அதிசய சக்தி! காரையே சுத்தி சுத்தி வந்த பூனை! காரணம் தெரிஞ்சதும் அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர் குடும்பம்!
மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் கண்டிவாடி பகுதியில் இருந்து கர்நாடக (Karnataka) மாநிலம் ஜகல்பெட் பகுதிக்கு ஒரு குடும்பம் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தது. அவர்கள் பயணம் செய்தது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் ஆகும். இது மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றாகும்.
ஜகல்பேட் பகுதியை நெருங்கியபோது வழியில் இருந்த ஒரு கோயிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். ஜகல்பேட் சென்றடைந்ததும், அவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேசி கொண்டு, அவரவர் வேலைகளில் 'பிஸி' ஆகி விட்டனர்.

வீட்டிற்கு வெளியே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு பூனை காரின் பின் பகுதியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. பூனையின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்ததால், அனைவரும் சற்று பரபரப்பாகி விட்டனர். இதன் பின் அவர்கள் காரின் பின் பகுதியை நன்றாக நோட்டமிட்டனர்.
அப்போது பாம்பு ஒன்று காரின் பின் பகுதியில் பதுங்கியிருந்தது அவர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் உரிமையாளர் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் பின் பகுதியில் பதுங்கியிருந்தது கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம் (King Cobra) ஆகும். சுமார் 10 அடி நீளம் இருந்த அந்த பாம்பை, 2 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காருக்குள் பதுங்கியிருந்த பாம்புகள் பிடிபடுவது இது முதல் முறை அல்ல. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இது அடிக்கடி நடைபெற கூடிய ஒரு சம்பவம்தான். சமீபத்தில் கூட கார் ஒன்றில் பாம்பு பதுங்கியிருந்ததை நாய் கண்டுபிடித்து உரிமையாளரை எச்சரிக்கை செய்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்கியிருந்தது.
பாம்புகள் வெப்பத்தை தேடியே கார் போன்ற வாகனங்களுக்குள் தஞ்சம் அடைகின்றன. எனவே காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த குளிர் காலத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வாகனத்தில் பாம்புகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தால், பதற்றம் அடைந்து விட வேண்டாம்.
அத்துடன் அதை நீங்களே பிடிப்பதற்கும் முயற்சி செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக வனத்துறை அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரியப்படுத்துங்கள். அவர்கள்தான் பாம்புகளை பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள். சாதாரண பொதுமக்களுக்கு பாம்புகளை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியாது. எனவே பாம்புகளை பிடிக்க முயற்சி செய்தால், உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.
எனவே வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து பாம்புகளை அப்புறப்படுத்துவதுதான் சிறந்தது. சமீபத்தில் நடைபெற்ற 2 சம்பவங்களிலும் நாய், பூனை போன்ற விலங்குகள்தான் பாம்புகளை கண்டறிய உதவியுள்ளன. எனவே உங்கள் வீடுகளில் நாய், பூனை போன்ற விலங்குகளை வளர்ப்பதும் கூட நல்ல ஐடியாதான்! ஏனெனில் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு இத்தகைய ஆபத்துக்களில் இருந்து உங்களை காப்பாற்றும் அதிசய சக்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








