ஷோரூமில் இருந்து விலை உயர்ந்த பைக்கை நைசாக லவட்டி சென்ற பலே கொள்ளையன்... எப்படி தெரியுமா?
ஷோரூம் ஊழியர்களை நூதன முறையில் ஏமாற்றி விலை உயர்ந்த பைக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொதுவாக இரு சக்கர வாகன டீலர்கள்தான் வாடிக்கையாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள். நீங்கள் கொஞ்சம் அசந்தாலும், டீலர்ஷிப்களில் பணியாற்றும் ஊழியர்கள் உங்களை நன்றாக ஏமாற்றி விடுவார்கள். ஆனால் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், தற்போது வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வாடிக்கையாளர் என்ற போர்வையில் வந்த கொள்ளையன் டீலர்ஷிப் பணியாளர்களை நூதன முறையில் பைக்கை திருடி சென்றுள்ளார். பெங்களூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கேடிஎம் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஒருவர் வந்துள்ளார். கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிளை வாங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேடிஎம் ஆர்சி 390 மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட் பைக் ஆகும். பெங்களூர் நகரில் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 2.44 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த பைக்கை வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்த நபர் தன்னை ராஜ்குமார் என்கிற ஜான் ராஜூ என்று அறிமுகம் செய்து கொண்டார்.

அத்துடன் பைக்கை வாங்குவதற்கு முன்னதாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என அவர் கேட்டார். இதற்காக தனது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் தொடர்பு எண்ணை அவர் கொடுத்தார். இதனால் அவரை நம்பிய டீலர்ஷிப் பணியாளர்கள் பைக்கை டெஸ்ட் டிரைவிற்கு கொடுத்து விட்டனர். சரியாக மாலை 4.23 மணியளவில் அவர் ஷோரூமில் இருந்து புறப்பட்டார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவேயில்லை. இதனால் ஷோரூம் பணியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே பைக்கை டெஸ்ட் டிரைவ் எடுத்து சென்றவரை, செல்போன் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரது செல்போன் 'நாட் ரீச்சபிள்' என வந்தது. இதனால் ஷோரூம் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன்பின் பைக்கை டெஸ்ட் டிரைவ் எடுத்து சென்றவர் கொடுத்த டிரைவிங் லைசென்ஸை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அது போலியானது என தெரியவந்தது. இதன்பின்புதான் வாடிக்கையாளர் என்ற போர்வையில் போலியான டிரைவிங் லைசென்ஸை கொடுத்து அந்த நபர் பைக்கை திருடி சென்றது அவர்களுக்கு தெரியவந்தது.

இதன்பின் இச்சம்பவம் தொடர்பாக இந்திரா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. பைக்குடன் தலைமறைவானவரை பிடிக்க போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக ஷோரூமின் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கை திருடி செல்வதற்கு முன்னதாக அந்த நபர் டெஸ்ட் டிரைவ் செயல்முறைகள் அனைத்தையும் கூர்ந்து உற்று நோக்கியுள்ளார். அதன்பின்பே செயலில் இறங்கி பைக்கை திருடி சென்றுள்ளார் என கருதப்படுகிறது. அவர் திருடி சென்ற பைக்கின் விபரங்கள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அவரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








