காமெடி கிங் வடிவேலுவின் முதல் கார் - சிறப்புத் தகவல்கள்!
புயலுக்கு பின் அமைதி என்பதுபோல் தமிழ் சினிமாவின் காமெடி களத்தை அதகளப்படுத்தி தற்போது அமைதி காத்து வரும் வைகை புயல் வடிவேலுவுக்கு இன்று 54வது பிறந்தநாள். மெல்ல மெல்ல வாழ்க்கையில் உயர்ந்து வரும் வேளையில் ஒரு சொந்த கார் வாங்கும்போது, சந்தோஷம், அந்தஸ்து இரண்டும் பன்மடங்கு கூடிவிடும்.
நடுத்தர வர்க்கம் முதல் பெரும் கோடீஸ்வரர்கள் வரை முதல் கார் மீது தீராத பற்று வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில், வடிவேலும் தனது முதல் கார் மீது இன்றுவரை தீராத காதல் வைத்திருக்கிறார். ஆம், சினிமாவில் நல்ல சம்பாத்தியத்தை பெற்றவுடன் வடிவேலு சொந்தமாக வாங்கிய முதல் கார் டாடா சியாரா.

இப்போது பல கார்கள் இருந்தாலும், தனது முதல் காரான டாடா சியாரா எஸ்யூவி மீது மிகுந்த பாசமும், நேசமும் கொண்டிருக்கிறார். எஸ்யூவி வகையிலான இந்த வாகனத்தை இன்றைக்கும் முழுமையான பராமரிப்பில் வைத்திருப்பதோடு, அதனை அடிக்கடி பயன்படுத்தியும் வருகிறார் வடிவேலு.

ஓய்வு நேரங்களில் தனது முதல் காரான டாடா சியாராவை தானே கழுவி சுத்தப்படுத்துவதை வடிவேலு வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தற்போது மட்டுமல்ல, பிஸியாக இருந்த நேரத்திலும் இந்த வழக்கத்தை கொண்டிருந்தார். யாரிடமும் பேசுவதைவிட காரிடம் அதிகம் பேசுவேன் என வடிவேலு அவ்வப்போது குறிப்பிடுவார் என நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருநேரத்தில் சொகுசு மாடல் போல் கருதப்பட்ட டாடா சியாரா எஸ்யூவியின் மறுபக்கத்தை தொடர்ந்து காணலாம்.
டாடா சியாரா
1991ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனப் பிரிவில் இறங்கியபோது அறிமுகம் செய்தபோது முதல் மாடல் டாடா சியாராதான். மூன்று கதவுகள் கொண்ட எஸ்யூவி மாடலாக வந்தது. 1991 முதல் 2000ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது.
அடிப்படை மாடல்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிஎல் பிக்கப் டிரக் அடிப்படையில் சியாரா உருவாக்கப்பட்டது. மேலும், டிசி டிசைன் நிறுவனத்தின் ஆரியா கான்செப்ட்டின் டிசைன் தாத்பரியங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த எஸ்யூவியின் பி பில்லர் மற்றும் சி பில்லருக்கு இடையில் கொடுக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னல் இந்த காரில் கவர்ந்த ஒன்று. ஆனால், கேபினுக்குள் அமர்ந்திருப்பவர்களுக்கு இந்த கண்ணாடிதான் பிரச்னையாக இருந்தது.
எஞ்சின்
முதலில் 1.9 லிட்டர் டீசல் எஞ்சினுடன் டாடா சியாரா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 89 எச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும் வகையில், டர்போசார்ஜருடன் கூடிய 1.9லிட்டர் எஞ்சின் கொண்ட மாடலாக வெளியிடப்பட்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. ஆர்டரின் பேரில் 4 வீல் டிரைவ் மாடலிலும் விற்பனை செய்யப்பட்டது.
டாப் ஸ்பீடு
முதலில் வெளியிடப்பட்ட 1.9லிட்டர் எஞ்சின் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 135கிமீ வேகத்தில் செல்லத்தக்கதாகவும், பின்னர் டர்போசார்ஜருடன் வெளியிடப்பட்ட மாடல் அதிகபட்சமாக மணிக்கு 160கிமீ வேகத்தில் செல்லத்தக்கதாகவும் இருந்தது.
பல சிறப்பம்சங்கள்
முதல்முறையாக பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகளை கொண்ட மாடல் என்ற பெருமை டாடா சியாராவுக்கு உண்டு. தனிநபர் பயன்பாட்டுக்கான முதல் டீசல் கார், அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங் மற்றும் டாக்கோமீட்டர் போன்ற புதிய அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
குறைகள்
பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஸ்யூவிக்கு அதுவே பிரச்னையானதாக பல புகார்கள் எழுந்தன. தொழில்நுட்ப பிரச்னைகள் தவிர்த்து இதன் பராமரிப்பு செலவீனமும் மிக அதிகமாக இருந்ததால், இது மார்க்கெட்டிலிருந்து வெகு விரைவாக வழக்கொழிந்தது.
வடிவம்
4,410மிமீ நீளம், 1,710மிமீ அகலம் கொண்ட இந்த எஸ்யூவி மாடல் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இது 2,400 மிமீ வீல்பேஸ் கொண்டது. 1,530 கிலோ கெர்ப் எடை கொண்டது.


Click it and Unblock the Notifications







