லண்டனே பின்னால்தான்... கெத்து காட்டும் கொல்கத்தா... மம்தா அரசின் நடவடிக்கையால் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை!!
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை, மேற்கு வங்கம் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கொல்கத்தா ஒற்றை விஷயத்தில் பின்னுக்கு தள்ளியிருக்கின்றது. அது என்ன என்பதைக் கீழே காணலாம்.

சுற்று சூழல் மற்றும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. தொடர்ந்து, மக்களையும் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற்றும் நோக்கில் மானியம் மற்றும் வரி ரத்து போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலும் இதுமாதிரியான மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் பெரும் பங்கினை வகித்து வருகின்றன.

இந்த நிலையில், பிற மாநிலங்களைக் காட்டிலும் மேற்கு வங்கம் சற்று கூடுதல் தீவிர முயற்சியுடன் மின் வாகன பயன்பாட்டை மேம்படுத்தி வருவதாக புதிய ஆய்வின் அறிக்கை தெரிவிக்கின்றது. மாநில அரசு மேற்கொண்ட அதி-தீவிர முயற்சியினால் லண்டனே பின்னுக்கு செல்லும் வகையில் கொல்கத்தாவில் மின்வாகனங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அதாவது, லண்டனில் பயன்பாட்டில் இருப்பதைக் காட்டிலும் மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் அதிகளவில் மின் வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், மின்சார வாகன இயக்கத்தை வேகமாக ஏற்றுக் கொண்டு வரும் ஆறு உலகளாவிய மெகா சிட்டிகளில் கொல்கத்தா மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், லண்டனில் இயக்கப்படுவதைவிட அதிக மின்சார பேருந்துகள் கொல்கத்தாவில் இயக்கப்படுவது கூடுதல் சுவாரஷ்ய தகவலாக அமைந்திருக்கின்றது. சீனாவின் ஷென்சன், சிலியின் சாண்டியாகோ, துருக்கியின் இஸ்மீர், இங்கிலாந்தின் லண்டன், கனடாவின் வான்கூவர் மற்றும் இந்தியாவின் கொல்கத்தா ஆகிய இந்த ஆறு நகரங்களே உலகில் வேகமாக மின் வாகன மயமாதலை ஊக்குவிக்கும் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆய்வின்படி, சீனாவின் ஷென்சென் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. உலகின் 99 சதவீத மின்சார பேருந்துகள் இந்த நகரத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கும் கொல்கத்தாவில் 100க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர, 5 ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார பேருந்துகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்திருக்கின்றது. இந்த பேருந்துகள் தவிர ஆசியாவின் மிகவும் பழமையான ட்ராம் வாகனங்கள் இன்றளவும் கொல்கத்தாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதுவும், லண்டனை பின்னுக்கு தள்ள உதவியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து மின்சார பேருந்துகளும் உள்ளூர் தயாரிப்புகளாகும். இவையே தற்போது மாநிலத்தின் தூய்மை போக்குவரத்திற்கு பேருதவியாக அமைந்திருக்கின்றது.
குறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








