அமைச்சர்கள் வாகனங்களும் தப்பிக்க முடியாது!! ஃபேன்சி விளக்குகள் இருந்தாலே அபராதம் தான் - நம் தமிழ்நாட்டில் இல்ல
அமைச்சர்கள் வாகனமாக இருந்தாலும், அரசாங்க வாகனங்களில் கவர்ச்சிக்கரமான வண்ண விளக்குகள் இருந்தால் எந்தவொரு சமரசமும் இன்றி ரூ.5,000 அபராதம் விதிக்கமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஓர் மாநில அரசாங்கம் அதிரடியாக ஆணை வழங்கியுள்ளது. எந்த மாநில அரசாங்கம் அது? இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன சட்டம் என்ன கூறுகிறது? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
போக்குவரத்தை சீர்படுத்த வேண்டுமெனில், சாலைகளில் இயங்கும் வாகனங்களை ஒழுங்கப்படுத்த வேண்டும் என்பதில் பல்வேறு மாநில அரசாங்கங்கள் கவனமாக செயல்பட்டு வருகின்றன. அதாவது, எத்தனை கோடி கோடியாய் செலவு செய்து சாலைகளை போட்டாலும், அதில் இயங்கும் வாகனங்களும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

நம் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மட்டுமின்றி, முக்கிய அரசாங்க அதிகாரிகளின் வாகனங்களில் கூட சைரன் எனப்படும் அதிக ஒலியை ஏற்படுத்தக்கூடிய விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இது ஒரு கட்டத்திற்கு மேல் நீதிமன்றத்தின் கவனத்தை பெற்றதை அடுத்து, ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களில் மட்டுமே சைரன் பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பு வெளிவந்தது.
இதேபோல் நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் அரசாங்க அதிகாரிகளின் வாகனங்களில் சைரன் பொருத்தப்படுவது இல்லை. இருப்பினும், சாலையில் மற்ற வாகனங்களில் இருந்து தங்களது வாகனங்கள் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக சைரனை போன்று நீலம், சிவப்பு நிறங்களில் மின்னக்கூடிய எல்இடி விளக்குகளை காரின் முன்பக்க க்ரில் உள்பட காரின் குறிப்பிட்ட சில பாகங்களில் சில அரசு அதிகாரிகள் பொருத்தியுள்ளனர்.
கேரளாவில் இந்த குற்றச்சாட்டு அதிகரிக்க ஆரம்பித்ததை அடுத்து, மாநில அரசாங்க வாகனங்களில் கவர்ச்சிக்கரமான ஃபேன்சி விளக்குகளை பொருத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநில அரசு அதிரடியாக ஆணையிட்டுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், அமைச்சர்கள் வாகனங்களாக இருப்பினும், போலீஸார் இந்த அபராதத்தை விதிக்கலாம் என கேரள அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கேரள மாநில அரசு தானாக ஒன்றும் வெளியிடவில்லை. கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் பெயரில் இப்படியொரு ஆணையை கேரள அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வாகனங்களில் ஃபேன்சி விளக்குகளை பொருத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக உள்ளதாகவும், இது சட்டத்திற்கு விரோதமானது எனவும் கடந்த மே மாதத்தில் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
ஃபேன்சி விளக்குகள் என்றால், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால ஊர்திகளில் பயன்படுத்தப்படும் நீலம்-சிவப்பு சைரன் விளக்குகளாக தான் இருக்க வேண்டும் என்றில்லை, நியான் விளக்குகள், பல-வண்ண எல்இடி விளக்குகள் உள்ளிட்டவையாக இருந்தாலும் அவற்றை பொருத்தக் கூடாது. அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தொழிற்சாலையில் காரை உற்பத்தி செய்யும் நிறுவனம் பொருத்தும் ஹெட்லைட்கள், டெயில்லைட்கள், டிஆர்எல்-கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களை தவிர்த்து காரில் புதியதாக நாம் எந்த விளக்கையும் பொருத்தக் கூடாது.
காரை தயாரித்த நிறுவனம் பொருத்திய விளக்குகளில் ஏதேனும் ஒன்று பழுதாகினால் வேண்டுமாயின் புதியதாக ஒன்றை பொருத்திக் கொள்ளலாம். ஆனால் புதியதாக நாம் பொருத்தும் விளக்குகளும் மோட்டார் வாகன சட்டத்திற்குள் அடங்கிய ஒளிச்செறிவை உமிழக்கூடியதாக இருக்க வேண்டும். ஃபாக் விளக்குகள் இல்லாத வாகனங்களில் புதியதாக ஃபாக் விளக்குகளை பொருத்த விரும்பினால், அதற்கு ஆர்டிஓ-விடம் அனுமதி பெற வேண்டும். உங்கள் வாகனத்திற்கு ஃபாக் விளக்குகள் அவசியம் தானா என சோதித்த பின்னரே ஆர்டிஓ அனுமதியை வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு வாகனங்களின் ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒரு வழிமுறையை இந்திய மோட்டார் வாகன சட்டம் கொண்டுள்ளது. ஆனால் நம்மில் சில பேர் அதையெல்லாம் மதிக்காமல் நம் இஷ்டத்திற்கு வாகனத்தில் புது புது பாகங்களை பொருத்திக் கொண்டு பயன்படுத்தி வருகிறோம். அப்படியென்றால், நாம் எவ்வளவு பெரிய தவறுகளை செய்து வருகிறோம் என நினைத்து பாருங்கள். கேரள அரசு போன்று நம் தமிழ்நாட்டு அரசும் அரசு அதிகாரி வாகனங்களின் ஃபான்சி விளக்குகள் விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








