எவ்வளவு கனவுகளோடு இந்தியா வந்திருக்கும்! கொரியன் கார் கம்பெனிக்கு பெரிய நஷ்டம் - இதுக்கு அப்புறம் சமாளிக்குமா?
கார் திருட்டு சம்பவங்கள் வழக்கமாக எல்லா நாடுகளிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். தனி நபரிடம் இருந்து காரை திருடுவது மட்டுமில்லாமல், டீலர்ஷிப் ஷோரூமுக்கே சென்று கார்களை ஆட்டையை போடும் சம்பவங்களும் பரவலாக நிறைய இடங்களில் நடந்துள்ளன. ஆனால், நிறுவனத்தின் மிக பெரும் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு உள்ளேயே கை வைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இது இந்தியாவில் ஆந்திரா (Andhra) பிரதேசத்தில் நடந்துள்ளது. என்ன நடந்தது? குற்ற செயலில் ஈடுப்பட்டவர்கள் பிடிப்பார்களா என்பன போன்றவற்றை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம். ஹூண்டாய் (Hyundai)-ஐ தொடர்ந்து மற்றொரு கொரியன் கார் நிறுவனமாக இந்திய கார் சந்தையில் குறுகிய காலத்தில் கியா வெற்றி பெற்று காட்டியுள்ளது. இந்தியர்களுக்கு ஏற்ப குறைவான விலையிலான, அதேநேரம் தரமான கார்களை கியா விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் முதன்முதலாக செல்டோஸ் (Seltos) காரை இந்தியாவில் அறிமுகம் செய்த கியா நிறுவனத்திற்கு ஆந்திராவில் தொழிற்சாலை உள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் பெனுகொண்டா (Penukonda) என்கிற பகுதியில் கியாவின் பிரம்மாண்ட கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.
இந்த கியா தொழிற்சாலையில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த திருட்டு சம்பவம் தொடர்பான செய்தி தான் தற்போது வெளியாகி ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கியா தொழிற்சாலையில் கடந்த 5 வருடங்களில் சுமார் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ஏறக்குறைய ரூ.30 கோடி அளவில் வரும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகார் கடந்த மார்ச் மாதத்திலேயே கியா நிறுவனம் சார்பில் போலீஸில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்த தகவலை தற்போது வெளியுலகத்திற்கு தெரிவித்து இருப்பது கூட ஒரு போலீஸ் அதிகாரி தான். இதுதொடர்பான விசாரணை இன்னமும் சென்றுக் கொண்டிருக்கிறது என கூறும் பெனுகொண்டா போலீஸ் அதிகாரி வெங்கடேஷ்வர்லு, முதற்கட்டமாக மொத்தமாக திருடப்பட்ட கார் என்ஜின்களின் எண்ணிக்கை 900 என்பதை உறுதி செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
கார் என்ஜின்கள் கியா தொழிற்சாலைக்கு கொண்டுவரும் வழியிலும், தொழிற்சாலைக்கு உள்ளேயும் திருடப்பட்டுள்ளதாக வெங்கடேஷ்வர்லு தெரிவித்துள்ளார். தொழிற்சாலைக்கு உள்ளே திருடு போய் இருப்பதால் போலீசாருக்கு தொழிலாளர்கள் மேலேயும் சந்தேகம் கிளம்பியுள்ளது. சில இந்நாள் மற்றும் முன்னாள் கியா தொழிலாளர்களை விசாரணைக்கு போலீசார் உட்படுத்த உள்ளனர்.
ஒரு சிறிய பொருள் கூட உள்ளே இருப்பவர்களுக்கு தெரியாமல் வெளியே போகாது என கூறும் போலீஸ் அதிகாரி வெங்கடேஷ்வர்லு, எல்லாவற்றையும் தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். இவர் பேசியிருப்பதை வைத்து பார்க்கும்போது, முன்னாள் தொழிலாளர்கள் தான் போலீசாரின் முக்கியமான டார்க்கெட்டாக உள்ளனர். கியா நிறுவனம் தற்போதுவரையில் இதற்கு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கியா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் இந்தியாவில் 7 விதமான கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், செல்டோஸ், சொனெட் (Sonet), கேரன்ஸ் (Carens) மற்றும் சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சிரோஸ் (Syros) என்கிற 4 கார்கள் மட்டுமே ஆந்திராவில் உள்ள கியா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கார்னிவல் (Carnival) என்கிற விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான கியா கார், பாதி கார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், மீதி கார் பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்திய ஆந்திரா தொழிற்சாலையில் வைத்து முழு காராக உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கியா இவி6 (EV6) மற்றும் இவி9 (EV9) என்கிற எலக்ட்ரிக் கார்கள் இரண்டும் முழு காராக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் ஆந்திரா தொழிற்சாலையில் உருவாக்கும் கார்கள் அனைத்தும் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி கொண்டிருப்பவை ஆகும். அவற்றின் விலைகள் ரூ.10- 25 லட்சம் என்கிற அளவில் உள்ளன. இந்த கார்களுக்கான என்ஜின்களை தான் தொழிற்சாலைக்கு உள்ளேயே புகுந்து திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதால், குற்றவாளிகள் விரைவில் பிடிப்படுவர் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications








