நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்... அலட்சியத்தால் வந்த வினை!
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் மரணம் அடைந்த செய்தி ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் மரணம் அடைந்த செய்தி ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக காரில் சென்றபோது அவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார்.

ஹைதராபாத்தில் இருந்து நெல்லூரில் நடக்க இருந்த தனது ரசிகரின் திருமணத்தை நடத்தி வைப்பதற்கா சென்றபோதுதான் அவர் விபத்தில் சிக்கினார். காரை அவரே ஓட்டி வந்திருக்கிறார். அவருடன் இரண்டு நண்பர்கள் பின் இருக்கையில் அமர்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஹரிகிருஷ்ணா விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஹரிகிருஷ்ணா செய்த சில தவறுகளால்தான், அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

விபத்துக்கான காரணங்கள் குறித்து காவல்துறை அதிகாரி பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ஹரிகிருஷ்ணா தனது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சென்றுள்ளார். டிரைவர் இல்லாமல் அவரே ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, அவர் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதுடன், ரசிகரின் திருமணத்திற்கு குறித்த நேரத்தில் செல்வதற்காக காரை வேகமாக ஓட்டியிருக்கிறார். அப்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பர்களிடம் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார்.

தண்ணீர் பாட்டிலை வாங்குவதற்கு சற்றே பின்னோக்கி திரும்பும் வேளையில், கவனக்குறைவு ஏற்பட்டு எதிரே வந்த வளைவை கவனிக்கவில்லை. அந்த சமயத்தில், சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி 15 அடி உயரத்திற்கு அந்தரத்தில் பறந்து சாலையின் மறுபுறத்தில் போய் விழுந்துள்ளது.

அப்போது ஹரிகிருஷ்ணா காரின் வெளியே தூக்கி வீசப்பட்டார். அப்போதுதான் அவருக்கு தலையிலும், மார்பு பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னால் அமர்ந்திருந்த நண்பர்கள் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

இந்த விபத்தில் ஹரிகிருஷ்ணாவின் முதல் தவறாக சீட் பெல்ட் அணியாதது பார்க்கப்படுகிறது. அடுத்து, தாமதமாகிவிட்டதாக கூறி காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றது இரண்டாவது தவறாக மாறி இருக்கிறது. காரின் வேகத்தை குறைத்து, சாலையிலிருந்து கவனம் பிறழாமல் தண்ணீர் பாட்டிலை வாங்கி இருந்தால் இந்த பெரும் விபத்திலிருந்து அவர் தப்பி இருக்கக்கூடும்.

மேலும், சீட் பெல்ட் அணிந்திருந்தால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டது தவிர்க்கப்பட்டு, காயங்களுடன் உயிர் தப்பியிருக்கலாம். சீட் பெல்ட் போடாததால், வெளியே தூக்கி வீசப்பட்டபோது தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

கார் ஓட்டுபவர்களில் சிலர் சீட் பெல்ட் போடுவதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதுபோன்ற விபத்துக்களின்போது, சீட் பெல்ட் போடாதது, எந்தளவு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஹரிகிருஷ்ணாவின் மரணம் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

கார் ஓட்டும்போது ஒரு வினாடி அசந்தாலும் கார் கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்து உண்டு என்பதையும் உணராமல் பலர் இருப்பதை தினசரி பார்க்க முடிகிறது. மியூசிக் சிஸ்டம் இயக்குவது, நேவிகேஷன் சிஸ்டத்தை இயக்குவது, தண்ணீர் குடிப்பது போன்ற விஷயங்களின்போது நிச்சயம் கவனச் சிதறல் ஏற்பட்டு, விபத்துக்கு வழிகோலும் என்பதை மறவாதீர்கள்.

அடுத்து, கட்டுமானத்தில் எத்துனை சிறப்பான காராக இருந்தாலும், அதிவேகத்தில் செல்லும்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணருங்கள். அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் கூட, அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கும்போது அந்த பாதுகாப்பு வசதிகள் பயனற்றதாகவே மாறிவிடும் வாய்ப்புள்ளது.

சீட்பெல்ட் அணியாவிட்டால், ஏர்பேக் இருந்தாலும் பயனற்ற நிலைதான். எனவே, காரை ஓட்டும்போது நிதானமான வேகத்தில், சாலையிலிருந்து கவனம் பிறழாமல் ஓட்டுவதே சாலச் சிறந்தது. இதுபோன்ற மரணங்கள் தவிர்க்கக்கூடிய ஒன்று என்பதை உணர்த்தவே இந்த செய்தி.


Click it and Unblock the Notifications