இனி டிரங் & டிரைவ்வில் சிக்குவதற்கு முன் இது ஞாபகத்துக்கு வரணும்!! ஐரோப்பிய நாடு ஒன்றின் அதிரடியான செயல்...
ஓட்டுனர் மது குடித்துவிட்டு ஓட்டியதாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஐரோப்பிய நாடு ஒன்று உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வருகிறது. எந்த நாடு அது? ஏன் குறிப்பாக உக்ரைன் நாட்டிற்கு அந்த வாகனங்கள் அனுப்பப்படுகின்றன? என்பது குறித்த கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
லாட்வியா, பலர் கேள்விப்படாத ஐரோப்பிய நாட்டின் பெயராக இது இருக்கலாம். ஐரோப்பிய கண்டத்தில் ரஷ்யாவை ஒட்டியவாறு வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு. அண்டை நாடான உக்ரைன் உடன் நட்புறவு கொண்டிருக்கும் லாட்வியா நடைபெற்று வரும் ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த பறிமுதல் கார்களை அனுப்புவதும்.

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் ஆனது சமீப காலமாக உலக நாடுகள் பலவற்றால் உற்று கவனிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. பலம் பொருந்திய ரஷ்யாவின் போர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதால், உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அத்தகைய நாடுகளுள் ஒன்றாகவே லாட்வியா அரசாங்கம் தனது நாட்டில் இந்த 2023ஆம் வருடத்தில் ஓட்டுனர் அதிகளவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உக்ரைன் நாட்டின் இராணுவ மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக அனுப்ப துவங்கியுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக லாட்வியா நாட்டில் இருந்து ஒரு கனரக லாரியின் மூலமாக 7 பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 7 கார்கள் என்பது மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் எண்ணிக்கையில் மிகவும் சிறிய பகுதியே. ஏனெனில் லாட்வியா நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் டிரைவர் அதிகளவில் மது அருந்திவிட்டு ஓட்டுனர் ஓட்டியதற்காக 200க்கும் அதிகமான கார்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டுனரின் உடலின் இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 0.15 சதவீதத்தை காட்டிலும் அதிகளவில் ஆல்கஹால் கலந்து இருந்ததாக இந்த கார்கள் லாட்வியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2 மாதங்களில் 200 என்பது குறைவுத்தானே என்று நீங்கள் நினைக்கலாம். வெறும் 19 லட்ச குடிமக்களை மட்டுமே கொண்ட லாட்வியா நாட்டை பொறுத்தவரையில் இந்த எண்ணிக்கை அதிகமே ஆகும். இந்த கார்களை உக்ரைனுக்கு கொண்டு செல்லும் வேலையை டிவிட்டர் கான்வே என்ற அரசு-சாராத நிறுவனத்திடம் லாட்வியா அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த டிவிட்டர் லாட்வியா அமைப்பின் நிறுவனர் ரெய்னிஸ் போஸ்னாக்ஸ் கருத்து தெரிவிக்கையில், "இந்த குடிக்கார ஓட்டுனர்களை சுற்றி எத்தனை கார்கள் இயங்கின என்பதை நினைக்கும்போது மிகவும் பயங்கரமாக உள்ளது" என்றார். மேலும், தன்னிடம் வாரத்திற்கு 2-டஸன் (24) பறிமுதல் கார்கள் உக்ரைனுக்கு அனுப்ப வழங்கப்படும் என லாட்வியாவில் ஒரு மாகாண அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் போஸ்னாக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "நிறைய வாகனங்களில் மக்கள் மது அருந்திவிட்டு டிரைவ் செய்கின்றனர் என்பதை எவர் ஒருவரும் எதிர்பார்ப்பது இல்லை. இந்த வகையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அரசாங்கத்தாலும் விரைவாக விற்றுவிட முடியாது, இதனாலேயே அவைகளை உக்ரைனுக்கு அனுப்புவது என்கிற திட்டத்துடன் அரசாங்கத்தை அணுகினேன்" என்றவர், இந்த வகையில் உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட கார் ஒன்றில் ரஷ்யா நாட்டின் தேசிய கொடி இருப்பதை பார்த்துவிட்டு வெகுநேரம் சிரித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையிலும் 1,200க்கும் அதிகமான வாகனங்களை டிவிட்டர் கான்வே அமைப்பு உக்ரைன் அரசாங்கத்தின் உதவிக்காக அனுப்பியுள்ளது. தற்போது லாட்வியா நாட்டில் இருந்து டிரங் & டிரைவ் கேஸ் கார்களை உக்ரைனுக்கு அனுப்பும் பணியை துவங்கியுள்ளது. இதுகுறித்து லாட்வியா நாட்டின் நிதியமைச்சர் அர்வில்ஸ் அசெராடென்ஸ், இந்த அரசு-சாரா அமைப்பின் வெற்றி லாட்வியா அரசாங்கத்தை கவர்ந்துள்ளது என கூறியுள்ளார்.
Image Courtesy: Reuters


Click it and Unblock the Notifications








