இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்!
மும்பை- ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் குறித்து வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயும் நாளை மறுதினம் அடிக்கல் நாட்ட இருக்கின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் பற்றி தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரதமர் மோடியின் கனவு திட்டமாக வர்ணிக்கப்படும் இந்த திட்டத்தை இலக்கு வைத்ததைவிட ஓர் ஆண்டுக்கு முன்னரே முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ப்யூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வரும் 2023ம் ஆண்டில் புல்லட் ரயில் பணிகளை நிறைவேற்ற திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்குள் பணிகளை முடிக்க புதிய இலக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

மும்பை - ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 1.10 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு 88,000 கோடியை ஜப்பான் கடனாக வழங்க இருக்கிறது.

இதற்கு 0.1 சதவீதம் என்ற வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன், 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடனை திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் தவிர்த்து, 15 ஆண்டுகள் கூடுதல் கால அவகாசமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video


மொத்தம் 508 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கும் இந்த புல்லட் ரயில் தடத்தில் 468 கிமீ தூரம் மேம்பால அமைப்பிலும், 27 கிமீ தூரம் சுரங்கப் பாதையிலும், 13 கிமீ தூரம் சாதாரண நிலப்பரப்பிலும் புல்லட் ரயில் செல்லும். இதில், 7 கிமீ தூரம் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக 825 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மும்பை- ஆமதாபாத் இடையில் 12 புல்லட் ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மும்பை, தானே, விரர், பாய்சர், வபி, பிலிமோரா, சூரத், பாருச், வதோதரா, அனந்த், ஆமதாபாத் மற்றும் சபர்மதி ஆகிய இடங்களில் புல்லட் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையிலான 508 கிமீ தூரத்தை புல்லட் ரயில் இரண்டு மணி 7 நிமிடங்களில் கடந்துவிடும். ஆனால், ஆமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் மும்பை ஆகிய 4 ரயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றால் மட்டுமே இது சாத்தியம்.

இல்லையெனில், 12 ரயில் நிலையங்களிலும் நின்று சென்றால், இரண்டு மணி 58 நிமிடங்களில் மும்பை- ஆமதாபாத் நகரங்களை புல்லட் ரயில் இணைக்கும். தற்போது இந்த இரு நகரங்களையும் ராஜ்தானி உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் சராசரியாக 7 மணி 30 நிமிடங்களில் கடக்கின்றன.

இந்த ரயில்களின் சராசரி வேகம் 55 கிமீ என்ற அளவிலும், அதிகபட்சமாக 78 கிமீ என்ற அளவில்தான் உள்ளது. ஆனால், இந்த தடத்தில் புல்லட் ரயில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும். அதிகபட்சமாக மணிக்கு 350 கிமீ வேகம் வரை இயக்க முடியும். எனவே, பயண நேரம் வெகுவாக குறையும்.

மேலும், நாள் ஒன்றுக்கு 70 முறை புல்லட் ரயில்கள் இரு நகரங்களுக்கு இடையிலும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும், கட்டணமும் மிக சரியான அளவில் நிர்ணயிக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் உறுதி தெரிவித்துள்ளார். இதனால், இந்த தடத்தில் விமான வர்த்தகத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

மொத்தமாக 24 புல்லட் ரயில்கள் ஜப்பானிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட உள்ளன. பின்னர், இந்தியாவிலேயே புல்லட் ரயில் பெட்டிகளை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இயக்கப்படும் சிங்கன்சென் புல்லட் ரயில்கள்தான் இந்தியாவிலும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில்கள் பாதுகாப்பு அம்சங்களில் மிகச் சிறப்பானவை. 1964ம் ஆண்டு முதல் இயக்கப்படும் இந்த ரயில்கள் மூலமாக ஒரு உயிரிழப்பு கூட இதுவரை என்பதே இதன் ஆகச்சிறந்த விஷயம். அதேபோன்று, தொழில்நுட்பத்திலும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தாக கூறப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் உள்ள நகரங்கள் பொருளாதார ரீதியில் ஊக்கம் பெறும் என்றும் ரயில்வே அமைச்சகம் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. எனவே, பயணிகள் மத்தியிலும் வர்த்தக துறையினர் மத்தியிலும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








