வைத்திருந்த கற்றல் ஆகியவையே அவருக்கு இந்த இலகு ரக விமானத்தை வடிவமைக்க பெரும் உதவியாக இருந்திருக்கின்றது.

ஆனால், இப்போது எந்த பணியிலும் அவர் இல்லை என கூறப்படுகின்றது. தன்னுடைய சொந்த முயற்சியில் சிறிய விமானங்களை உருவாக்கும் பணியிலேயே அவர் தற்போது களமிறங்கி இருக்கின்றார். இந்த நிலையிலேயே பல்சர் என்எஸ் 200 பைக்கின் எஞ்ஜினைக் கொண்டு அவர் ஓர் சிறிய இலகு ரக விமானத்தை வடிவமைத்திருக்கின்றார்.
இதனால் குறிப்பிட்ட உயரம் வரை பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதுவே அவர் உருவாக்கிய முதல் விமானம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆனந்த் இதற்கு முன்னதாகவும் பல சிறிய விமானங்களை தயார் செய்திருக்கின்றார். ஓர் ஹெலிகாப்டரையும் அவர் வடிவமைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஆனால், ஹெலிகாப்டரை தவிர மற்ற அனைத்தின் உருவாக்கத்திலும் அவர் வெற்றிக் கண்டிருக்கின்றார். இந்த விமானத்தை தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவருக்காக தயாரித்ததாக ஆனந்த் கூறுகின்றார். ஆனால், விமானம் பற்றியபல முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்துக் கொள்ளவில்லை. பல்வேறு காரணங்களால் விமானம் பற்றிய முழு தகவலையம் பகிர்ந்துக் கொள்ள முடியவில்லை என ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தின் ரெக்கைகள் மற்றும் வால் பகுதி உள்ளிட்டவை அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அலுமினியம் எடைக் குறைவானவை, அதேவேளையில், சற்று உறுதியானவையும் என்பதாலேயே இதனை விமானத்தின் முக்கிய பாகங்களை உருவாக்க ஆனந்த் பயன்படுத்தி இருக்கின்றார். அதேநேரத்தில் இதன் சட்டங்கள் (ஃப்ரேம்கள்) மட்டுமே அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டவை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
மஞ்சள் நிறத்தில் முன் பக்க ரெக்கையில் இருப்பது ஓர் வகை துணியாகும். பாராசூட்டுகளில் பயன்படுத்தப்படும் துணியைப் போல் அது காட்சியளிக்கின்றது. இந்த வகை துணிகள் எந்தமாதிரியான கனமான காற்று வீசினாலும் அது கிழியாது. மேலும் உறுதியானதாகவும் இருக்கும். மேலும், மூன்று வீல்களை இந்த விமானத்தில் ஆனந்த் பொருத்தி இருக்கின்றார்.
அவை எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு பயன்படுத்தப்படும் வீல்கள் ஆகும். இவற்றை விமானியால் கட்டுப்படுத்த முடியும். கால்களிலேயே இதற்கான கன்ட்ரோல்கள் கொடுக்கப்பட்ட இருக்கின்றன. குறிப்பாக, வலது-இடது திருப்பக் கன்ட்ரோல்கள் கால்களால் செய்யும் வகையிலேயே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஒருவர் மட்டுமே அமரும் வகையில் விமானத்தில் இருக்கை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர எஞ்ஜினைக் கன்ட்ரோல் செய்வதற்காக கியர் லிவர் போன்ற ஓர் ஜாய் ஸ்டிக் விமானியின் இருக்கைக்கு முன் பக்கம் பொருத்தப்பட்டு இருக்கின்றது. எந்தவொரு விமானமும் வானில் பறக்க டிஜிசிஏ-வின் அங்கீகாரம் கட்டாயம் ஆகும். ஆனால், இந்த விமானம் அதை பெறவில்லை என தெரிகின்றது. எனவே, வானில் இந்த விமானம் பறக்க அனுமதி இல்லை.
இருப்பினும், தன்னுடைய தயாரிப்பின்மீது நம்பிக்க இருப்பதாகவும் விரைவில் இதற்கான அனுமதிக் கிடைக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றார். இதுதவிர, தான் பொருத்தி இருக்கும் இந்த பல்சர் எஞ்ஜினைக் கொண்டு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே சுமார் 8 நிமிடம் வரை பறக்க முடியும் என அவர் தெரிவித்து இருக்கின்றார். சுமார் ஆறு மாத கால இடைவெளியில் இந்த விமானத்தை ஆனந்த் வடிவமைத்திருக்கின்றார். இதற்கு செலவு ரூ.2 லட்சம் வரை ஆகியிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று திறமை வாய்ந்த இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களின் தயாரிப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆனால், நம்ம ஊரு ராமர் பிள்ளை (மூலிகை பெட்ரோல்) பலரின் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்காத சூழலே தென்படுகின்றது.


Click it and Unblock the Notifications









