வாகன ஓட்டிகள் இடைவிடாமல் ஹாரன் ஒலிப்பதை தடுக்க ஐடியா! வைரல் ஆகும் 11 வயது சிறுமியின் கடிதம்...
மும்பையை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று இந்தியா முழுக்க வைரல் ஆகி வருகிறது.

இந்திய வாகன ஓட்டிகள் பலரிடம் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் கடைபிடிக்கும் பழக்கமே கிடையாது. அதற்கு மாறாக மோசமான பழக்க வழக்கங்கள் பலவற்றை இந்திய வாகன ஓட்டிகள் கடைபிடிக்கின்றனர். இடைவிடாமல் ஹாரனை ஒலித்து கொண்டே இருப்பது அவற்றில் ஒன்று. ஹாரன் என்ற டிவைஸ் எதற்காக கண்டறியப்பது? என்பதை உணர்ந்து கொள்ளாத சில வாகன ஓட்டிகள் அவற்றை தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஹாரனை ஒலித்தால் முன்னால் நிற்கும் வாகனம் வேகமாக நகரும் என்பது வாகன ஓட்டிகளின் எண்ணம். இடைவிடாமல் ஒலித்து கொண்டே இருந்தால், முன்னேறி செல்ல வேகமாக வழி கிடைக்கும் எனக்கருதி, சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் காதை பிளக்கும் அளவிற்கு ஒரு சிலர் ஹாரனை ஒலிக்கின்றனர். இதன் காரணமாக ஏற்படும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இடைவிடாமல் ஹாரனை ஒலிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கு இடையே வீண் தகராறுகளும் கூட உண்டாகின்றன. இவ்வளவு இரைச்சலை உண்டாக்கினால், யாருக்குதான் எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்? ஆனால் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்கள் எதற்காக கண்டறியப்பட்டது என்பதை மும்பையை சேர்ந்த 11 வயதே நிரம்பிய பள்ளி சிறுமி ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்.

அவர் பெயர் மஹிகா மிஸ்ரா. தேவையில்லாமல் ஹாரன்களை ஒலிக்கும் வாகன ஓட்டிகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவிற்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் இந்த பிரச்னையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? என்பது தொடர்பான தனது யோசனைகளையும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள மஹிகா மிஸ்ரா, இறுதியில் ஆனந்த் மஹிந்திராவிற்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர்தான் ஆனந்த் மஹிந்திரா. இந்தியாவின் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஆனந்த் மஹிந்திரா, சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். டிவிட்டரில் தன்னை நோக்கி வரும் கேள்விகளுக்கு சற்றும் அசராமல், சுவாரஸ்யமாக பதில் அளிக்க கூடிய வழக்கம் ஆனந்த் மஹிந்திராவிற்கு உள்ளது. இந்த சூழலில்தான் சிறுமி மஹிகா மிஸ்ராவின் கடிதம் ஆனந்த் மஹிந்திராவிற்கு கிடைத்துள்ளது. உடனே அவர் அதனை டிவிட்டரில் வெளியிட, அவரது இதர டிவிட்களை போல இதுவும் வைரல் ஆகி விட்டது. அத்துடன் சிறுமி மஹிகா மிஸ்ரா தெரிவித்திருந்த யோசனைகள் இந்தியாவில் பேசு பொருளாகவும் ஆகிவிட்டன.
குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு சில முறைகள் மட்டுமே ஹாரன்களை ஒலிக்கும்படியான தொழில்நுட்பம் கொண்டு வரப்பட வேண்டும் என சிறுமி மஹிகா மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். உதாரணத்திற்கு 10 நிமிடங்களுக்கு 5 முறை மட்டுமே ஹாரனை ஒலிக்க முடியும் என்பது போன்ற தொழில்நுட்பத்தை அவர் கேட்டுள்ளார். அத்துடன் தொடர்ந்து 3 வினாடிகளுக்கு மேல் டிரைவர்கள் ஹாரன்களை ஒலிப்பதை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இதுபோன்ற தொழில்நுட்பங்களை மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி செய்யும் கார்களில் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்த சிறுமியின் யோசனைகள் எவ்வாறானது? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். ஹாரன் என்ற டிவைஸ், உங்களை இருப்பை மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் தெரியப்படுத்தவே கண்டறியப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டால் தேவையில்லாத பிரச்னைகள் எழாது.


Click it and Unblock the Notifications








