ஷோரூமில் பைக்குகளை தவறாகக் கையாண்ட கேடிஎம் ஊழியர்கள்!
கேடிஎம் ஷோரூம் ஊழியர்கள் சிலர் புதிய ட்யூக் பைக்குகளை தவறாகக் கையாளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
பஜாஜ் நிறுவனத்தின் அங்கமான கேடிஎம் நிறுவனத்தின் ட்யூக் பைக்குகள் இந்தியாவின் முதன்மையான ஸ்போர்ட்டி பைக்குகளாக இளைஞர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் புதிய ட்யூக் 250 மற்றும் 2017 ட்யூக் 390 ஆகிய இரண்டு மாடல்களை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தியது. கேடிஎம் நிறுவன ஊழியர்கள் சிலர் ஒரு அந்த பைக்குகளை தவறாகக் கையாண்டு புதிய சர்சையில் சிக்கியுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் உள்ள வழுத்தகாடு எனும் பகுதியில் உள்ள கேடிஎம் டீலர்ஷிப் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் ஆர்வமிகுதியால் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 390 பைக்குகளை தவறாகவும், அபாயகரமாகவும் கையாண்டுள்ளனர்.

கேடிஎம் டீலர்ஷிப்பில் வேலை செய்து வந்த அந்த இளைஞர்கள் புதிய கேடிஎம் பைக்குகளை தவறாகக் கையாளும் வீடியோவை தங்களது ஃபேஸ்புக் பக்கத்திலும் லைவ் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் பைக்குகளை ஆன் செய்து இஞ்சினை அதிகபட்ச ஆக்ஸிலரேட் செய்வதோடு, ஆட்டம் பாட்டம் என பைக்குகள் மீது ஏறி அமர்ந்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது செயல்களை ஃபேஸ்புக்கில் லைவ் செய்தது மட்டுமல்லாமல் கேடிம் இந்தியா, பஜாஜ் இந்தியா, தாங்கள் வேலை செய்த கேடிஎம் டீலரின் ஃபேஸ்புக் பக்கங்களோடு வேறு சில பக்கங்களுக்கும் டேக் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் டேக் செய்யும் போது அந்த போஸ்ட், டேக் செய்யப்படும் பக்கத்தில் நேரடியாக பதிவாகும். கேடிஎம் டீலர்ஷிப்பை சேர்ந்த 5 இளைஞர்கள் இந்த தவறான செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

டீலர்ஷிப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள புதிய பைக்குகளை, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தவறாக உபயோகப்படுத்தியிருப்பது நாடு முழுக்க பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது. மேலும் இவ்வாறு சேதப்படுத்தப்பட்ட புதிய பைக்குகளை வாடிக்கையாளர்களிடம் விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனினும், இந்த விஷயம் கேடிஎம் நிறுவனத்தின் கவனத்திற்கு தற்போது சென்றுள்ளது. இது குறித்து விசாரனை நடத்தியுள்ள அந்நிறுவனம் தவறான செயலில் ஈடுபட்ட அந்த 5 இளைஞர்களையும் உடனடியாக பணியில் இருந்து நீக்கியுள்ளது.

சம்பவம் குறித்து கேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷோரூமில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளைத்தான் அவர்கள் உபயோகப்படுத்தினர், வாடிக்கையாளர்களுக்கு அவை விற்கப்படாது, இந்த நிகழ்வை சுட்டிக்காடியவர்களுக்கு நன்றி என்றும் நாட்டில் உள்ள 325க்கும் அதிகமான டீலர்ஷிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவையை தொடரும் என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கேடிஎம் டீலர்ஷிப் ஊழியர்கள் ஃபேஸ்புக்கில் லைவ் செய்த வீடியோவை மேலே உள்ள பகுதியில் க்ளிக் செய்து காணுங்கள்...


Click it and Unblock the Notifications








