வீல் சேரில் இருப்பவர்களுக்கு விமான பயணம் சாத்தியமா? மாற்றுத் திறனாளிக்கு விமான நிலையங்களில் இருக்கும் வசதிகள்
விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிக்கச் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்

நாம் எல்லோரும் விமானம் பயணம் செய்யும் போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை சோதனையைக் கடந்து செல்வது தான். விமானத்தில் பயணிக்கும் நேரத்தை விட விமான நிலையத்தில் சோதனை செய்யும் நேரமும் அதிகமாக இருக்கும். உதாரணமாகச் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு விமான பயண நேரம் வெறும் 50 நிமிடங்கள் தான் ஆனால் அதற்காக விமான நிலையத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக வரவேண்டும் எனச் சொல்லுவார்கள்.

முதன் முறையாக விமானத்தில் பயணிப்பவர்களுக்குப் பாதுகாப்பு சோதனை என்பதே பெரிய தலைவலியாக இருக்கும். இப்படியான சோதனையை இவர்கள் வேறு எங்கும் சந்தித்திருக்க மாட்டார்கள். சோதனையில் போது கையில் எந்த வித எலெக்டானிக் சாதனங்களும் இருக்கக்கூடாது பெல்ட் அணிந்திருக்கக் கூடாது, இந்த சாதனங்களைத் தனியாக ஸ்கேன் செய்ய வேண்டும். நம்மைத் தனியாக ஒருவர் பரிசோதனை செய்வார்கள். இவ்வாறு சோதனை செய்யும் போது சோதனை செய்பவருக்குத் திருப்தி ஆகும் வரை சோதனை செய்வார்.

இந்த சோதனைகளில் சாதாரண மனிதர்களே திண்டாடும் போது மாற்றத் திறனாளிகளுக்கு இந்த சோதனை பெரும் சவால் தான் இந்நிலையில் இந்த செய்தியில் நாம் மாற்றுத் திறனாளிகள் விமானங்களில் பயணிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதைச் சமாளிக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் காணப்போகிறோம்.

பொதுவாக விமான நிலையங்கள் கட்டமைக்கப்படும் போதே மாற்றுத் திறனாளிகள் வீல்சேரை பயன்படுத்தும் விதத்தில் கட்டமைக்கப்படும். குறிப்பாக ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குப் படி மூலம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தால் லிஃப்ட் வசதி கண்டிப்பாக இருக்கும். அதே போல ஓரிரு படிகள் கொண்ட இடங்களில் ரேம்ப் வசதி கட்டாயம் செய்யப்பட்டிருக்கும் விமான நிலையில் வாசலிருந்து விமானத்திற்குள் ஒரு நபர் ஏறும் வரை அவர் வீல்சேரை பயன்படுத்தலாம்.

சில நேரங்களில் விமானங்களுக்கு விமான நிலையங்களுக்குள் பஸ்சில் சென்று அங்கிருந்து ஏற வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்பொழுது அந்த பஸ்சில் ஏறி இறங்கவும் விமானத்தில் ஏறி இறங்கவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அதே நேரத்தில் விமான நிலையத்திற்கு வீல் சேரில் வருபவர்கள் தங்கள் வீல் சேரை தங்கள் லக்கேஜ் உடன் போட்டு விட வேண்டும் அதற்கு மாற்றாக வேறு ஒரு வீல் சேர் விமான நிலையத்தில் வழங்கப்படும்.

அந்த வீல் சேரை மாற்றுத் திறனாளி விமானத்தில் ஏறி சீட்டில் அமரும் வரை பயன்படுத்த முடியும். பின்னர் விமானம் சென்று இறங்கும் இடத்திலும் இவருக்கு ஒரு வீல் சேர் தயார் செய்யப்படும். பின்னர் லக்கேஜ்ஜில் உள்ள வீல்சேரை எடுத்து அதில் இவர் மாறும் வகை இந்த வீல் சேரை பயன்படுத்தலாம். சோதனை கட்டத்தில் விமான நிலைய வீல் சேரும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

அடுத்ததாகச் செயற்கை கால் அல்லது கை பொருத்தப்பட்ட நபர்கள் விமான நிலையங்களில் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை பாதுகாப்பு சோதனையின் போது தான் விமான நிலையத்தில் சோதனை செய்பவர்கள் குறிப்பிட்ட நபரின் செயற்கை கால் அல்லது கைக்குள் ஏதாவது பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சோதனை செய்ய அதிகாரம் உள்ளது.

