வட கொரிய அதிபர் கிம்மின் இந்த செயலால் உலக நாடுகள் அதிர்ச்சி... எப்படி நடந்தது என புரியாமல் குழப்பம்
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் இந்த செயலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இது எப்படி நடந்தது? என புரியாமல் அவை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.

அணு ஆயுத சோதனைகளால் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று வட கொரியா. அதன் அதிபர் கிம் ஜோங் உன் யாருக்கும் அடங்குவதாக இல்லை. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறு அணு ஆயுத சோதனைகளை அவர் தொடர்ச்சியாக செய்து கொண்டேதான் இருக்கிறார். இதனால் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்புகளும், அமெரிக்கா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இருந்தபோதும் அமெரிக்காவிற்கு எதிரான மனநிலை கொண்ட நாடுகள் மத்தியில் கிம் ஜோங் உன்னிற்கு ஆதரவு காணப்படவே செய்கிறது. இதற்கு சீனா மிகச்சிறந்த உதாரணம். இப்படிப்பட்ட சூழலில் வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சார்பில், கிம் ஜோங் உன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்களின் சந்திப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. அப்போது மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் கார்டு (Mercedes Maybach S600 Pullman Guard) மற்றும் மெர்சிடிஸ் மேபேக் எஸ்62 (Mercedes Maybach S62) ஆகிய இரண்டு விலை உயர்ந்த சொகுசு கார்களை கிம் ஜோங் உன் பயன்படுத்தினார். இவ்விரு கார்களையும் கிம் ஜோங் உன் வட கொரியாவில் இருந்தே கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இவ்விரு கார்களையும் கிம் ஜோங் உன் பயன்படுத்தியதால் உலக அளவில் கடும் அதிர்வலைகள் எழுந்துள்ளன. அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. லிமோசைன் (Limousine) எனப்படும் சொகுசு கார்கள் உள்பட எவ்வித ஆடம்பர பொருட்களையும் வட கொரியாவிற்கு விற்பனை செய்யக்கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது. வட கொரியா தனது அணு ஆயுதங்களை கை விட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை விரும்புகிறது. இதற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகதான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான் 2 லிமோசைன் கார்களை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பயன்படுத்தியுள்ளார். இதனால் உலக நாடுகள் பலவும் அதிர்ச்சியடைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறி இந்த 2 லிமோசைன் கார்களும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு எப்படி கிடைத்தன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த விவகாரம் உலகம் முழுக்க சர்ச்சை ஆனதால், கிம் ஜோங் உன்னால் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை தயாரித்த நிறுவனமான டெய்ம்லர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற டெய்ம்லர் நிறுவனம் ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் டெய்ம்லர்தான். டெய்ம்லரின் துணை நிறுவனங்களில் ஒன்றாகதான் மெர்ச்சிடிஸ் பென்ஸ் இயங்கி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிம் ஜோங் உன் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டெய்ம்லர் நிறுவனம், ''அவர் இந்த கார்களை எங்கே வாங்கினார்? என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. வட கொரியாவுடன் எங்களுக்கு எவ்வித வியாபார தொடர்பும் இல்லை'' என கூறியுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் இருவரின் முதல் சந்திப்பு கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பானது, வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த பிப்ரவரி மாதம் அரங்கேறியது. இவ்விரு சந்திப்புகளின்போதும் கூட, மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் கார்டு காரை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து டெய்ம்லர் நிறுவனத்தின் அதிகாரி சில்க்கி மோக்கெர்ட் கூறுகையில், ''இந்த வாகனங்கள் வட கொரியாவிற்கு எப்படி டெலிவரி செய்யப்பட்டது? என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகியவை விதித்துள்ள தடைகளுக்கு நாங்கள் இணங்கி செல்கிறோம். எனவே வட கொரியாவுடன் எங்களுக்கு எவ்வித வியாபார தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகிறோம்'' என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''வட கொரியா மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு வாகனங்கள் டெலிவரி செய்யப்படுவதை தடுப்பதற்காக, விரிவான ஏற்றுமதி கட்டுப்பாடு (Comprehensive Export Control Process) செயல்முறைகளை நாங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் மூன்றாம் நபர்கள் மூலமாக வாகனங்கள் விற்பனை செய்யப்படுவது, குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை (Used Vehicles) விற்பனை செய்வது என்பது எங்களது கட்டுப்பாடு மற்றும் பொறுப்பிற்கு அப்பாற்பட்டது'' என்றார்.

கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் டெய்ம்லர் நிறுவனம் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதற்காக ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் தொழிற்சாலைகளை நிறுவி வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் டெய்ம்லர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர்கள் பட்டியலில் வட கொரியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே யாரேனும் மூன்றாம் நபர் ஒருவர் உதவியுடன்தான் கிம் ஜோங் உன் இந்த கார்களை வாங்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால் அந்த மூன்றாம் நபர் யார்? என்பது தெரியாமல் வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையை பிய்த்து கொண்டுள்ளன. ஏதேனும் ஒரு வழியில் சர்வதேச தடைகளை தகர்க்கும் திறன் கிம் ஜோங் உன்னிற்கு இருப்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications








