டெல்லியில், ஓட்டல் சுவரில் மோதி நசுங்கிய லம்போர்கினி சூப்பர் கார்!
டெல்லியில் லம்போர்கினி சூப்பர் கார் ஒன்று சுவரில் மோதி நசுங்கி விபத்துக்குள்ளானது. அந்த ஓட்டலில் பார்க்கிங் செமுயன்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.லீமெரிடியன் ஓட்டலில்தான் இந்த சம்பவம் நடந்தது. ஓட்டலின் வாலே பார்க்கிங் பணியாளர்தான் காரை கட்டுப்படுத்த தெரியாமல் சுவரில் மோதிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஓட்டல் நிர்வாகம் இந்த விபத்துக்கு பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், காரில் இதுபோன்று பாதிப்பு ஏற்பட்டாலும், காணாமல் போனாலும் நிர்வாகம் பொறுப்பல்ல என்று பார்க்கிங் சீட்டின் பின்புறம் எழுதியிருப்பதை சுட்டிக் காட்டி உரிமையாளரை நோகடித்துள்ளனர். இதனால், அங்கு நிர்வாகத்தினருக்கும், உரிமையாளருக்கும் பெரும் வாக்குவாதம் நடந்துள்ளது.

மாடல்
சுவரில் மோதி விபத்துக்குள்ளான கார் லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர் மாடல். இந்தியாவில் இதுவரை விற்பனை செய்யப்பட்டிருக்கும் 100 கார்களில் இதுவும் ஒன்று.

மதிப்பு
இது இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்படுகிறது. ரூ.4 கோடி மதிப்பு கொண்டது. இந்த நிலையில், சுவரில் மோதிய வேகத்தில் காரின் பானட் பகுதி அதிக சேதமடைந்துவிட்டது. சரிசெய்வதற்கு பெரும் செலவு பிடிக்கும். இன்ஸ்யூரன்ஸ் இருந்தாலும் புதிய காரை இப்படி நசுக்கி கொடுத்திருப்பது உரிமையாளரை கடும் வேதனையடைய வைத்துள்ளது.

கவனம்
இன்றைய நிலையில் எந்த வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களுக்கு சென்றாலும் இதுபோன்று வாலே பார்க்கிங் வசதியைத்தான் பலரும் விரும்புகின்றனர். ஏனெனில், அவர்கள் அமைத்திருக்கும் அந்த குறுகலான பாதையில் காரை ஏற்றி இறக்குவது கடினமாக இருப்பதுடன், சிலர் குடும்பத்துடன் வாயிலில் சட்டென இறங்கி செல்ல விரும்புகின்றனர். ஆனால், அதுபோன்று செல்கையில் இதுபோன்ற கவனக்குறைவாக செயல்படும் பணியாளர்களால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

கவனம் தேவை
10 நிமிடங்கள் தாமதமானாலும் பெரும்பாலும் காரை நாமே பார்க்கிங் செய்து வருவது நல்லது. குறிப்பாக, விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். வாலே பார்க்கிங் பணியாளருக்கு இதுபோன்ற விலையுயர்ந்த கார்களை இயக்க தெரியுமா என்று வினவிய பின்னரே கார் சாவியை கொடுக்க வேண்டும். அல்லது தாமே பார்க்கிங் செய்வது உத்தமம். கடந்த வாரம் பெங்களூர், ரிங்ரோடில் அமைந்திருக்கும் டோட்டல் மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு புத்தம் புதிய ஹோண்டா பிரியோ காரை வாலே பார்க்கிங் பணியாளர் அங்கிருந்த இரும்பு கம்பத்தில் மோதி முன்பகுதியை உருக்குலைத்து விட்டார். நமக்கே பெரும் வேதனையாக இருந்தது. உரிமையாளருக்கு எப்படியிருக்கும்.

வேறு வழியில்லை...
இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து பார்த்து வருவதால்தான் முடிந்தவரை வாலே பார்க்கிங் நபர்களை நம்புவதை தவிர்த்து நாமே சென்று பார்க்கிங் செய்வது நல்லது என்று கூறுகிறேன். ஆனால், சில இடங்களில் அவர்கள் மட்டுமே பார்க்கிங் செய்ய இயலும். அப்போது மட்டும் அவர்கள் கையில் சாவியை கொடுப்பதை தவிர வேறுவழியில்லை.
Photo Source: BigBoyToyz


Click it and Unblock the Notifications








