இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை தொடக்கம்! ஆற்றுக்கு அடியில் இவ்ளோ நேரம் பயணிக்குமா
இந்தியாவின் முதல் தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவிலேயே இந்த சேவை பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயில் போக்குவரத்திற்கு கிடைத்திருக்கின்றது. நூற்றுக் கணக்கான பயணிகள் தண்ணீருக்கு அடியில் ரயிலில் பயணிக்கும் அனுபவத்தைப் பெற்றனர்.
ஹூக்ளி ஆற்றிற்கு அடியிலேயே ரயில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. 30 மீட்டர் ஆழத்தில் ரயில் பயணிப்பதற்கான சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. ரயில் அதன் முதல் பயணத்தை நேற்றைய தினமே (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ஹவுரா ஸ்டேஷனில் மக்களின் ஆரவாரங்களுடன் இந்த ரயில் பயணம் தொடங்கியது.

ரயில் புறப்பட்டதும் பலர் மகிழ்ச்சியில் கரகோஷங்களை எழுப்பினர். குறிப்பாக, ரயில் நீருக்கு அடியில் நுழைந்ததும், மக்கள் மகிழ்ச்சியில் அதிகளவில் கத்தி கூச்சலிடச் செய்தனர். காலை 7 மணி அளவிலேயே ஹவுரா ஸ்டேஷனில் இருந்து முதல் பயணம் தொடங்கப்பட்டது. இதைப் போலவே மறுபக்கம் எஸ்பிளனேட் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயிலும் அதன் பயணத்தை தொடங்கியது.
இதில் பயணிக்க ஏராளமானோர் ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிலர் காலையில் முதல் ரயிலுக்கான டிக்கெட்டைப் பெற இரவில் இருந்தே காத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. மக்களின் இத்தகைய பெரும் ஆர்வத்திற்கு மத்தியிலேயே ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் முனையங்களுக்கு இடையேயான மெட்ரோல் ரயில் சேவை தொடங்கியது.

அண்மையில், பிரதமர் மோடி இரு ரயில் முனையங்களையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மார்ச் 6 ஆம் தேதி அன்றே இந்த நிகழ்வு அரங்கேறியயது. இந்த நிலையிலேயே தற்போது ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. மேலும், அவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்த ரயிலில் பயணத்தையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரயில் நீருக்கு அடியில் சென்றுக் கொண்டிருக்கும் ஃபீலை (உணர்வை) மக்களுக்கு வழங்கும் விதமாக சுரங்கத்தில் நீல நிற லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த லைட் தண்ணீர் ததும்புவதைப் பிரதிபலிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், ரயில் ஆற்றுக் கீழே கடக்கும்போது மட்டுமே அந்த லைட்டுகள் ஒளிரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

520 மீட்டர் நீளம் வரை ஆற்றுக்கு அடியில் செல்லும் வகையில் இந்த வழித் தடம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த இடைவெளியைக் கடக்க சுமார் 45 செகண்டுகள் ஆகும். கொல்கத்தா மெட்ரோ ரயில்வே நிர்வாகம் கிழக்கு - மேற்கு வழித்தட கட்டுமானப் பணிகளை 2009 ஆம் ஆண்டில் தொடங்கியது.
அதேசமயம், ஆற்றிற்கு கீழே சுரங்கம் அமைக்கும் பணிகள் 2017 இல் தொடங்கப்பட்டது. இந்த நிலையிலேயே அது தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. சுமார் 4,965 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய மெட்ரோ வழித்தடம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், 4.8 கிமீ நீளம் கொண்டதே ஹவுரா - எஸ்பிளனேட் வழித்தடம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

கொல்கத்தாவின் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை 47.93 கிமீட்டருக்கு பரந்திவிரிந்திருக்கின்றது. இதில், வடக்கு-தெற்கை இணைக்கும் வழித்தடம் மட்டுமே 32.13 கிமீட்டரைக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக கிழக்கு - மேற்கை இணைக்கும் வழித்தடம் இருக்கின்றது. இது சுமார் 9.3 கிமீ தூரத்திற்கு பரரந்துவிரிந்துக் காணப்படுகின்றது.
கொல்கத்தா மெட்ரோவின் மூன்றாவது வழித்தடமாக ஜோகா - எஸ்பிளனேட் வழித்தடம் இருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த தூரம் 6.5 கிமீ ஆகும். இவற்றுடனயே புதிய 4.80 கிமீ நீளம் கொண்ட ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் வழித்தடம் தற்போது இணைந்திருக்கின்றது. இந்த வழித்தடம் இன்னும் சில கிமீ தூரத்திற்கு விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான சுரங்க மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனுபவமே இதிலும் கிடைக்கும். ஆனால், புதிய அனுபவமாக, ரயில் நீருக்கு அடியில் பயணிக்கும்போது மட்டும் நீல நிற லைட்டுகள் சுரங்கத்தில் ஒளிரும். இது, தண்ணீருக்கு அடியில் பயணிக்கும் உணர்வை வழங்கும். வேறு எந்த புதிய அனுபவமும் இதன் வாயிலாக கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









