ராயல் என்பீல்டு பைக்கை வாங்கிய பெண் போலீஸ்... நச்சுனு சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... என்ன தெரியுமா?
காவல் துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், ராயல் என்பீல்டு பைக்கை வாங்கியுள்ளார்.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அட்டகாசமான தோற்றம், சௌகரியமான பயணம் உள்ளிட்ட காரணங்களால்தான் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். ராயல் என்பீல்டு பைக் வைத்திருப்பதை கௌரவமாக கருதக்கூடியவர்களும் இருக்கின்றனர்.

இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய இரண்டு பைக்குகளும்தான் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதன்மையான மாடல்களாக உள்ளன. இந்த இரண்டு பைக்குகளும் 650 ட்வின்ஸ் என செல்லமாக அழைக்கப்படுகின்றன.

மற்ற ராயல் என்பீல்டு பைக்குகளை போலவே, இந்த பைக்குகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மாதாந்தோறும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை அவை ஈட்டி தந்து கொண்டுள்ளன. இந்த இரண்டு பைக்குகளில், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மாடல்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான ட்வின்-சிலிண்டர் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையையும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பெறுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளை காவல் துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் தற்போது வாங்கியுள்ளார்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். பைக்கர் பிரகாஷ் சௌத்ரி என்னும் யூ-டியூப் சேனலில் அந்த காணொளி வெளியாகியுள்ளது. புத்தம் புதிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை, அந்த காவல் துறை அதிகாரி டெலிவரி எடுப்பதை அந்த காணொளியில் காண முடிகிறது.

தெலங்கானா மாநிலத்தில் இருந்து இந்த காணொளி வெளிவந்துள்ளது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை வாங்கியவுடன், அந்த காவல் துறை அதிகாரி சாலையில் வலம் வருவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது. அவருடன் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இரண்டு பேரும் பயணம் செய்துள்ளனர்.

பைக்குகளை வாங்குவது ஏன்? என்ற கேள்வி, அந்த காவல் துறை அதிகாரியிடம் கேட்கப்பட்டது. பைக்குகளை ஓட்டுவதில் ஆண்களுக்கு இணையான திறன் பெண்களிடமும் உள்ளது என்பதை நிரூபிக்கவே பைக்குகளை வாங்குவதாக இந்த கேள்விக்கு அந்த காவல் துறை அதிகாரி பதில் அளித்தார். இது அவரது முதல் இரு சக்கர வாகனம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ஸ்கூட்டர்களை பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறுவதை இந்த காணொளியில் நம்மால் காண முடிகிறது. அத்துடன் கடந்த 2015ம் ஆண்டு தனது முதல் 350 சிசி ராயல் என்பீல்டு பைக்கையும், அதன்பின்னர் கடந்த 2017ம் ஆண்டு 500 சிசி ராயல் என்பீல்டு பைக்கையும் அவர் வாங்கியுள்ளார். இரவு நேரங்களில் ரோந்து செல்வதற்கும் கூட தனது பைக்குகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.

இதற்காக உயர் அதிகாரிகளிடம் இருந்து கடந்த காலங்களில் பாராட்டுக்களையும் அவர் பெற்றுள்ளார். ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை பொறுத்த வரை, ஒரு முறை இந்த காவல் துறை அதிகாரி சக பைக் ரைடர்களுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை அவர் முதல் முறையாக ஓட்டினார்.
ஆரம்பத்தில் பைக்கின் எடையை பார்த்து அவர் கொஞ்சம் நம்பிக்கை அற்றவராகதான் இருந்தார். எனினும் சக ரைடர்கள் அவரை ஊக்குவித்தனர். இதன் காரணமாக அவர் அந்த பைக்கை நேசிக்க தொடங்கினார். இறுதியாக தனக்கென சொந்தமாக ஒரு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை அவர் வாங்கி விட்டார்.


Click it and Unblock the Notifications








