மலைப்பாதையில் டிரைவிங் செய்யும்போது இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! இந்த வீடியோவை பாருங்க புரியும்...
நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் சாலை விபத்துகள் பலவற்றை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், இங்கு ஒரு கியா செல்டோஸ் கார் மலைப்பிரதேச பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது. எப்படி இந்த விபத்து நடந்தது? இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது உள்பட இந்த விபத்து பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடுகளுள் நம் இந்தியாவும் ஒன்று. சாலை விபத்துகளுக்கு அதிவேகமும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதும் முக்கிய காரணமாக விளங்குகின்றன. அதேநேரம் போதிய அளவிற்கு டிரைவிங் திறமை இல்லாததும் சில சமயங்களில் விபத்துக்கு வழிவகுக்கின்றன. போதிய அளவிற்கு வாகனங்களை இயக்க தெரியாத போது, பயணத்தின்போது எப்போதுமே ஒரு விதமான பய உணர்வு நம்முடன் இருக்கும்.

இடையில் எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லை எனில், பிரச்சனையின்றி பயணத்தை முடித்துவிடலாம். ஆனால் திடீரென சாலையின் குறுக்கே ஏதேனும் ஒரு பொருள் வந்தால், ஆரம்பத்தில் இருந்த பய உணர்வு சில வினாடிகளிலேயே உச்சத்தை தொட்டுவிடும். அத்தகைய நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய்விடுவோம். திகைத்து நிற்கும் அந்த சில வினாடிகளிலேயே விபத்து நடந்து முடிந்துவிடும்.
அப்படியொரு மோசமான சம்பவம் தான் தமிழ்நாட்டில் மலைப்பிரதேச பகுதி ஒன்றில் (சரியாக எந்த இடம் என்பது தெரியவில்லை) இந்த கியா செல்டோஸ் கார் டிரைவருக்கு ஏற்பட்டுள்ளது. இறங்குமுகமான பாதையில் இயங்கி கொண்டிருந்த இந்த கியா செல்டோஸ் கார் ஒரு கட்டத்தில் வலதுப்புறம் திரும்பக்கூடிய வளைவை சந்தித்துள்ளது. இதனை கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
இந்த செல்டோஸ் காரை டிரைவர் சாலையின் இடது பக்கத்திலேயே சரியாக இயக்கி கொண்டிருந்தார். ஆனால் மலை பாதைகளில் இவ்வாறான போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது கடினம். அதிலிலும் குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது எதிர்பக்க பாதையில் நம்மை அறியாமலேயே சென்றுவிடுவோம். அதனால்தான், மலை பிரதேச பகுதிகளில் மட்டுமின்றி, எங்கு வளைவுகளில் திரும்பினாலும் மெதுவாக திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த கியா செல்டோஸ் கார் டிரைவர் போதுமான வேகத்தில் இந்த வளைவில் திரும்பியுள்ளார். ஆனால் திரும்பிய அடுத்த வினாடியே எதிர்பக்கமாக ஓர் லாரி வந்துள்ளது. லாரியை பார்த்த பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய இந்த செல்டோஸ் கார் டிரைவர், லாரி மீது மோதி விட கூடாது என்பதற்காக அதற்கு வழிவிடும் முயற்சியில் சாலையின் ஓரத்தில் இருந்த டிவைடரில் காரை கொண்டுப்போய் மோதியுள்ளார்.
இதில் காரின் முன்பக்க பகுதி பலத்த சேதமடைந்து, கார் கவிழ்ந்துள்ளது. காரின் டேஸ்போர்டில் இருந்த கேமிரா மூலம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள இந்த வீடியோவில், வளைவில் திரும்புவதற்கு முன்பாகவே லாரியின் ஹார்ன் சத்தத்தை நம்மாலும் கேட்க முடிகிறது. ஆனால் இந்த செல்டோஸ் கார் ஓட்டுனர் லாரி தூரத்தில் வருவதாக எண்ணி இருக்க வேண்டும். ஆனால் திரும்பிய அடுத்த கணமே லாரி கண்ணுக்கு முன் வந்து நின்றவுடன் இந்த கார் டிரைவர் பயந்துப்போய் உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க காரணம், செல்டோஸ் கார் ஓட்டுனரின் அச்சமே ஆகும். லாரி டிரைவரும் சாலையின் டிவைடரை தாண்டி காரின் பாதைக்கு சிறிது வந்துள்ளார் என்றாலும், வளைவுகளில் அவ்வளவு பெரிய வாகனத்தை ஒரே பாதையில் திருப்புவது கடினமான விஷயம் ஆகும். இந்த செல்டோஸ் கார் டிரைவர் லாரியை பார்த்தவுடன் பயப்படாமல், சாலையின் இடதுப்பக்கத்திலேயே சென்றிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications