1970 காலக்கட்டத்தில் எப்படி இருந்தவரு... அப்போதே ஐநா வரை ஒலித்த கேரள பெண்ணின் பெயர்!!
ஆண்களுக்கு கிடைத்த பல்வேறு விஷயங்கள் பெண்களுக்கு சற்று தாமதமாகவே கிடைத்தன. இதில், டிரைவிங் லைசன்ஸும் ஒன்றாகும். இந்தியாவில் ராஜாக்கள் காலத்திலேயே ஆண்கள் வாகனங்களை ஓட்ட ஆரம்பித்துவிட்டாலும், பெண்கள் வாகனங்களை இயக்குவது கடந்த 50 வருடங்களாக தான் உள்ளது. ஆட்டோமொபைல் வாகனங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட மக்கள் அதிகம் உள்ள கேரளாவில் ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் பெண் ஓட்டுனரை பற்றி தெரியுமா? வாருங்கள் அவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வெஸ்பா ஸ்கூட்டர்களை வாங்குவது கடந்த காலங்களில் இருந்து இப்போதுவரையில் பலருக்கு கனவாகவே உள்ளது. ஏனெனில், இத்தாலிய ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான வெஸ்பாவின் ஸ்கூட்டர்கள் அந்த அளவிற்கு தனித்துவம் ஆனவைகளாகவும், அதற்கேற்ப விலைமிக்கவை ஆகவும் விளங்குகின்றன. ஆனால், கேரளாவில் 50 வருடங்களுக்கு முன்பே வெஸ்பா ஸ்கூட்டரை ஓட்டியவர், புஷ்பலதா பாய் ஆவார்.

இதன் காரணமாகவே, அப்போதில் இருந்து இப்போதுவரையில் பலரும் இவரை "ஸ்கூட்டரம்மா" என அழைக்கின்றனர். 50 வருடங்களுக்கு முன்பே ஸ்கூட்டரை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தை முறையாக பெற்ற புஷ்பலதா பாய், கேரளாவில் ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் பெண் ஆவார். கொச்சியின் சாலைகளில் வெஸ்பா ஸ்கூட்டரில் ஸ்கூட்டரம்மா வரும் கம்பீரத்தை பார்ப்பதற்காகவே இவருக்கு அந்த சமயத்தில் நிறைய ரசிகர்கள் இருந்தனர்.
அந்த காலத்தில் வெளிவந்த பிரபல மலையாள பத்திரிக்கை ஒன்றின் கவர் போட்டோவில் இடம்பிடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த கேரள அளவில் புஷ்பலதா பாய் பிரபலமாகினார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களின் டிரைவிங் ஸ்டைல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்கூட்டரம்மாவின் ஸ்கூட்டர் ஓட்டும் ஸ்டைலும் கருத்தில் கொள்ளப்பட்டது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றார், புஷ்பலதா பாய்.
புஷ்பலதா பாய்க்கு சதீஷ் மற்றும் ஐஸ்வர்யா என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் பல் மருத்துவர்களாக பணியாற்றுகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம், மகன்/ மகள் உடன் தங்கி ஓய்வெடுக்க புஷ்பலதா பாய் வெளிநாட்டுக்கு கிளம்பிவிடுகிறார். மறைந்த இவரது கணவர் எஸ் பாய் அவர்கள் கனரா வங்கியில் வேலை பார்த்தவர் ஆவார்.
கொச்சியில் வசித்துவரும் புஷ்பலதாவின் மனதிற்குள் அவரது இளமை கால நினைவுகள் ஒவ்வொரு நாளும் டாப் கியரில் சுழன்றுக் கொண்டிருக்கின்றன. 1970ஆம் காலக்கட்டத்திலேயே ஓட்டுனர் உரிமத்தை ஸ்கூட்டரம்மா பெற்றுவிட்டார். அந்த சமயத்தில் கொச்சியின் மாநகர சாலைகளில் கூட அந்த அளவிற்கு அதிகமாக வாகனங்கள் சென்றிருக்காது.
ஆனால், அந்த சமயத்திலேயே வெஸ்பா ஸ்கூட்டரை பயன்படுத்தியது மட்டும் இல்லாமல், அதனை ஓட்டுவதற்கான டிரைவிங் லைசன்ஸையும் முறையாக பெற்றுள்ள புஷ்பலதா பாய், கேரளாவில் ஓட்டுனர் உரிமத்தை பெற்ற முதல் பெண் மட்டுமல்ல, கேரளாவில் டிரைவிங் பள்ளியை ஆரம்பித்த முதல் பெண்ணும் கூட.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளாவில் இன்று பொருளாதார ரீதியாக முன்னேற்றி இருக்கும் பல பெண்களுக்கு ஸ்கூட்டரம்மா எனப்படும் புஷ்பலதா பாய் நிச்சயமாக ஓர் ரோல் மாடல் ஆவார். இன்று கேரள பெண்கள் பலர் இளம் வயதிலேயே லடாக் வரையில் கூட தனியாளாக பைக்கில் பயணம் செய்கின்றனர். இதற்கெல்லாம் 1970ஆம் காலக்கட்டத்திலேயே விதை போட்டவர் புஷ்பலதா பாய் என சொன்னால் அது மிகையில்லை.


Click it and Unblock the Notifications








