லம்போர்கினி கார் தெரியும்... தேன் தெரியுமா? அசல் லம்போர்கினி தேன் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது...
லாம்போர்கினி நிறுவனம் சூப்பர் கார்களுடன் சேர்த்து தேன்களையும் தயாரிக்கும் பணியைச் செய்து வருகிறது. இந்த தேன்களை அந்நிறுவனம் விற்பனை செய்வதுமில்லை, பின்னர் ஏன் இதைத் தயாரிக்கிறது? இதனால் என்ன பயன்? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்த உலகில் இத்தாலி, ஜெர்மன் போன்ற நாடுகள் தான் உலகின் சூப்பர் கார்களின் தலைநகரம் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த உலகின் பெரும் புகழ்பெற்ற நிறுவனங்கள் எல்லாம் அந்நாட்டில் தான் இயங்கி வருகின்றன. லாம்போர்கினி, ஃபோர்க்ஸ்வேகன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலை நகரம் எல்லாம் அந்த நாட்டில் தான் இயங்கி வருகின்றன. அந்நாட்டில் தயாரிக்கப்படும் கார்கள் தான் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நாட்டின் கார்கள் எல்லாம் புகழ்பெற்றதற்கு அந்த கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்ஜினியரிங் விஷயங்கள் தான் முக்கியமான காரணம். ரேஸ் கார்களுக்கான இன்ஜினியரிங் அற்புதம் என்ற அதைச் சொல்லி விடலாம். இப்படி அந்த கார்களின் அற்புதத்தையும் அதன் அம்சங்களையும் பற்றி எல்லாம் பேச வேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் இன்று நாம் அதைப் பற்றி எல்லாம் பார்க்கப்போவதில்லை. லாம்போர்கினி நிறுவனம் கார்களை மட்டும் தயாரிக்க வில்லை கூடவே தேன்களையும் தயாரிக்கின்றன அதைப் பற்றித் தான் காணப்போகிறோம்.

ஆம் நீங்கள் படித்தது சரி தான். லாம்போர்கினி நிறுவனம் இத்தாலியில் உள்ள சாண்ட் அகட்டா போலோனீஸ் என்ற இடத்தில் நடத்தி வரும் ஆலையில் தேனீ வளர்ப்பையும் செய்து வருகிறது. அந்நிறுவனம் தற்போது வரை 6 லட்சம் தேனீக்களையும் வளர்த்து அதன் மூலம் தேன்களைத் தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறது. இதற்காக அதன் ஆலையில் ஒரு பகுதியை ஒதுக்கி அங்குத் தேனீக்களை வளர்த்து, பராமரித்துவருகின்றன.

இது ஏன் கார் தயாரிப்பு ஆலையில் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன என உங்களுக்குக் கேள்வி வரலாம். அதற்குப் பின்னால் மிகப்பெரிய கதை இருக்கிறது. கார்கள் தயாரிப்பில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை இந்த கார்கள் எல்லாம் இந்த உலகிற்கு கார்பன் டை ஆக்ஸைடை அதிகம் வெளியிடும் கருவிகளாகிறது. இதனால் இந்த உலகம் அதிகமாக வெப்ப மயமாகிறது என்ற விமர்சனம் கார் தயாரிப்பாளர்கள் மீது இருக்கிறது. இது உண்மையும் கூடத்தான்.

இப்படியாக கார்கள் மூலம் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை சமன் படுத்தவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் இவ்வாறாக தேனீக்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அறிவியல் ஆய்வுகளின் படி ஒரு தேனீ ஒரு நாளுக்கு 2000 பூக்கள் வரை தேன் குடிக்கிறது. இப்படியாக ஒரு பூவிட்டு மற்ற பூவிற்கு தேனீ மாறும் போது பாலினேஷன் நடக்கிறது. அதாவது ஆண் பூவிற்கும் பெண் பூவிற்கும் மரகந்த சேர்க்கை நடக்கிறது. இப்படியாகச் செடிகள் இடையே மரகந்த சேர்க்கை நடத்தத் தேனீக்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால் மனிதன் இந்த உலகில் வாழத் தேனீக்கள் அவசியம் அது ஏற்படுத்தும் மரகந்த சேர்க்கையால் செடிகள் வளர்ந்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இந்த ஆக்ஸிஜன் தான் சுற்றுச்சூழலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவை குறைக்கிறது. இதனால் தேனீ வளர்ப்பு மறைமுறையாக இந்த பூமி வெப்ப மயமாதலைக் குறைக்கிறது. இதனால் தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தேனீ வளர்ப்பதையும் முக்கிய பணியாகச் செய்து வருகின்றன.

இந்த தேனீ வளர்க்கும் பணியை லாம்போ்கினி மட்டும் செய்யவில்லை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நடத்தி வரும் அனைத்து பிராண்ட்களின் தொழிற்சாலையிலும் இந்த தேனீ வளர்ப்பு என நடத்தப்படுகிறது. இதில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தும் தேனீ வளர்ப்பில் லாம்போர்கினி நடத்துவது தான் மிகப்பெரிய தேனீ வளர்க்கும் மையமாகச் செயல்படுகிறது. லாம்போர்கினி நிறுவனம் மட்டும் ஆண்டிற்கு இப்படியாகத் தேனீ வளர்ப்பதன் மூலம் 430 கிலோ தேனை உற்பத்தி செய்கிறது.

லாம்போர்கினி நிறுவனம் தயாரிக்கும் இந்த தேன்கள் விற்பனைக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக இந்த தேன்கள் எல்லாம் பாட்டில்களில் அடைத்துப் பாதுகாத்து வைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது இந்த தேன் பாட்டில்கள் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்குப் பரிசாக வழங்கப்படும். இந்த தேனீ வளர்ப்பை லாம்போர்கினி நிறுவனம் ஒரு பிஸ்னஸாக செய்யாமல் இந்த இயற்கைக்குச் செய்யும் ஒரு கைமாறாகச் செய்து வருகிறது.

லாம்போர்கினி நிறுவனம் தயாரிக்கும் காரை கூட வெளியில் உள்ள மக்கள் வாங்கி விடலாம். ஆனால் இந்நிறுவனம் தயாரிக்கும் தேன் பாட்டில்களை வாங்கவே முடியாது. எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் இந்த தேன் பாட்டில்களை லாம்போர்கினி நிறுவனம் வெளியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யாது. உலகம் முழுவதும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை பிராண்ட்களின் கார்கள் தயாரிக்கும் ஆலைகளிலும் இந்த தேனீ வளர்க்கும் வழக்கம் இருக்கிறது. இந்த முறையில் மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் தேனீக்கள் வளர்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டிற்கு 1000 கிலோ தேன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது ஏதுவும் மார்கெட்டிற்கு விற்பனைக்கு வராது மாறாக அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த தகவல் பலருக்கும் தெரியாத அறியத் தகவல் ஆகும். இந்த தகவல் உங்களுக்கு முன்னரே தெரியுமா? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








