2 வயது குழந்தை காருக்குள் சாவியுடன் சிக்கியதால் பரபரப்பு! உச்சகட்டமாக நடந்த 45 நிமிட போராட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று கார் சாவியுடன் காருக்குள் லாக்காகி கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த குழந்தையை 45 நிமிடம் போராடி அதற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் வந்து இரண்டு வயது குழந்தையை பத்திரமாக காரில் இருந்து மீட்டு உள்ளார்கள். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது கார் மற்றும் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக இருந்துள்ளது. இது குறித்த விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பெங்களூர் என்ற பகுதியை சேர்ந்தவர் நந்து இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். இவர் நேற்று வழக்கம்போல காலையில் தனது காரை கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் அருகே அவரது மகன் ஆரவ் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக காருக்குள் ஏறிய ஆரவ் அங்குள்ள காரின் சாவியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். காரின் கதவுகள் எதிர்பாராத விதமாக அடைத்துக் கொண்டன. இதனால் கார் லாக்காகிவிட்டது. யாரும் எதிர்பாராத விதமாக காரின் சாவியும் காருக்குள்ளேயே குழந்தை கையில் இருந்ததால் காரை வெளியில் இருந்து திறக்க முடியவில்லை. காரின் சாவில் உள்ளஆட்டோமேட்டிக் லாக் கீயை அழுத்தினால் மட்டுமே கதவுகள் திறக்கும்.
ஆனால் காருக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு வயது குழந்தைக்கு இந்த விபரம் தெரியாது. இந்த குழந்தையை மீட்க பெற்றோர்கள் போராடினார்கள். காரின் கதவை திறப்பதற்கான முயற்சியையும் செய்தார்கள் ஆனால் முடியவில்லை. காரை திறப்பதற்கான டூப்ளிகேட் கீயையும் வீடு முழுக்க தேடினார்கள். அப்பொழுதும் கிடைக்கவில்லை. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பெயரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காருக்குள் சிக்கிய குழந்தையை சுமார் 45 நிமிடங்கள் போராடி ஒரு வழியாக குழந்தையை பத்திரமாக மீட்டார்கள். காருக்குள் இருக்கும் குழந்தைகளிடம் வெளியில் இருப்பவர்கள் கார் சாவியில் உள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்துவதற்காக அறிவுத்தல்களை வழங்கி மெல்ல காரின் கதவை திறந்தார்கள். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாக பரவி வருகிறது.
குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் குழந்தை காருக்குள் இருக்கும் போது கார் கதவுகள் மூடி இருந்ததால் குறிப்பிட்ட சில நொடிகளுக்கு பிறகு கார் கதவுகள் தானாக லாக் ஆகிக்கொள்ளும். இந்த லாக்கை காரின் சாதி இருந்தால் மட்டுமே திறக்க முடியும் ரிமோட் மூலமாக அல்லது சாவியை நேரடியாகவோ பயன்படுத்தி காரை திறக்கலாம் ஆனால் இந்த சம்பவத்தில் காரின் சாவியும் காருக்குள் சிக்கிக் கொண்டது.

இது போன்ற நேரங்களில் ஸ்பேர் கீ மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். ஆனால் இவர்களிடம் ஸ்பேர் கீயும் இல்லை. இதனால் குழந்தை காருக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபோல உங்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்தால் கட்டாயம் உங்கள் காரில் ஸ்பேர் கீயை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லாத சூழ்நிலையில் உங்கள் குழந்தைகளும் காருக்குள் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
இப்படியாக காருக்குள் உங்கள் குழந்தைகளும் சிக்கிக் கொண்டால் குழந்தைகளை எப்படி மீட்பது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கு முதலில் கார் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் நின்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கார் வெளியில் பகல் நேரத்தில் வெயிலில் நின்று கொண்டிருந்தால் உங்களுக்கு அதிகமாக நேரம் கிடையாது. நீங்கள் உடனடியாக குழந்தையை காப்பாற்றியாக வேண்டும்.
அதே நேரம் கார் ஸ்டார்ட் செய்யப்பட்டு இருக்கிறதா காரில் ஏசி ஓடிக்கொண்டிருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும். ஓடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு ஓரளவுக்கு நேரம் கிடைக்கும். ஏசியும் ஓடவில்லை என்றால் உடனடியாக நீங்கள் செயல்பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது. இல்லை என்றால் உங்கள் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் கார் வீட்டுக்குள் வெயிலில் இல்லாமல் இருந்ததால் குழந்தையை மீட்க சுமார் 45 நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டார்கள். அதுவரை குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் வெயிலில் கார் நின்றால் இவ்வளவு நேரம் கூட நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது உடனடியாக குழந்தையை காப்பாற்றி ஆக வேண்டும்.
இப்படியான சூழ்நிலைகளில் காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது மட்டுமே ஒரே வழி பலர் இந்த நேரங்களில் கார் கண்ணாடி அருகே இருக்கும் குட்டி கண்ணாடியை உடைக்க முயற்சி செய்வார்கள். அந்த கண்ணாடியை உடைக்க முயற்சி செய்ய வேண்டாம். அது சிறிய கண்ணாடியாக இருப்பதால் விலை குறைவாக இருக்கும் அதனால் அதை உடைத்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் சிலர் இருப்பார்கள். ஆனால் உண்மையில் மார்க்கெட்டில் அந்த கண்ணாடியின் விலை தான் அதிகம்.
அதனால் சாதாரணமாக ஜன்னல் கண்ணாடியை உடைத்தாலே உங்களுக்கு குழந்தையை காப்பாற்றி விட முடியும். ஆனால் ஜன்னல் கண்ணாடியை உடைக்கும் முன் எந்த சேனலுக்கு நடையை உடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். குழந்தை இருக்கும் பக்கத்திலேயே இருக்கும் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யாதீர்கள் கண்ணாடி துகள்கள் குழந்தை மீது விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
இதனால் கார் உள்ளே குழந்தை முன் சீட்டில் இருந்தால் பின் சீட்டில் இருக்கும் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யலாம். பின் சீட்டில் இருந்தால் முன் சீட்டில் இருக்கும் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யலாம். குழந்தை வலது பக்கம் இருக்கும்போது இடது பக்கம் இருக்கும் கண்ணாடியையும், இடது பக்கம் இருக்கும் போது வலது பக்கம் இருக்கும் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யலாம்.
எந்த பக்கத்தில் கார் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்கிறோமோ அந்த பக்கத்தில் குழந்தை பார்க்காதவாறு வெளியில் இருந்து யாராவது ஒருவர் குழந்தையின் கவனத்தை வேறு இடத்தில் திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். இல்லை என்றால் கார் கண்ணாடி உடைக்கப்படும் வேகத்தில் சிறிய கண்ணாடி துகள்கள் குழந்தையின் கண்ணில் பட்டு விட வாய்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் முன் பக்க கண்ணாடியையும் பின்பக்க கண்ணாடியையும் உடைப்பது உங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். இந்த கண்ணாடியை மாற்றுவது அதிக விலை கொண்டதாக இருக்கும். அதனால் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது பெஸ்ட். இதற்கெல்லாம் முன்னர் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் குழந்தைகளை தேவையில்லாமல் காரின் அருகே விளையாட விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









