இரவோடு இரவாக... அரசு பேருந்து திருட்டு!! ஸ்கெட்ச் போட்டு தூங்கிய கொள்ளையர்கள் - தெலுங்கானா விரைந்த போலீஸார்!
ஆட்டோமொபைல் வாகனங்கள் முதன்முதலாக எப்போது பயன்படுத்த துவங்கப்பட்டதோ அப்போதில் இருந்தே வாகன திருட்டு சம்பவங்களும் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. புதிய மற்றும் செகண்ட்-ஹேண்ட் வாகனங்களின் விற்பனையை போன்று திருடப்படும் வாகனங்களை விற்பதற்கென்றே பெரிய அளவிலான நெட்வொர்க் நமது நாட்டில் செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் இருப்பதாலும், இத்தகைய சம்பவங்கள் மிகவும் ரகசியமாக நடைபெறுவதாலும் வாகன திருட்டுகள் பெரியதாக கண்டுக்கொள்ள படுவதில்லை. ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனம் திருடு போகும்போது அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உருமாறி, பரபரப்புக்கு உள்ளாகிறது. சமீபத்தில் கூட மஹாராஷ்டிராவில் சரக்கு இரயில் ஒன்று காணாமல் போனது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

அதனை தொடர்ந்து மற்றொரு திருட்டு சம்பவமாக, நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கலபுர்கி மாவட்டத்தில் சின்சொலி என்ற பகுதியில் பேருந்து நிலைய டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பேருந்து ஒன்று காணாமல் போகியுள்ளது. பிடார் என்ற பகுதியில் இருந்து கிளம்பிய அரசு பேருந்தை கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி இரவு 9:15 மணியளவில் சின்சொலி பேருந்து நிலையத்தில் நடைமேடை 2இல் வழக்கம்போல் நிறுத்திவிட்டு ஓட்டுனரும், நடத்துனரும் ஓய்வெடுக்க சென்றுள்ளனர்.
பின்னர் அடுத்த நாள் (பிப்ரவரி 21) காலையில் பேருந்தை எடுக்க ஓட்டுனர் வந்துள்ளார். ஆனால் பேருந்து அங்கு இல்லை. இரவில் பேருந்தை தெரியாமல் வேறேதேனும் நடைமேடையில் நிறுத்திவிட்டோமோ என்று நினைத்த ஓட்டுனர் டிப்போ முழுவதும் தேடியும் பேருந்து கிடைக்கவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சார்பில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அருகில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து உள்ளனர். அதில் பேருந்து திருடப்படும் காட்சிக்கள் பதிவாகி இருந்தன. நடைமேடை 2இல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பேருந்தை நள்ளிரவு 3.30 மணியளவில் சில மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து பேருந்து திருடு போனது குறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் இருந்து புகாரை போலீஸார் எழுதி பெற்று கொண்டனர்.
பேருந்து எங்கு உள்ளது என்பதை கண்டறிய அருகில் இருந்த சுங்க சாவடிகளுக்கு தகவல் தெரிவித்த போலீஸார், திருடப்பட்ட அரசு பேருந்து அந்த வழியாக கடந்து சென்றதா என விசாரிக்க துவங்கினர். இந்த விசாரணைகளின் மூலம் கொள்ளையர்கள் பேருந்தை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளதை போலீஸார் கண்டறிந்தனர். சின்சொலி நகரில் இருந்து மிரியானா, தண்டூரா பகுதிகள் வழியாக தெலுங்கானாவிற்கு பேருந்தை கடத்தி சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் தெலுங்கானாவிற்கு விரைந்துள்ளனர். பேருந்தை திருடுவதற்கு முன் கொள்ளையர்கள் அதே பேருந்து நிலைய டிப்போவிற்குள் நடமாடி வந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்ற செயலில் ஈடுப்பட்டிருக்கலாம் என சிலரை போலீஸார் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். அரசு பேருந்து திருப்பட்டிருக்கும் சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் வைரலாகி உள்ளது.
கே.ஆர்.எஸ்.டி.சி-க்கு சொந்தமான அரசு பேருந்து திருடப்படுவது கர்நாடகாவில் இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் துமாகுரு மாவட்டத்தில் பேருந்து நிலைய டிப்போவிற்குள் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து திருடப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையை அடுத்து அந்த திருடப்பட்ட பேருந்து 30கிமீ தொலைவில் இருப்பது தெரியவந்தது. அந்த சம்பவத்தில் திருடிய பேருந்தை விட்டுவிட்டு ஓடிய கொள்ளையர்கள் பேருந்தில் இருந்த டீசலை திருடி சென்றனர்.
NOTE: Images Were Used For Representation Purpose Only


Click it and Unblock the Notifications