எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா? போலீஸ் பூத் மீது மோதி விட்டு செல்பி எடுத்த லம்போர்கினி ஓனர்!!
போலீஸ் பூத் மீது மோதி விட்டு செல்பி எடுத்த லம்போர்கினி கார் உரிமையாளர் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார்.

இந்திய சாலைகளில் தற்போது சூப்பர் கார்கள் பெருகி வருகின்றன. ஆனால் சூப்பர் கார்களை ஓட்டுவதற்கு ஏற்ற சாலைகள் இந்தியாவில் இல்லை. மேலும் டிராக்குகளும் பெரிதாக இல்லை. எனவே சூப்பர் கார்களின் உரிமையாளர்கள் பொது சாலைகளிலேயே, ஆக்ஸலரேட்டரை தாறுமாறாக மிதிக்க தொடங்கி விடுகின்றனர். இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இந்த சூழலில் பொது சாலையில் அதிவேகத்தில் பயணித்த லம்போர்கினி கல்லார்டோ கார் ஒன்று தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. இந்த காரின் உரிமையாளரின் பெயர் சன்னி சபர்வால் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு 28 வயது மட்டுமே ஆகிறது.

கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், டிராபிக் போலீஸ் பூத்தின் மீது மோதியுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை மதியம் 2.30 மணியளவில், பெங்களூர் கப்பன் பார்க் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அருகே உள்ள சிடிஓ சர்க்கிள் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிவேகத்தில் பயணம் செய்ததன் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து நடைபெற்ற உடனேயே சன்னி சபர்வால் அங்கிருந்து தப்பி விட்டார். மேலும் டிரேஸ் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, காரின் நம்பர் பிளேட்டையும் அவர் அகற்றி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கொஞ்ச நேரத்திற்கு பிறகு சன்னி சபர்வால் அங்கு மீண்டும் வந்துள்ளார். மேலும் கடுமையாக சேதமடைந்த போலீஸ் பூத் முன்பாக நின்று போட்டோ எடுத்து கொண்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களிலும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவ தொடங்கியதால், சன்னி சபர்வால் தற்போது சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். போலீஸ் பூத்தின் மீது மோதுவதற்கு முன்னதாக ஒரு ஆட்டோ மற்றும் பைக் ஆகியவற்றின் மீது இந்த கார் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன்னி சபர்வால் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்த தப்பியவுடன் காரை மக்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் காயமடைந்த ஆட்டோ டிரைவர் மற்றும் பைக் ரைடரை அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். தற்போது சன்னி சபர்வாலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

விபத்தில் சிக்கியிருப்பது லிமிமெட் எடிசன் லம்போர்கினி கல்லார்டோ ஆகும். இந்த கார் இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா லிமிடெட் எடிசன் கல்லார்டோ எல்பி 550-2 கார், 3.06 கோடி ரூபாய் விலை கொண்டது. லிமிடெட் எடிசன் என்பதால், இது மிகவும் அரிதான கார் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த காரில், வி10 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 543 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 320 கிலோ மீட்டர்கள்.


Click it and Unblock the Notifications








