என்ன ஒரு தாராள மனசு... மருத்துவமனைக்கு புதியதாக 4 ஆம்புலன்ஸ்!! வாங்கி கொடுத்து ஓட்டியும் பார்த்த பெண் எம்எல்ஏ
கர்நாடகாவை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ ஒருவர் மருத்துவ ஆம்புலன்ஸை தானே இயக்கி கவனத்தை ஈர்த்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2019ல் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் கட்டுப்பாட்டில் தான் கடந்த ஆண்டில் இருந்து உலகமே உள்ளது. இந்தியாவில் 2020 மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்தது.

இதனால் மார்ச் இறுதியில் இருந்து மே மாத மத்தியில் வரையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுகள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து போக்குவரத்து வசதியின்றி கிடைத்த வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய கொடுமையை எல்லாம் அப்போது பார்த்தோம்.

அதன்பின் 2020 ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய துவங்கியது. இதனால் ஊரடங்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டன. இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸையே பலர் மறந்து போகும் அளவிற்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் அப்போதில் இருந்தே மருத்துவ வல்லுனர்கள் கொரோனா 2வது அலையை பற்றி எச்சரித்து வந்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 2வது அலை தீவிரமாக ஆரம்பித்தது. மீண்டும் உயிரிழப்புகள் அதிகமாகின. ஆனால் இம்முறை மக்களை பாதுக்காக்க பலர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.

நம் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உடன் தேவைப்படுவோர்க்காக காத்திருக்கும் பெண், கேரளாவில் இலவசமாக கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர் என ஏகப்பட்ட ஹீரோக்களை பற்றி இதற்கு முன் பார்த்துள்ளோம்.
தற்போது நாம் பார்க்கவுள்ளது, நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்ததை பற்றி. கர்நாடகாவில் பொது ஆர்வலர்களுடன் அரசியல்வாதிகளும் நேரடியாக பொது மக்களுக்கு உதவ தொடர்ந்து பல்வேறு விதமான வழிகளில் முன்வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலி நிம்பல்கர், யாருடைய உதவியையும் எதிர்பாராமல் நோயாளிக்காக தானே ஆம்புலன்ஸை இயக்கி சுற்று வட்டார பகுதி மக்களிடத்திலும், இணையத்திலும் கவனத்தை பெற்றுள்ளார்.

தன் தொகுதி மக்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தன்னால் முடிந்த உதவிகளை செய்துவரும் அஞ்சலி, மேம்பாட்டு மானியத்தின் கீழ் நான்கு ஆம்புலன்ஸ்களை வாங்கி, தனது தொகுதிக்குள் உள்ள கானாபூர் மருத்துவமனைக்கு வழங்கி இருந்தார்.

இதேபோன்று முன்னதாக 8 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனைகளுக்கு வழங்கி இருந்தார். கர்நாடகாவை பொறுத்தவரையில் கானாபூரில் கொரோனா 2வது அலை பரவல் மற்ற பகுதிகளை காட்டிலும் அதிகமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெண் எம்.எல்.ஏ அஞ்சலி நிம்பல்கர் மட்டுமின்றி, ஏற்கனவே கூறியதுபோல் கர்நாடகா மாநிலத்தில் அரசியல்வாதிகள் பலர் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இவ்வாறான செயல்பாடுகளில் நேரடியாக ஈடுப்பட்டு வருகின்றனர். இத்தகைய செயல்பாடுகளில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளரும், எம்பி-யுமான ரேணுகாச்சார்யா தற்சமயம் அதிகளவில் ஈடுப்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications








