பெங்களூர்ல இருந்து சென்னை வந்த இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான கார்! என்ன இந்த கார சென்னைவாசி வாங்கியிருக்காரா
லம்போர்கினி (Lamborghini) நிறுவனம், இந்தியாவில் தனது ரெவல்டோ (Revuelto) காரை டெலிவரி செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றது. கார் டெலிவரி செய்வது என்பது சாதாரணமான ஒன்றுதானே இதை ஏன் பெருசாக பேச வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். இந்தியாவில் இந்த காரை லம்போர்கினி டெலிவரி செய்வது இதுவே முதல் முறையாகும். இதனால்தான், இந்த நிகழ்வு வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கின்றது. மேலும், இதுவே நிறுவனத்தின் மிக மிக விலையுயர்ந்த கார் மாடலும் ஆகும். ரெவல்டோ-வின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டும் ரூ. 8.89 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த கார் என்பதாலும் இதன் டெலிவரி நிகழ்வு பெரும் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. மேலும், இதில் கூடுதல் சுவாரஷ்யம் என்னவென்றால் இந்த காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக சென்னையைச் சேர்ந்த ஓர் தொழிலதிபரே வாங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், அந்த தொழிலதிபர் யார் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. லம்போர்கினி ரெவல்டோ, பெங்களூருவைச் சேர்ந்த லம்போர்கினி கார் டீலர் வாயிலாகவே டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனம் வயலா பாஸ்ட் (Viola Bast) வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் உட்புறம் அடர் ஊதா (Purple) நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்தியாவில் இந்த கார் 2023 ஆம் ஆண்டு டிசம்பரிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையிலேயே இப்போது அதன் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கி இருக்கின்றன. தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு வரைக்கான அனைத்து ரெவல்டோ யூனிட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாகவும் லம்போர்கினி தெரிவித்திருக்கின்றது.
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் புதிய வாடிக்கையாளர்களால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு வரை வாங்க முடியாது. இத்தகைய தரமான டிமாண்டையே லம்போர்கினி ரெவல்டோ கார் மாடல் உலக சந்தையில் பெற்றுக் கொண்டிருக்கின்றது. லம்போர்கினி நிறுவனத்தின் ஸ்பெஷல் தயாரிப்பு என இந்த கார் மாடலை சொல்லலாம்.
இது அவன்டேட்டர் கார் மாடலின் மறு அவதாரமாகப் பார்க்கப்படுகின்றது. நீண்ட ஆண்டு காலமாக விற்பனையில் இருந்த இந்த கார் 2022லேயே வெளியேற்றப்பட்டது. ரெவல்டோ காரில் 6.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 825 எச்பி மற்றும் 725 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் லம்போர்கினி வழங்கி இருக்கின்றது. இதுவும் வி12 எஞ்சினும் சேர்ந்து 1015 எச்பி மற்றும் 807 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கான மின்சார திறனை வழங்கும் பொருட்டு இந்த காரில் 3.8 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் முழு சார்ஜில் பெட்ரோலின் உதவியின்றி 10 கிமீ ரேஞ்சை வழங்கும். இத்தகைய சூப்பரான காரின் டெலிவரி பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றன. மேலும், முதல் நபராக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரெவல்டோ டெலிவரி பெற்றிருக்கின்றார். விரைவில் உரிமையாளர் பற்றிய விபரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் கவர்ச்சியான அதேவேளையில் அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட ஓர் சூப்பர் கார் மாடலே லம்போர்கினி ரெவல்டோ ஆகும். இந்த காரையே சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த டீலர்கள் பூஜை போட்டு, அதற்கு வரவேற்பை வழங்கினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், தற்போது அதன் டெலிவரி பணிகளும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 350 கிமீ ஆகும்.


Click it and Unblock the Notifications








