54 ஆண்டுகால சகாப்தம் முடிந்தது... விடைப்பெற்று சென்றது பிரபலமான போயிங் 747 விமானம்!! விற்பனை நிறுத்தம்
உலகளவில் பிரபலமான விமானங்கள் தயாரிப்பு நிறுவனமான போயிங் அதன் தொழிற்சாலையில் இருந்து கடைசி 747 விமானத்தை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து வெளியேற்றியுள்ளது. உலகில் பல்வேறு ஏர்லைன் நிறுவனங்களில் உள்ள போயிங் 747 விமானங்கள் ஏறக்குறைய கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் பார்த்தோமேயானால், 50 வருடங்கள் கழித்து போயிங் 747 விமானங்களின் உற்பத்தி நிறுத்தி கொள்ளப்படுகிறது. ஜம்போ ஜெட் எனப்படும் இந்த ரக போயிங் விமானம் ஆனது ஒரு நாட்டின் மிக உயர் பதவியில் இருக்கும் ஜனாதிபதி/அதிபரை அழைத்து செல்வதில் இருந்து, கார்கோ மற்றும் கமர்ஷியல் என அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது, பயன்படுத்தப்பட்டும் வருகிறது. முதல் போயிங் 747 விமானமே கமர்ஷியல் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதுதான்.

1969இல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் போயிங் 747 விமானத்தில் கிட்டத்தட்ட 500 நபர்கள் வரையில் அமரக்கூடிய அளவிற்கு இருக்கை வசதி இருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள். முதல் போயிங் 747 விமானம் சுமார் 50,000 போயிங் நிறுவன ஊழியர்களின் வேலைப்பாடில் கிட்டத்தட்ட 16 மாதங்களாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதுவரையில் மட்டுமே 1,573-க்கும் அதிகமான போயிங் 747 விமானங்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் உலகின் மிக பெரிய கமர்ஷியல் விமானம் போயிங் 747 தான். தற்போதும் கூட உலகின் மிக பெரும் கமர்ஷியல் விமானங்கள் என்று பார்த்தோமேயானால் அதில் போயிங் 747 விமானமும் ஒன்றாக இருக்கும். அதேபோல் 3 வரிசையில் இருக்கைகளை கொண்ட முதல் விமானமும் இதுதான். தோற்றத்தை பொறுத்தவரையில், அளவில் பெரிய விமானம் என்பதால் அதற்கேற்ப உட்புறத்திலும் பெரிய அளவில் விசாலமான இடவசதியை கொண்டவைகளாக போயிங் 747 விமானங்கள் விளங்கின.

எந்த அளவிற்கு என்றால், இந்த விமானத்தை பலர் திமிங்கலம் என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு மற்ற விமானங்களுக்கு மத்தியில் வானத்தின் ராணியாக போயிங் 747 சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இத்தகைய விமானத்தின் தயாரிப்பை போயிங் நிறுவனம் நிறுத்தி கொள்வதற்கு காரணம் இந்த விமானத்திற்கு மாற்றாக வேறொரு விமானம் கண்டுப்பிடிக்கப்பட்டதே ஆகும். ஆம்... போயிங் நிறுவனமும், ஐரோப்பாவில் போயிங்கிற்கு போட்டியாக விளங்கும் ஏர்பஸ் நிறுவனமும் புதிய அகலமான உடலமைப்பை கொண்ட விமானங்களை கடந்த 15 வருடங்களுக்கு முன்பே தயாரிக்க ஆரம்பித்துவிட்டன.
போயிங் 747 விமானத்தில் 4 என்ஜின்கள் பொருத்தப்பட்டன. போயிங்கிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட விமானங்களில் 2 என்ஜின்கள் தான் பொருத்தப்படுகின்றன. இது உற்பத்தி செலவை தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைப்பது மட்டுமின்றி, விமானத்தின் மைலேஜையும் அதிகரிக்கும். போயிங் 747 விமானங்கள் பயணிகளை ஏற்றி செல்லும் விமானங்களாக பயன்படுத்தப்படுவது பல்வேறு ஏர்லைன் நிறுவனங்களில் நிறுத்தி கொள்ளப்பட்டுவிட்டது.

தற்போது தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போயிங் 747 ஆனது கடைசி வாடிக்கையாளராக அட்லஸ் ஏர் நிறுவனத்திற்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. அட்லஸ் ஏர் நிறுவனம் இந்த போயிங் 747 விமானத்தை இந்த 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் ஆர்டர் செய்திருந்தது. 76.2 மீட்டர் நீளம் கொண்டதாக விளங்கும் இந்த விமானம் அதிகப்பட்சமாக 133.1 டன் வரையிலான சுமையை சுமந்து பறக்கக்கூடியது. ஏற்கனவே கூறியதுபோல் இந்த விமானம் வாஷிங்டனில் உள்ள மெகா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட விமானங்களை நிறுத்த போயிங் நிறுவனத்திற்கு வாஷிங்டனிலும், தெற்கு கலிஃபோர்னியாவிலும் அசெம்பிள் பகுதிகள் உள்ளன. போயிங் நிறுவனத்தின் தலைமையகம் தற்சமயம் சிகாகோவில் உள்ளது. இதனை விரைவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் பகுதிக்கு மாற்றவுள்ளதாக கடந்த மே மாதத்தில் போயிங் நிறுவனம் அறிவித்திருந்தது. போயிங் 747 விமானங்களின் தயாரிப்பு நிறுத்தி கொள்ளப்பட்டாலும், இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்து இந்த விமானங்கள் பல்வேறு ஏர் லைன் நிறுவனங்களில் பறக்க தான் செய்யும்.


Click it and Unblock the Notifications