ரூ.1.6 கோடியில் எவ்வளவு ஆசை, ஆசையாய் வாங்கி இருப்பாரு! ஓனரின் கண்முன்னே நடந்த சோகம்!
தீயில் எரிந்து காற்றில் சாம்பலாகும் ரூ.1.6 கோடி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நம்மில் நிறைய பேருக்கு எப்படியாவது ஒரு லேண்ட் ரோவர் (Land Rover) வாகனத்தை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், இன்னும் ஒருமுறை கூட லேண்ட் ரோவர் காரை நேரில் பார்க்காதவர்கள் நம்மில் நிறைய பேர் இருக்கிறோம். இப்படிப்பட்டவர்கள் வாழும் இந்த திருநாட்டில், ஓனரின் கண்முன்னே ரூ.1.6 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் கார் ஒன்று தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளது. குஜராத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை பற்றியும், தீயில் எரிந்து நாசமாகி உள்ள லேண்ட் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லேண்ட் ரோவர் கார்களுக்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உள்ளது. ரேஞ்ச் ரோவர், டிஃபெண்டர், டிஸ்கவரி என பல்வேறு விதமான கார்கள் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ரேஞ்ச் ரோவர் கார்களுக்கே நல்ல வரவேற்பு உள்ளது என்றாலும், அதேநேரம் டிஃபெண்டர் கார்களையும் கணிசமான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் வாங்குகின்றனர்.

அவ்வாறு இந்தியாவில் வாங்கிய ஒருவரது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் குஜராத்தில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது தீப்பற்றிக் கொண்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது வைரலாகி உள்ளது. வீடியோவில், வெள்ளை நிறத்திலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதை காணலாம்.
நேரம் ஆக, ஆக காரில் தீ அதிகமாகிக் கொண்டே செல்வதையும் வீடியோவில் காண முடிகிறது. தீயணைப்புத் துறையினர் சரியான நேரத்தில் வந்ததால் விரைவாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. இருப்பினும், தீ விபத்திற்கு உள்ளான டிஃபெண்டர் காரை காப்பாற்ற முடியவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த டிஃபெண்டர் காரின் ஓனர் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற போது தீப்பற்றி கொண்டுள்ளது.

நல்லவேளையாக, சம்பவத்தின்போது காருக்கு உள்ளேயும், அருகேயும் யாரும் இல்லை. இந்த விபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தப்படும் காரில் தீப்பொறிகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது மற்றும் பரவலாக ஏற்படக்கூடியது: காரினுள் எலக்ட்ரிக் பாகங்களுக்கு இடையேயான எலக்ட்ரிக்கல் ஷார்ட் சர்க்யூட் ஆகும்.
இந்த டிஃபெண்டர் காரிலும் இந்த காரணத்தினால்தான் தீவிபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கருதப்படுகிறது. பொதுவாக இவ்வாறு சாலையில் கார் தீப்பற்றிக் கொண்டால், காரினுள் நாமாக கொண்டுவந்த மாடிஃபிகேஷன்களை தான் மெக்கானிக்குகளில் இருந்து கார் நிறுவனம் வரையில் காரணமாக குற்றஞ்சாட்டுவார்கள். ஆனால், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் போன்ற விலைமிக்க பவர்ஃபுல்லான கார்களுக்கு ஆஃப்டர்-மார்க்கெட் பாகங்களை பொருத்த யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஏனெனில், டிஃபெண்டர் போன்ற கார்களில் வழங்கப்படும் பாகங்கள் ஒவ்வொன்றும் உயர்தரத்திலானவை ஆக இருக்கும். அவற்றை நீக்கிவிட்டு அவற்றிற்கு பதிலாக வேறொன்றை பொருத்த எவரொருவரும் விரும்ப மாட்டார்கள். ஆதலால், இந்த தீவிபத்துக்கு கார் மாடிஃபிகேஷனை காரணாக சொல்ல முடியாது. வீடியோவில் நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றால், காரின் மைய பகுதியில் இருந்துதான் அதிக நெருப்பு வெளிவருகிறது.
ஆதலால், இந்த தீவிபத்துக்கு காரின் என்ஜின் சிஸ்டத்தில் அல்லது எலக்ட்ரிக்கல் பாகங்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணம்போல் தெரியவில்லை. பிரிட்டிஷ் கார் நிறுவனமான லேண்ட் ரோவரின் கார் இந்தியாவில் தீப்பிடிப்பிற்கு உள்ளாகுவது இந்த வருடத்தில் இது ஒன்றும் முதல்முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்னர்தான், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று நடுரோட்டில் தீப்பற்றிக் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில்தான், ஆயில் லீக் பிரச்சனை காரணமாக 2,128 லேண்ட் ரோவர் கார்கள் அமெரிக்காவில் திரும்ப அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது குஜராத்தில் இந்த டிஃபெண்டர் கார் தீவிபத்து நடந்துள்ளது. இந்த தீவிபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்தால்தான், தவறு எங்கு நடந்துள்ளது என்பதை அறிந்து, இதன்பின் நடக்காத வண்ணம் மாற்ற முடியும்.


Click it and Unblock the Notifications








