உங்கள் குப்பையை நீங்களே எடுத்து செல்லுங்கள்!! லடாக்கில் மோட்டார்சைக்கிள் ரைடர்களின் பாராட்டுக்குரிய செயல்!
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கிட்டத்தட்ட பெரும்பான்மையான மாநிலங்களில் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மக்கள் மீண்டும் மாநிலங்களை விட்டு மாநிலம் பயணம் செய்ய ஏற்கனவே துவங்கிவிட்டனர்.

ஒரு மாத காலத்திற்கும் மேலாக வீட்டிற்குள் முடங்கி இருந்ததினால் வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா செல்வோர் கூட தற்சமயம் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மலை பிரதேச பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்து வருகிறோம். சிறிது கூட்டம் கூடினாலே சுற்றுலா பகுதி மனிதர்களினால் எந்த அளவிற்கு குப்பையாகும் என்பது நமக்கு தெரியும். அதிகளவில் கூட்டம் என்றால் சொல்லவா வேண்டும்...

அப்படி தான் லடாக்கில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சுற்றுலா மேற்கொண்ட குடும்பத்தினர் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலை சாலையில் போட்டு சென்றுள்ளனர். இவ்வாறான மக்கள் இருக்கும்போது, அதனை எதிர்த்து கேட்கக்கூடிய மக்களும் இருக்க தானே செய்வார்கள்.
இந்த குடும்பத்தினரின் செயலை கண்ட மோட்டார்சைக்கிள் ரைடர் ஒருவர் அவர்களை விரட்டி சென்று, உங்கள் குப்பைகளை நீங்களே எடுத்து செல்லுங்கள் என கொடுத்து அனுப்பியுள்ளார். இதுகுறித்த வீடியோவினை கீழே காணலாம்.
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள லடாக் மோட்டார்சைக்கிள் ரைடர்களின் மனதிற்கு நெருக்கமான பகுதியாக விளங்குகிறது. நம்மூரில் இருந்து அவ்வளவு தொலைவிற்கு மோட்டார்சைக்கிளில் செல்பவர்கள் குறைவு தான்.
ஆனால் வட இந்தியாவில் ஜம்மூ காஷ்மீருக்கு அருகில் உள்ள மாநிலங்களை சேர்ந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் அடிக்கடி செல்லும் பகுதி லடாக் ஆகும். லடாக் என ஒரு வார்த்தையில் கூறிவிடுகிறோம், ஆனால் ஏகப்பட்ட அழகான, அதேநேரம் உயரமான & ஆழமான பகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது.

குறிப்பாக மோட்டார்சைக்கிளில் செல்வதற்கு மிகவும் ஏற்ற பகுதியாக லடாக் விளங்குகிறது. இத்தகைய பகுதியில் தன் கண் முன் ஒருவர் குப்பையை போட்டு செல்கிறார் என்றால் எந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலருக்கு தான் கோபம் வராமல் இருக்கும்?
ஃபார்ச்சூனரில் வந்த அந்த குடும்பத்தை ஏற்கனவே ஒருவர் முன்னே சென்று மடக்கி நிறுத்தியுள்ளார். இதில் இருந்து தான் இந்த வீடியோ துவங்குகிறது. அதன்பின் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் ரைடர் தான் அவர்கள் சாலையில் போட்ட பாட்டிலை எடுத்து வருகிறார்.

லடாக் மட்டுமில்லாமல் நாட்டின் எந்தவொரு பகுதியில் இவ்வாறான சம்பவம் நடந்திருந்திருந்தாலும் இந்த இருவர் இவ்வாறு தான் நடத்திருப்பார்கள் என நம்புவோம். ஏனெனில் இவ்வாறான இளைஞர்கள் தற்சமயம் நாடு முழுவதும் தேவைப்படுகிறார்கள்.

அதேபோல் தான் கீழே போட்ட பாட்டிலை ஒருவர் எடுத்து வந்து மீண்டும் தன்னிடமே கொடுத்தால், அனைவருமே இந்த குடும்பத்தினரை போன்று, தங்களது தவறை உணர்த்து பெற்று கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் சிலருக்கு இது ஆத்திரத்தை வரவழைக்கலாம். சாலை என்று கூட பார்க்காமல், அந்த ரைடர்களிடம் சண்டை போட்டிருப்பார்கள்.
ஆனால் இங்கு அவ்வாறு எந்த சம்பவமும் நிகழ்வில்லை. மன்னித்து கொள்ளுங்கள், மன்னித்து கொள்ளுங்கள் என்று அவர்கள் பேசுவது வீடியோவில் இரண்டு, மூன்று இடங்களில் கேட்க முடிகிறது. இதனால் நிச்சயம் இந்த குடும்பத்தினர் மீண்டும் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications








