இதோ மெட்ரோ வந்தாச்சு... கிளாம்பாக்கத்துக்கு 1 மணிநேர டிராவல் தான்!! தமிழ்நாடு பட்ஜெட்டில் வேறு என்னென்ன...?
நாம் எதிர்பார்த்ததை போல், புதிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையில் சென்னை மெட்ரோ இரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டசபையில் இன்று (பிப்.19) மாநில நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு சட்டசபையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் 2024-25ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மாநில நிதித்துறையையும், மனிதவள மேம்பாட்டுத்துறையையும் ஒன்றாக கவனித்துவரும் அமைச்சர் தங்கம் தென்னரசு தாங்கல் செய்துள்ளார். ஏறக்குறைய 79 திட்டங்களுடன் அடங்கியிருந்த இந்த பட்ஜெட்டை அமைச்சர் சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் வாசித்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாநில பட்ஜெட்டில் மெட்ரோ இரயில் விரிவாக்கம் குறித்த அறிவிப்புகளும் அடங்கி இருந்தன. எப்போதும்போல், சென்னை மெட்ரோ விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாம் எதிர்பார்த்தப்படி, சென்னை மாநகரத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட மாநிலத்தின் முக்கிய பேருந்து முனையத்திற்கு மெட்ரோ இரயில் சேவை வரவுள்ளது.
வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் லோக்கல் எலக்ட்ரிக் இரயில் நிலையங்களுக்கு மத்தியில் கிளாம்பாக்கம் பேருந்து அமையம் அமைந்துள்ளது. இரயில்வே தண்டவாளம் பேருந்து முனையத்திற்கு அருகாமையில்தான் செல்கிறது. இதன் காரணமாக, வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கத்திற்கு மத்தியில் புதியதாக இரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும், 6 மாதங்களுக்குள் இந்த பணிகள் முடிந்துவிடும் என சம்மந்தப்பட்ட இரயில்வே மேலளார் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இதேபோல், மெட்ரோ இரயில் சேவையும் கட்டாயம் வரும் என கூறினோம். அதேபோன்று, தற்போது மாநில பொது பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்புகள் இடம்பிடித்துள்ளன. சென்னை விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் லோக்கல் எலக்ட்ரிக் இரயில் நிலையம் மற்றும் பேருந்து முனையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் மெட்ரோ இரயில் நிலையம் அமையலாம்.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலைய மெட்ரோவுக்கு செல்ல ஏறக்குறைய 50 நிமிடங்கள் ஆகிறது. கிளாம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தை ஏறக்குறைய 1 மணிநேரம் 15 நிமிடங்களில் எட்டிவிடும் வகையில் பயண நேரம் இருக்கும். ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் வழித்தடம் மட்டுமின்றி புதியதாக கோயம்பேடு - ஆவடி மற்றும் பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்க திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

பரந்தூரில் சென்னையின் புதிய விமான நிலையம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மெட்ரோவில் இந்த 2ஆம் கட்ட விரிவாக்க திட்டங்களுக்கு என்றே ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையை போல், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் மெட்ரோ இரயில் சேவைகள் கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக, கோயம்புத்தூரை பெங்களூரை போல் மென்பொருள் நகரமாக மாற்றும் முயற்சியாக பல்வேறு அட்டகாசமான திட்டங்கள் இந்த முறை பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ளன.
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை தமிழ்நாடு அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அனுமதி கிடைத்ததும் இந்த இரு மாநகரங்களில் மெட்ரோ இரயில் பணிகள் துவங்கிவிடும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்தை போல், சென்னை மாநகரின் முக்கியமான பிராட்வே பேருந்து முனையத்தையும் மேம்படுத்தும் திட்டத்தில் மாநில அரசு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை எந்த அளவிற்கு அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையத்தை அரசு அமைத்துள்ளதில் இருந்து தெரிகிறது. ஆக, கிளாம்பாக்கத்தில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் இருக்க வேண்டியது கட்டாயம். மெட்ரோ இரயில் சேவையின் மூலமாக, கிளாம்பாக்கத்திற்கு ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் அதிக பணம் கொடுத்து வருபவர்களின் எண்ணிக்கை குறையும்.


Click it and Unblock the Notifications









