டோல்கேட் கட்டணம் செலுத்துவதால் இவ்வளவு சேவைகள் கிடைக்குமா? பலருக்கு இந்த மேட்டரே தெரியாது!
இந்தியாவில் பயணம் என்றால் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தாமல் பயணிக்கவே முடியாது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரியைச் செலுத்திய பின்பு தான் நீண்ட தூரப் பயணங்களை எளிதாகச் செய்ய முடியும். இப்படியாக நாம் பல நேரம் சுங்கச்சாவடியில் வரி செலுத்திப் பயணித்திருப்போம்.
பலர் பயணத்திற்காக மட்டும் தான சுங்க கட்டணம் வசூலிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்காக மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பயணத்தின் போது பல சேவைகளை இந்த சுங்கச்சாவடிகள் வழங்கி வருகின்றன. ஆனால் இது குறித்த தகவல் பலருக்குத் தெரிவதில்லை. பலர் இதைச் சரியாகப் பயன்படுத்துமில்லை. இப்படியாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் நமக்குச் சுங்க கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் நன்மை குறித்துக் காணலாம்.

நீங்கள் இப்பொழுது தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்திப் பயணித்துக்கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். திடீரென உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினாலோ அல்லது உங்கள் வாகனத்தில் பயணிக்கும் பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவை என்றாலோ அதை சுங்கச்சாவடிகள் வழங்குகிறது.
ஒவ்வொரு சுங்கச் சாவடிக்கு ஆம்புலன்ஸ் இருக்கிறது. அதைத் தொடர்பு கொள்ள எண் இருக்கிறது. அந்த எண்ணிற்கு போன் செய்து நீங்கள் இருக்கும் இடத்தை தெரிவித்தால் அவர்கள் அங்கு வந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு முதலுதவி செய்வார்கள். தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்கள். இந்த சேவை முற்றிலும் இலவசம்.
தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் வாகனம் நடு ரோட்டில் பழுதாகி நிற்க வாய்ப்பு இருக்கிறது. அப்பொழுது பலருக்கு என்ன செய்வது? ஏது செய்வது? யாரைத் தொடர்பு கொள்வது என்பது தெரியாது. இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் சுங்கச்சாவடிகள் கிரேன் சேவையை வழங்குகிறது.
வாகனம் நடு ரோட்டில் பழுதாகி நின்றாலும் அருகில் உள்ள சுங்கச்சாவடியின் கிரேன் உதவி எண்ணிற்கு போன் செய்து நீங்கள் இருக்கும் இடத்தை கூறினால் அவர்கள் உங்கள் வாகனத்தை டோ செய்ய உதவுவார்கள். உங்களுக்கு மெக்கானிக் தேவை என்றாலும் சுங்கச்சாவடியிலேயே ஒரு கார் மெக்கானிக் நிச்சயம் இருப்பார் அவர் உங்களுக்கு உதவுவார்.
அடுத்தாக தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பலருக்கு ஏற்படும் பிரச்சனை பெட்ரோல் காலியாவது தான். நீங்கள் மேப்பை பார்த்துக் குறிப்பிட்ட இடத்தில் பெட்ரோல் பங்க் இருப்பதை நினைத்துச் சென்று பார்த்தால் ஏமாற்றம் மிஞ்சும் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பெட்ரோல் இல்லாமல் வாகனம் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
உடனடியாக யோசிக்காமல் சுங்கச்சாவடிக்கு போன் செய்தால் அவர்கள் நீங்கள் நிற்கும் இடத்திற்கே வந்து பெட்ரோலை டெலிவரி செய்யும் சேவையையும் செய்து வருகின்றனர். இதனால் பெட்ரோல் இல்லாமல் வாகனம் நின்று விட்டதே என வருத்தப்பட வேண்டாம். இந்த சேவையைப் பயன்படுத்த நீங்கள் பெட்ரோலுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்.
இறுதியாக இருக்கும் ஒரு வசதி டாய்லெட் வசதி, பலர் இதை தற்போது பயன்படுத்தித் தான் வருகின்றனர். ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் நிச்சயம் கழிப்பறை வசதி இருக்கும். அதை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலே சொன்ன சேவைகளைப் பெற அருகில் உள்ள சுங்கச்சாவடி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த எண் ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் மாறுபடும்.
இதனால் நீங்கள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் போது இந்த போன் நம்பர் அடங்கிய பலகை இருக்கும் அதை உங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது ஆன்லைனில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சுங்கச்சாவடியைத் தேடி அவர்களது தொடர்பு எண்ணை எடுத்து தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கே சேவை தேடி வரும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








