சென்னையை தொடர்ந்து ஹைதராபாத்தில் செய்யப்பட்ட மாற்றம்... வாகன ஓட்டிகள் வரவேற்பு!
தலைநகர் சென்னையில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை ஹைதராபாத் போலீஸார் பின்பற்ற தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம், சிலவற்றில் சற்று வித்தியசமாக செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், பல நேரங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியான செயல்களை அது செய்து வருகின்றது.
அந்தவகையில், அண்மையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காகவும், விபத்து போன்றவற்றைக் குறைப்பதற்காகவும், ஸ்டாப் லைன் எல்இடி சிக்னல்கள் என்ற புதிய திட்டத்தை அது அறிமுகப்படுத்தியது. இதனை, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் போலீஸாரும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலக சிக்னலில்தான் சோதனையோட்டம் முறையில் இத்திட்டம் முதற்கட்டமாக கொண்டு வரப்பட்டது. இது, வெற்றியடையும்பட்சத்தில் மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் இந்த வசதி மேற்கொள்ளப்பட உள்ளது.

சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் சென்னை போக்குவரத்து போலீஸார், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனடிப்படையிலேயே இந்த புதிய தொழில்நுட்பத்தையும் அவர்கள் கையாண்டர்.

இந்த, ஸ்டாப் எல்இடி சிக்னலானது, 24 மணி நேரமும் ஒளிரும் வகையில் போக்குவரத்து சிக்னலுடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும், சிக்னலில் எந்த நிறத்திலான விளக்கு எரிகிறதோ, அதே வண்ணத்தில்தான் ஸ்டாப் லைன் எல்இடி விளக்கும் எரியும். அதாவது, சிக்னலுக்கு தகுந்தார்போல், சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களை ஸ்டாப் லைனர் எல்இடி மின் விளக்குகள் பிரதிபலிக்கும்.

இதனால், சிக்னலை கவனிக்காமல் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும். மேலும், தற்போது அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கவும் இந்த புதிய தொழில்நுட்பம் உதவும்.

இந்தவகையிலான, எல்இடி மின் விளக்குகளைத்தான் ஹைதராபாத் போலீஸாரும், கேபிஆர் பார்க் சந்திப்பில் பயன்படுத்தியுள்ளனர். இந்த எல்இடி ஸ்டாப் லைனர்கள் வாட்டர்ப்ரூஃப் மற்றும் பூனை கண்களைப் போன்று எதிரொலிக்கும் தன்மைக் கொண்டவையாகும். ஆகையால், மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் இந்த ஸ்டாப் லைனர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதுகுறித்து, கேபிஆர் பார்க் சந்திப்பு பகுதியின் போக்குவரத்துத்துறை காவல் அதிகாரி நர்சிஹ் ராவ் கூறியதாவது, "சோதனையோட்டம் முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இத்திட்டம் வெற்றிப் பெருமேயானால், மாநிலத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் உள்ள சாலைகளிலும் இந்த எல்இடி மின் விளக்கு ஸ்டாப் லைனர்கள் பொருத்தப்படும்" என்றார்.

எல்இடி ஸ்டாப் லைனர்கள், சிக்னல்களைக் காட்டிலும் அதிகம் பயனுள்ளவையாக இருக்கின்றது. ஏனென்றால் தூரத்தில் இருந்து பார்க்கும்போது, சிக்னல்கள் மங்கலாகவும், மரக்கிளைகளுக்கு நடுவே மறைந்து காணப்படலாம். ஆனால், எல்இடி ஸ்டாப் லைனர்கள் அவ்வாறு இல்லாமல் வாகன ஓட்டிகள் எளிதில் கண்டறியக்கூடிய வகையில் இருக்கின்றன.
ஆகையால், இது அவசரமாக வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்க உதவும். எனவே, இந்த புதிய திட்டம் வாகன ஓட்டியில் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமீறலால் நிகழும் விபத்துகள் மற்றும் பின் விளைவுகள் உள்ளிட்டவை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