ஆனால் அவ்வாறான சோதனை செய்யும் போது அந்த இடத்தில் ஒரு மறை வான இடத்தில் குறிப்பிட்ட மாற்றுத் திறனாளியை அமர்ந்து கொள்ளவோ அல்லது படுத்துக்கொள்ளவோ ஏற்பாடு செய்து அவருடன் வந்துள்ள உதவியாளர்கள் உதவியுடன் செயற்கை கால், கை போன்ற மற்ற பாகங்களைக் கழட்டி சோதனை செய்து திரும்ப மாட்டவும் உதவி செய்ய வேண்டும் என்பது பாதுகாப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட செயற்கை கால் அல்லது கைகளை சோதனையாளர்கள் சாதாரணமாகவும் தேவைப்பட்டால் எக்ஸ்ரே சோதனை செய்யவும் அனுமதியுள்ளது. இந்த செயற்கை கால் கைகளைக் கழட்டி சோதனை செய்யும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வண்ணம் பாதுகாவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போகக் காதுகேட்கும், கருவி, முதுகெலும்பிற்குப் பயன்படுத்தப்படும் கருவி, போன்ற எலெக்ட்ரானிக் கருவியை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தினால் அவர்களும் பாதுகாப்ப சோதனையில் அசௌகரியங்கள் ஏற்படலாம் அவ்வாறான கருவிகளையும் எக்ஸ்ரேவில் ஸ்கேன் செய்ய அனுமதியுண்டு அந்த நேரங்களில் மாற்றுத்திறனாளிகளின் தன்மையை அறிந்த அவர்களின் குறிப்பிட்ட கருவியை நீக்கினால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தையும் உணர்ந்து பாதுகாவலர்கள் அதற்கு மாற்ற ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் பாதுகாப்பு சோதனைகளை நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

இது போல விமானங்களில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் போது அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஏதாவது செய்ய வேண்டும் எனச் சொன்னால் உதாரணத்திற்கு வீல்சேர் போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும் எனப் பயணிகள் விரும்பினால் அவர்கள் விமான நிறுவனத்திடம் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும். விமான நிலையத்தில் குறிப்பிட்ட நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அவை உதவியாக இருக்கும். இறுதி நேரத்தில் இது குறித்துத் தெரியப்படுத்தினால் இதனால் காலதாமதம் ஏற்பட்டு விமானத்தில் பயணிக்கமுடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம்

ஒருவர் படுத்த படுக்கையாகவே இருக்கிறார். அவரால் எழுந்திருக்கவே முடியாது என்றால் அவரை விமானத்தில் அழைத்துச் செல்லவும் வசதிகள் இருக்கிறது. ஆனால் எல்லா விமானங்களிலும் அந்த வசதி கிடையாது. அதற்காக முன்னரே விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு இது குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான தனி விதிமுறைகள் இருக்கிறது. அதைப் பின்பற்றி டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

சாதாரணமாக விமானங்களில் பயணிக்கும் நமக்கு மாற்றுத்திறனாளிகள் விமான பயணம் எப்படி இருக்கும் என்பது குறித்து பெரிதாகத் தெரிந்திருக்காது. இந்த தகவல் உங்களுக்குப் புதிதாகத் தெரிந்திருக்கலாம். அல்லது ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்குப் பகிர்ந்தால் மற்றவர்களும் இதன் மூலம் பயன்கிடைக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்


Click it and Unblock the Notifications








