27 வயதில் 1 கோடி ரூபாய் காருக்கு ஓனர் ஆகி உள்ள இந்த விஐபி-ஐ தெரிகிறதா? குடும்பத்துடன் ஷோரூமில்...!!
லல்லியன்சுவாலா சாங்டே (Lallianzuala Chhangte), இந்தியாவின் வளர்ந்துவரும் முன்னணி கால்பந்து நட்சத்திரம். இந்திய தேசிய அணிக்காகவும், இந்திய சூப்பர் லீக் தொடரிலும் பங்கேற்றுள்ள இவர் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர். 2024-25ஆம் சீசனுக்கான மும்பை சிட்டி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள லல்லியன்சுவாலா சாங்டே புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி300 (Mercedes-Benz GLC300) காரை வாங்கியுள்ளார். இந்திய கால்பந்து வீரர் லல்லியன்சுவாலாவை பற்றியும், அவர் புதியதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபலங்களாகி விட்டாலே புதியது, புதியதாக சொகுசு கார்களை வாங்க ஆரம்பித்து விடுவோம். இதில், கால்பந்து வீரர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா. மிசோரம் மாநிலத்தில் லுங்லே என்கிற மலைப்பிரதேச பகுதியில் பிறந்தவரான லல்லியன்சுவாலா சாங்டே அவரது அதிவேகமான ஓட்டத்தினால் புகழ்பெற்றவராக விளங்குகிறார். 27 வயதான சாங்டேவின் அதிகப்பட்ச ஓட்ட வேகம் மணிக்கு 35.80கிமீ ஆகும்.

இதன் காரணமாகவே, கால்பந்து போட்டிகளில் முன்கள வீரராக களமிறக்கப்படும் லல்லியன்சுவாலா சாங்டே இந்திய தேசிய கால்பந்து அணியில் 2015ஆம் ஆண்டில் இருந்து பங்கேற்று வருகிறார். அதாவது, தனது 18 வயதில் இருந்து தேசிய அணிக்காக விளையாடிவரும் இவர், இதுவரையில் 38 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 8 கோல்களை அடித்துள்ளார். லல்லியன்சுவாலாவை பிரபலப்படுத்தியதில் இந்திய சூப்பர் லீக்கின் பங்கு முக்கியமானது.
2016ஆம் ஆண்டில் இந்திய சூப்பர் லீக்கில் நார்த் ஈஸ்ட் யூனிடெட், டெல்லி டைனாமோஸ், சென்னையின், மும்பை சிட்டி என பல்வேறு அணிகளுக்காக இதுவரையில் சுமார் 160 போட்டிகளில் விளையாடி 41 கோல்களை அடித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் இருந்து மும்பை சிட்டி அணிக்காக விளையாடிவரும் லல்லியன்சுவாலா சாங்டே வரவிருக்கும் 2024-25 சீசனுக்கு மும்பை சிட்டி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பு மும்பை சிட்டி அணியின் கேப்டனாக இருந்த ராகுல் பேகே பெங்களூர் எஃப்.சி அணிக்கு சென்ற காரணத்தினால், அந்த பதவி லல்லியன்சுவாலாவுக்கு வந்துள்ளது. இவ்வாறு கால்பந்து விளையாட்டில் அடுத்தடுத்த நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் லல்லியன்சுவாலா சாங்டே புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி300 காரை வாங்கி உள்ளார்.
சாங்டே ஷோரூம் ஒன்றில் இருந்து கருப்பு நிறத்தில் புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. கால்பந்து வீரர் லல்லியன்சுவாலா சாங்டே காரை டெலிவிரி பெற வருகிறார் என்றவுடனே ஷோரூம் அதிகாரிகள் ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் சாங்டே ஷோரூமுக்கு வந்திருந்தார்.

ஏற்கனவே கூறியதுபோல், புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி300 காரை கருப்பு நிறத்தில் லல்லியன்சுவாலா சாங்டே வாங்கியுள்ளார். இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்றாகும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.75.90 லட்சத்தில் இருந்து ரூ.76.90 லட்சம் வரையில் உள்ளன. காரின் ஆன்-ரோடு விலைகள் ரூ.1 கோடியை தாண்டிவிடும்.
இவ்வளவு விலைக்கு ஏற்ப உயர் தரத்திலான கேபின் உடன் இந்த பென்ஸ் கார் உருவாக்கப்படுகிறது. இந்த காரினுள் எம்பக்ஸ் மல்டிமீடியா சிஸ்டம், வாய்ஸ் கண்ட்ரோல், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய முன் இருக்கைகள் உள்பட ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2.0 லிட்டர் 4-சிலிண்டர் எம்254 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதனுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிஎல்சி ஆனது மெர்சிடிஸின் லக்சரி எஸ்யூவி கார் ஆகும். இவ்வாறான விலையுயர்ந்த எஸ்யூவி கார்களை வாங்கவே பெரும்பாலான விஐபிகள் விரும்புகின்றனர். அத்தகைய வாடிக்கையாளர்களுள் ஒருவராக இந்திய கால்பந்து வீரர் லல்லியன்சுவாலா சாங்டே இணைந்துள்ளார். மெர்சிடிஸ் ஜிஎல்சி300 காரை அதன் கம்பீரத்திற்கு ஏற்ப கருப்பு நிறத்தில் சாங்டே வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications









