நாளை முதல் போலீஸ் கடுமை காட்ட போறாங்க... ஹெல்மெட் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது... எந்த ஊரில் தெரியுமா?
தலை கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற விதிமுறையை நாளை முதல் மீண்டும் அமலுக்கு கொண்டு வர காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தலை கவசம் அணியாததுதான், இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பே தலை கவசம்தான்.

எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் தலை கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பலர் தலை கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு காவல் துறையினர் தொடர்ச்சியாக அபராதம் விதித்து வருகின்றனர்.

அத்துடன் தலை கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் இன்னமும் தலை கவசம் அணிவதில்லை. எனவே அனைவரையும் தலை கவசம் அணிய வைக்கும் வகையில், விதிகளை கடுமையாக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக தலை கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு பெட்ரோல் பங்க்குகள் எரிபொருள் விற்பனை செய்ய கூடாது என்ற விதிமுறையை மீண்டும் அமல்படுத்த கொல்கத்தா காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 8ம் தேதி முதல் (நாளை) இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது. 60 நாட்களுக்கு இந்த விதிமுறை அமலில் இருக்கும்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''கொல்கத்தா காவல் துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த விதி அமலில் இருக்கும். தலை கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்த பெட்ரோல் பங்க்கிலும் எரிபொருள் விற்பனை செய்ய கூடாது. இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர் தலை கவசம் அணியாவிட்டாலும் எரிபொருள் விற்பனை செய்ய கூடாது'' என்றனர்.

முன்னதாக இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தலை கவசம் அணியாதது குறித்து, மேற்கு வங்க மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தனது கவலையை தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தலை கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என்ற விதிமுறையை கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்கத்தா காவல் துறையினர் அமலுக்கு கொண்டு வந்தனர்.

தற்போது அதே விதிமுறை மீண்டும் நாளை அமலுக்கு வரவுள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் இதேபோன்ற விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் எங்குமே கடுமையாக பின்பற்றப்படவில்லை. இன்னமும் கூட பெட்ரோல் பங்க்குகளில் பெயரளவுக்கு இந்த விதிமுறை தொடர்பான அறிவிப்பு பலகைகளை மட்டும் காண முடிகிறது.

தலை கவசம் அணிவதன் அவசியத்தை இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் உணர வேண்டும். இந்திய சாலைகளில் எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம். அந்த சமயங்களில் தலை கவசம் மட்டுமே தலையில் காயம் ஏற்படுவதை தவிர்த்து, உங்கள் உயிரை காப்பாற்றும். அத்துடன் தலை கவசம் அணிந்தால், வீணாக அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








