பிரதமர் மோடி திறந்த வைத்த உலகின் நீளமான சுரங்கப்பாதை... உள்ளே அதிவேகத்தில் சென்றால் ஆப்பு தான்...
சில தினங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அடல் சுரங்கத்தில் போக்குவரத்து நெரிசலையும் விபத்து போன்ற அசம்பாவிதங்களையும் தடுக்க 30 போலீசார் போக்குவரத்து பணியில் ஈடுப்படுத்தபட்டுள்ளனர். அவர்கள் கூறும் இந்த சுரங்கப்பாதைக்கான போக்குவரத்து விதிகளை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதையை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்பகுதி மக்களுக்கு நீண்ட கால கனவாக இருந்து வந்த இந்த சுரங்க பாதை உலகளவில் இந்தியாவின் பெருமையை மேலும் கூட்டியுள்ளது.

அதேநேரம் சுரங்கம் திறக்கப்பட்ட 72 மணிநேரங்களில், அதாவது 3 நாட்களுக்கு உள்ளாக சுமார் மூன்று விபத்துக்கள் இந்த சுரங்கத்திற்குள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த 3 விபத்துகளுக்கும் அடல் சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதே காரணமாக கூறப்பட்டது.

இருப்பினும் இப்போதும் அடல் சுரங்கப்பாதைக்குள் பெரும்பான்மையான வாகன ஓட்டிகள் மிகவும் ஆக்ரோஷமாகவே வாகனங்களை ஓட்டுவதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடல் சுரங்கப்பாதைக்குள் அதிகப்பட்சமாக 80 கிமீ வேகத்தில் தான் செல்ல வேண்டும்.

ஆனால் நிறைய வாகன ஓட்டிகள் இந்த வேக கட்டுப்பாட்டு விதியை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அடல் சுரங்கப்பாதைக்குள் செல்பி எடுப்பதற்காக அங்கங்கு வாகனங்களை நிறுத்துவதாகவும் புகார்கள் வந்ததை அடைத்து, சுரங்கத்திற்கு உள்ளே போக்குவரத்து பணியில் 30 போலீசார்கள் உட்படுத்துப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல்சானில் இருந்து சுரங்கத்தின் தென் பகுதி வரையிலான வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்று ஹிமாச்சல பிரதேசம், குல்லு மாவட்டத்தின் சூப்பிரண்டு போலீஸ் கௌரவ் சிங் தெரிவித்துள்ளார். சுரங்கத்திற்குள் எந்தவொரு காரணமுமின்றி எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த முடியாது.

ஆனால் போக்குவரத்து விதிகளை மீறுவது அங்கிருக்கும் போலீசாருக்கு தெரியவந்தால் சட்டம் தன் கடமை செய்யும் என கௌரவ் சிங் கூறியுள்ளார். நிர்ணயித்தை காட்டிலும் அதி வேகத்தில் செல்பவர்களுக்கு உடனடியாக அபராதங்கள் விதிக்கப்படும். இதற்காக சுரங்கத்திற்குள் டாப்ளர் ரேடார்கள் என அழைக்கப்படும் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கருவி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் எஸ்பி கூறியுள்ளார்.

இதற்கான போக்குவரத்து பணிகளில் குல்லு மற்றும் லஹால்-ஸ்பிட்டி நகர போலீசார் இனி ஈடுப்பட உள்ளனர். அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் பொது முகவரி அமைப்பின் மூலம் எச்சரிக்கப்படுவர். மேலும் இத்தகைய விதி மீறுபவர்களுக்கு அப்போதே தண்டனை வழங்க மோட்டார்சைக்கிளிலும் சில போலீசார் ரோந்து பணியில் ஈடுப்படுவர்.

இவை மட்டுமின்றி விபத்து மற்றும் விதி மீறல்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க 8219681600 என்ற தொலைப்பேசி எண்ணையும் பொது மக்களுக்கு எஸ்பி கௌரவ் சிங் வழங்கியுள்ளார். சுரங்கப்பாதைக்குள் ஓவர்டேக் செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சுரங்கம் திறக்கப்பட்ட சில நாட்களில் உள்ளே பைக் பந்தய போட்டிகளே நடைபெற்றது என்று தகவல்கள் கிடைத்துள்ளதால், ஓவர்டேக் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்று இருக்கும். ஆனால் அதிநவீன கருவிகளுடன் போலீசார் அடல் சுரங்கப்பாதையில் போக்குவரத்து பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால் இனி இவ்வாறான விபத்துகளும் விதி மீறல்களும் பெரிய அளவில் நடைபெறாது என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications








