காஸ்ட்லி காரை விட்றுவாங்கன்னு யார் சொன்னா? 4 கோடி ரூபாய் காரை தட்டி தூக்கிய போலீஸ்... ஏன் தெரியுமா?
4 கோடி ரூபாய் மதிப்புள்ள சூப்பர் காரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஊரடங்கில், மத்திய, மாநில அரசுகள் தற்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன. இருந்தாலும் குறைந்த அளவிலான மக்கள்தான் வீடுகளில் இருந்து வெளியே வருகின்றனர். எனவே வாகன போக்குவரத்து இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

முக்கியமான சாலைகள் பலவற்றிலும், வாகன நெரிசல் இல்லாததால், ஒரு சிலர் தங்கள் வாகனங்களை அதிக வேகத்தில் இயக்குகின்றனர். இப்படி நகர சாலையில் அதிவேகத்தில் சென்ற லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan), சூப்பர் கார் ஒன்றை காவல் துறையினர் தற்போது அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

சண்டிகர் காவல் துறையினரால், கடந்த ஞாயிற்று கிழமை மாலை இந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிவேகத்தில் பறந்தது மட்டுமின்றி, டிரைவிங் லைசென்ஸ் உள்பட முக்கியமான ஆவணங்களை அதன் உரிமையாளர் காட்டவும் தவறியுள்ளார். இதன் காரணமாக அந்த காரை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அந்த கார் போலீஸ் யார்டில் நின்று கொண்டுள்ளது.

காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் ஆங்காங்கே பேரிகார்டுகளை அமைத்து, வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்த வகையில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது, மட்கா சௌக் பகுதியில் அந்த காரை தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக அந்த காரின் டிரைவர், காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். சம்பவத்தன்று அந்த நபர் செல்போனில் பேசி கொண்டே காரை ஓட்டி வந்துள்ளார். மேலும் அதிவேகத்திலும் சென்றுள்ளார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தியபோது, மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் காரை ஓட்டி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

நகர சாலைகளில் இவ்வளவு அதிவேகத்தில் காரை ஓட்டுவது உண்மையிலேயே மிகவும் ஆபத்தானது. இந்திய சாலைகளில் ஸ்பீடு லிமிட்டை நீங்கள் பின்பற்றுவது அவசியம். ஏனெனில் இங்குள்ள சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது மற்ற வாகன ஓட்டிகளோ அல்லது பாதசாரிகளோ உங்கள் பாதையின் குறுக்கே வரலாம்.

அத்துடன் கால்நடைகளும் திடீரென குறுக்கே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய சூழல்களில், வாகனத்தை வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு நேரம் இருக்காது. எனவே விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும். தற்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள லம்போர்கினி ஹூராகேன் காரின் டிரைவர் ஆவணங்களையும் காட்டவில்லை.

பதிவு ஆவணங்கள், இன்சூரன்ஸ் ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் எதையுமே அவர் சமர்ப்பிக்கவில்லை. செக்டார் 28 பகுதியில் உள்ள ஐடிஐ போலீஸ் யார்டில் தற்போது அந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த காருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது? என்ற தகவல் போலீசாரால் வெளியிடப்படவில்லை.

அனேகமாக 20 ஆயிரம் ரூபாயை தற்போதைக்கு அபராதமாக விதித்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தேவைப்படும் ஆவணங்களை டிரைவர் போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பித்த பிறகே, அபராத தொகை இறுதி செய்யப்படும். ஒருவேளை ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், அபராதம் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

அதே சமயம் சம்பவத்தன்று காரை ஓட்டி வந்த நபரின் டிரைவிங் லைசென்ஸ் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த காரின் டிரைவர் வேறு எந்த காருடனும் பந்தயத்தில் ஈடுபடவில்லை. எனினும் மிகவும் ஆபத்தான முறையில் அவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் கேசரி ஹரியானா வெளியிட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரின் விலை 4 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது சாலைகளில் இவ்வளவு வேகத்தில் காரை ஓட்டினால், உங்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








