‘PRESS' போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் இனி ஒட்டக்கூடாது!! சென்னை ஹைக்கோர்ட் அதிரடி உத்தரவு!
வாகனத்தில் மற்றவர்களுக்கு தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டு இருந்தால் அதனை 2 மாதங்களில் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மதுரையை சேர்ந்த வழிக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் ஒட்டியிருக்கிறார்கள்.

வழக்கறிஞர் என ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியுள்ளவர்களில் பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுப்படுகிறார்கள். கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் சட்ட விரோதமான செயல்களில் ஈடுப்பட்டு போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக இந்த ஸ்டிக்கர்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.

வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம், சட்ட விரோத செயல்களில் ஈடுப்படுவர்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. தற்போது அண்டை மாநிலங்களில் அதிகளவில் சட்ட கல்லூரி உருவாக துவங்கியுள்ளது. அந்த கல்லூரிகளில் ரவுடிகள் பலர் பணம் கொடுத்து பட்டங்களை பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறல்களில் இருந்தும், குற்ற சம்பவங்களில் இருந்தும் போலீஸாரிடம் இருந்து தப்பித்து செல்கின்றனர்.

எனவே 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழங்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டி, சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் இந்த விஷயத்தில் நீதிபதிகள் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன்படி, "தமிழகத்தில் வாகனங்களில் வழக்கறிஞர்/ ஊடகம்/ போலீஸ் போன்ற ஸ்டிக்கர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்படுகின்ற வாகனங்கள் அதிகளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது தெரிகிறது. ஏனெனில் இதில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தங்களது வாகனங்களில் அரசியல் கட்சியின் கொடிகள், தலைவர்களின் புகைப்படங்கள், சாதி கட்சி தலைவர்களின் படங்களை வெளிப்புறங்களில் தெரிவதுபோல் ஒட்டி பயன்படுத்துகிறார்கள்.

இது காவல்துறையினர் தங்களது வாகனத்தை நிறுத்தக்கூடாது. சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கில் ஒட்டப்படுவதாக உயர் நீதிமன்றம் கருகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் கொடிகளையும், கட்சி தலைவரின் புகைப்படங்களையும் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாம், மற்ற நேரங்களில் இதன் பயன்பாடு தேவை இல்லாத ஒன்று எனவும் நீதிமன்றம் கருகிறது.

மேலும், இதனை பயன்படுத்த சட்டத்திலும் அனுமதி இல்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில ஆணைகளை பிறப்பிக்கிறது. இந்த உத்தரவை டிஜிபி உள்துறை அமைச்சகம், போக்குவரத்து துறை இயக்குநர் ஆகியோர் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அவசியமற்ற ஸ்டிக்கர்கள் மட்டுமின்றி வாகனங்களில் மேற்கொள்ளப்படும் மற்ற சட்ட விரோத செயல்களையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதாவது, வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றி வருடந்தோறும் உரிமம் முறையாக புதுப்பிக்கப்படுகிறதா? வாகனத்தில் முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும் என்றனர்.

மேலும், இதனை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது அபராதம் விதித்து முகப்பு விளக்குகளை அதிகாரிகள் நீக்க வேண்டும். அதேபோல், வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனையும் நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

வாகனத்தின் வெளிப்புறத்தில் மற்றவர்களுக்கு தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை கட்டாயம் நீக்க வேண்டும். வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த உத்தரவை அடுத்த 60 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். இதனால் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்த 2 மாதங்களில் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்க அதிகாரிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








